பாலு மகேந்திரா
பாலு மகேந்திரா (Balu Mahendra, 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
பாலு மகேந்திரா | |
---|---|
பிறப்பு | பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் மே 20, 1939 மட்டக்களப்பு, இலங்கை |
இறப்பு | பெப்ரவரி 13, 2014 74) சென்னை, இந்தியா | (அகவை
இருப்பிடம் | சென்னை, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், தயாரிப்பாளர் |
பிறப்பு
1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 ல் தங்கப்பதக்கம் பெற்றார்.
முதல் தாக்கம்
தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்(Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகின்றது.[1]
திரைப்பட நுழைவு
அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972ல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977ல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சின்னத்திரையில் பாலு மகேந்திரா
கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக்காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார்.இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும்.[2]
நுண்ணுணர்வும் படைப்பாற்றலும்
பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கும்.ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது."[3].
விருதுகளும் பாராட்டுக்களும்
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார்.
தேசிய திரைப்பட விருதுகள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | துறை |
---|---|---|---|
1978 | கோகிலா | கன்னடம் | ஒளிப்பதிவு |
1983 | மூன்றாம் பிறை | தமிழ் | ஒளிப்பதிவு |
1988 | வீடு | தமிழ் | இயக்கம் |
1990 | சந்தியா ராகம் | தமிழ் | இயக்கம் |
1992 | வண்ண வண்ண பூக்கள் | தமிழ் | இயக்கம் |
மாநில அரசு விருதுகள்
ஆண்டு | திரைப்படம் | மாநில அரசு | துறை |
---|---|---|---|
1974 | நெல்லு | கேரளம் | ஒளிப்பதிவு |
1975 | பிரயாணம் | கேரளம் | ஒளிப்பதிவு |
1977 | கோகிலா | கர்நாடகம் | திரைக்கதை |
பிலிம்பேர் விருதுகள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | துறை |
---|---|---|---|
1983 | மூன்றாம் பிறை | தமிழ் | இயக்கம் |
1983 | ஓலங்கள் | மலையாளம் | இயக்கம் |
1988 | வீடு | தமிழ் | இயக்கம் |
நந்தி விருதுகள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | துறை |
---|---|---|---|
1978 | மனவூரி பண்டவலு | தெலுங்கு | ஒளிப்பதிவு |
1982 | நீர்க்காசனா | தெலுங்கு | ஒளிப்பதிவு |
பாராட்டாக கிடைத்த காட்சிக் காணி
பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார்.[4]
இயக்குனரான உதவியாளர்கள்
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.சீனுராமசாமி, ராம், வெற்றி மாறன், சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது.
உந்தப்பட்டவர்கள்
சந்தோஷ் சிவன்[5], ரவி கே.சந்திரன்[6] ஆகியோர் இவரால் உந்தப்பட்ட சில பிரபல ஒளிப்பதிவாளர்களாகும்.
இயக்கிய திரைப்படங்கள்
- கோகிலா
- அழியாத கோலங்கள்
- மூடுபனி
- மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
- ஓலங்கள் (மலையாளம்)
- நீரக்ஷ்னா (தெலுங்கு)
- சத்மா (ஹிந்தி)
- ஊமை குயில்
- மூன்றாம் பிறை
- நீங்கள் கேட்டவை
- உன் கண்ணில் நீர் வழிந்தால்
- யாத்ரா
- ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
- ரெட்டை வால் குருவி
- வீடு
- சந்தியாராகம்
- வண்ண வண்ண பூக்கள்
- பூந்தேன் அருவி சுவன்னு
- சக்ர வியூகம்
- மறுபடியும்
- சதி லீலாவதி
- அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
- ராமன் அப்துல்லா
- என் இனிய பொன் நிலாவே
- ஜூலி கணபதி
- அது ஒரு கனாக்காலம்
- தலைமுறைகள்
துணுக்குகள்
- பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர்.
- இவர் புனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார். சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார்.
மேற்கோள்கள்
- http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yWSj9HoG_a0#t=160
- http://kirukkal.com/2006/07/balu-mahendras-kathai-neram/
- http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5kStXpK8B28#t=408
- http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yWSj9HoG_a0#t=218
- http://www.outlookindia.com/article.aspx?281021
- http://www.behindwoods.com/features/Interviews/interview-5/cinematographer/ravi-k-chandran.html
- "திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா இன்று காலமானார்". தினமணி. பார்த்த நாள் 13-2-2014.
- "Master craftsman who was also a great teacher". The Hindu. பார்த்த நாள் 14-2-2014.
வெளி இணைப்புகள்
- பாலு மகேந்திரா - சர்வதேச திரைப்பட தரவுத்தளம்
- "கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகேந்திரா" பிபிசி தமிழோசை
- தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு அழைத்து சென்ற பாலுமகேந்திரா காலமானார் - கமல், பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி!! தினமலர்
- பாலுமகேந்திரா மறைவு: கவிஞர் வைரமுத்து இரங்கல் தினமணி
- ‘Cinematography has changed, so also the way films are made’
- In a first, Balu Mahendra faces the camera
- ஒளிப்படங்களின் தொகுப்பு
- Naturalism was his signature - ஒரு அஞ்சலிக் கட்டுரை