தொல். திருமாவளவன்

முனைவர் தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகத்து 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது.

முனைவர் தொல். திருமாவளவன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
முன்னவர் எம். சந்திரகாசி
தொகுதி சிதம்பரம்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
31 சூலை 2009  17 மே 2014
முன்னவர் எ. பொன்னுச்சாமி
பின்வந்தவர் எம். சந்திரகாசி
தொகுதி சிதம்பரம்
தனிநபர் தகவல்
பிறப்பு 17 ஆகத்து 1962 (1962-08-17)
அங்கனூர், செந்துறை, அரியலூர், தமிழ்நாடு
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு

அரசியல் வாழ்வு

தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டபோது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல். திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த அமைப்பின் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார்.[1]

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் நாள் தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.[1]

இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

இவர் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே சிதம்பரம் தொகுதியில்,திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளரான சந்திரகாசியிடம் தோல்வியடைந்தார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.இத்தேர்தலில் திருமாவளவன் அவர்கள் 5,00,229 வாக்குகள் பெற்று (அதிமுக வேட்பாளரை விட 3219 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றார்.

அரசியல் கொள்கை

தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.

படைப்புகள்

சாதீய அடக்குமுறையினை எதிர்த்தல், ஈழ விடுதலை ஆதரவு, இந்துத்துவ கருத்துகளை எதிர்த்தல் போன்ற கொள்கையினை வலியுறுத்தும் விதமாக முனைவர் திருமாவளவன் பல கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:

  • அத்துமீறு
  • தமிழர்கள் இந்துக்களா?
  • ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம்
  • இந்துத்துவத்தினை வேரறுப்போம்
  • அமைப்பாய் திரள்வோம்

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நூல்கள்

  • முள்வலி
  • அமைப்பாய்த் திரள்வோம்
  • கருத்தியலும் நடைமுறையும் (கட்டுரைத் தொகுப்பு)

திரைப்படங்கள்

திருமாவளவன் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் அன்புத்தோழி ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.[4] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.