தமிழர் சமயம்

தனிமனிதனைக் கடந்து உணர்த்தி நிற்கும் அண்டத்தை அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே சமயம் ஆகும். '"சமயம்" என்பது வாழ்வின் பல்வகைச் சூழ்நிலைக்கும், ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு நிலைக்கும் ஏற்ப மனிதன் தன் நடத்தையை அமைத்துக்கொள்ள உதவியாய் அமைந்த ஒரு கருதுகோள்.[1] எல்லாத் தமிழரும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்தவர்கள் அல்லர். தமிழர்களின் சமயம் நோக்கிய அணுகுமுறையை, சிந்தனைகளை, நடைமுறைப் போக்குகளை, வரலாற்றை தமிழர் சமயம் என்ற இக்கட்டுரை விளக்க முயலும்.

தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அரசியல்வாதிகள் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை பின்பற்றியதற்கு ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன. பௌத்தம், ஜைனம், இந்து (சைவம், வைணவம், சாக்தம்), இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். முருகன், ஐயனார், கண்ணகி, பன்றி வீரன் போன்ற "சிறுதெய்வ" வழிபாடும் தமிழர்களிடம் பரவி இருக்கின்றது. நாயன்மார்கள் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளை பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றிச் சிறப்புற்றவையே.

இன்று திருக்குறளை பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை (Agnosticism), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.

தமிழர் சமய வரலாறு

20ம் நூற்றாண்டு - பெரியாரின் உலகாயதம்

பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கமும் திராவிடக் கழகமும் தமிழர்களின் சமயக் கொள்கைகளை தீர்மானித்த காரணிகளில் முக்கிய பங்கு வகித்தன; வகிக்கின்றன. பெரியாரின் சயம நோக்கை சோ. ந. கந்தசாமி இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்று ஆய்வு நூலில் பின்வருமாறு விளக்குகின்றார்.[2]

மரபுவழிப்பட்ட உலகாயதர் கூறியவற்றுள் இம்மை, மறுமை, பிறவிச் சுழற்சி என்பன இல்லை என்ற கருத்தைப் பெரியார் ஏற்றுக்கொண்டார். புரோகிதரின் புரட்டுக்களையும் உடன்படவில்லை. கடவுள் இல்லை என்று தான் உலகாயதர் கூறினர். எனின், மூன்றுபடி மேலே சென்று "கடவுள் இல்லை, இல்லவே இல்லை; கடவுளைப் படைத்தவன் முட்டாள்; கடவுளை வணங்குபவன் சர்வமுட்டாள்" என்று முழங்கினார். இங்ஙனம் ஆத்திரம் அடைந்து உள்ளம் கொதித்துப் பேசியதற்குக் காரணம் உண்டு. கடவுள் பெயரினால் செய்யப்படும் பாதகங்களை அவர் ஏற்க விரும்பவில்லை. மூடப்பழக்க வழக்கங்கள், நாள், நட்சத்திரம், இராகுகாலம் பார்த்தல், கண்மூடித்தனமாக எதையும் நம்புதல், பொருளற்ற சடங்குகள், சமுதாய அநீதிகள், வருணக் கோட்பாடு, ஏற்றத்தாழ்வுகள் என்பன முன்னேற்றப் பாதையின் தடைகள் (Impediments) என்றும், இவையாவும் சமயத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் நடைபெறுவதால் சமயமும் கடவுளும் தேவையில்லை என்றும் இதே காரணத்தினால் இதிகாச புராணங்கள் வேதாகமங்களும் விலக்கத்தக்கவை என்றும் கூறினார். அறவழிப்பட்ட சினத்தினால் (Righteous anger) கடவுள் இல்லை என்பதைத் தாரக மந்திரமாக ஒலித்தார்...பெரியார் ஒழுக்கத்தை பெரிதும் வலியுறுத்தினார்.

Tamils Secular Spirituality

மேற்கோள்கள்

  1. "ஹேபல்"
  2. சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். பக்கங்கள் 96-97.

ஆதாரம்

  • ஆ. வேலுப்பிள்ளை. (1985). தமிழர் சமய வரலாறு. சென்னை: பாரி புத்தகப்பண்ணை.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.