டொலுய்
டொலுய், (Tolui, ᠲᠥᠯᠦᠢ டொலுய், டுலுயி, மொங்கோலியம்: Тулуй хаан, , டொலுய் கான் (1191–1232) செங்கிஸ் கான் மற்றும் போர்டேயின் நான்காவது மகன் ஆவார். 1227ல் இவரது தந்தை இறந்தபோது டொலுயின் உளூஸ் அல்லது மரபுவழி பிராந்தியமானது மங்கோலியத் தாயகத்தைக் கொண்டிருந்தது, மற்றும் ஒகோடி பெரிய கானாக பதவியேற்கும்வரை ஒரு நிர்வாகியாக டொலுய் பணியாற்றினார். டொலுய் அதற்கு முன் சின், சியா மற்றும் குவாரசமிய யுத்தங்களில் சிறப்பாகப் பங்கெடுத்தார், மேலும் மெர்வ் மற்றும் நிசாபூர் நகரங்களைக் கைப்பற்றுவதில் முக்கியப் பங்காற்றினார். இவரே மங்கோலியா மற்றும் இல்கான் பேரரசர்கள் பெரும்பாலானோரின் நேரடி மூதாதையர் ஆவார்.
டொலுய் கான் | |
---|---|
![]() | |
ரசித்-அல்-தின் ஹமதானியால் வரையப்பட்ட டொலுய் கானின் வரைபடம், 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம். | |
ஆட்சிக்காலம் | 25 ஆகத்து 1227 – 13 செப்டம்பர் 1229 |
முன்னையவர் | செங்கிஸ் கான் |
பின்னையவர் | ஒகோடி கான் சோர்காக்டனி டொலுயியிக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்குத் தலைவியாவார் |
வாழ்க்கைத் துணை | சோர்காக்டனி பெகி சருக் கதுன் லிங்குன் கதுன் நயன் கதுன் டொகுஸ் கதுன் |
வாரிசு | |
மோங்கே கான் (1209–1259) குப்லாய் கான் (1215–1294) ஹுலாகு கான் (1217–1265) ஆரிக் போகே (1219–1266) | |
முழுப்பெயர் | |
கொடுக்கப்பட்ட பெயர்: டொலுய் (Тулуй) | |
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர் | |
பேரரசர் ரென்செங் ஜிங்சியாங் (仁圣景襄皇帝, இறப்பிற்குப் பிறகு 1266ல் கொடுக்கப்பட்டது) | |
கோயிலில் சூட்டப்பட்ட பெயர் | |
ருயிசோங் (睿宗, இறப்பிற்குப் பிறகு 1266ல் கொடுக்கப்பட்டது) | |
குடும்பம் | போர்சிசின் |
தந்தை | செங்கிஸ் கான் |
தாய் | போர்டே உஜின் |
பிறப்பு | 1191 |
இறப்பு | 1232 (அகவை 40–41) மங்கோலியா |
சமயம் | தெங்கிரி மதம் |
டொலுய், ககான் என்ற பட்டத்தை தனக்காக என்றுமே பயன்படுத்திக் கொண்டது இல்லை; செங்கிஸ்கானோ அல்லது அவரது பின் வந்த மங்கோலியப் பேரரசின் மூன்று கான்களோ தெற்கிலிருந்த அண்டை நாட்டு சீன அரசமரபுகளைப் போல் இராஜ பட்டங்களை என்றுமே பயன்படுத்திக் கொண்டது இல்லை. டொலுய்க்கு ககான் என்ற பட்டம் இவரது மகன் மோங்கேயால் வழங்கப்பட்டது. இவருக்கு கோயில் பெயரை (சீனம்: 元睿宗; பின்யின்: யுவான் ருயிசோங்; வேட்–கில்சு: ஜுயி-ட்சுங்) சில தசாப்தங்களுக்கு பிறகு யுவான் அரசமரபை நிறுவிய இவரது மற்றொரு மகனான குப்லாய் வழங்கினார்.
வாழ்க்கை
இளமை
செங்கிஸ்கான் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த போது போரில் ஈடுபட இயலாத அளவிற்கு டொலுய் மிகவும் இளையவராக இருந்தார். இவருக்கு ஐந்து வயதாகிய பொழுது ஒரு தாதரால் இவர் கிட்டத்தட்ட கொல்லப்பட்டார். இவரை இவரது சகோதரி அல்டனி மற்றும் செங்கிஸ்கானின் இரண்டு கூட்டாளிகள் காப்பாற்றினர்.[1] 1203 இல் இவரது தந்தை இவருக்கு சோர்காக்டனியை மணம் முடித்து வைத்தார். சோர்காக்டனி ஓங் கானின் (டொலுயின் தாத்தா எசுகெயின் நண்பர்) சகோதரரின் மகளாவார். 1209 இல் இவர்களின் முதல் மகன் மோங்கே பிறந்தார்.
ஆரம்ப காலம்
இவர் முதன்முதலில் 1213 இல் சின் அரச மரபுக்கு எதிரான யுத்தத்தில் களமிறங்கினார். டெக்சிங் கோட்டை மதில் சுவரில் தனது மைத்துனன் சிகுவுடன் இணைந்து ஏறினர்.
1221 இல் செங்கிஸ்கான் இவரை ஈரானின் குராசான் பகுதிக்கு அனுப்பினார். அப்பகுதியில் இருந்த நகரங்கள் பல முறை கிளர்ச்சியில் ஈடுபட்டன. நவம்பர் 1220 இல் நிசாபூரின் படைவீரர்கள் டொலுயின் மைத்துனன் தோகுசரை கொன்றனர். டொலுயின் ராணுவம் நிசாபூர் மக்களை சமவெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்றது. நிசாபூர் மற்றும் மெர்வ் நகர மக்களை மொத்தமாக படுகொலை செய்ய இவர் ஆணையிட்டார்.[2]
செங்கிஸ்கானுக்கு பின் அடுத்த கான்
தனக்குப் பிறகு அடுத்த கான் யாரென செங்கிஸ்கான் முடிவு செய்ய நினைத்தபோது தனது நான்கு மகன்களில் ஒருவரை தேர்வு செய்வதில் அவருக்கு பிரச்சினை இருந்தது. டொலுய்க்கு சிறந்த ராணுவ திறமைகள் இருந்தன. ஒரு தளபதியாகவும் அவர் பல வெற்றிகளைப் பெற்று இருந்தார். ஆனால் செங்கிஸ்கான் ஒகோடியை தேர்ந்தெடுத்தார். ஒகோடி அரசியல் ரீதியாக திறமைசாலியாக இருந்தார். ஒரு திறமையான தலைவனாக இருப்பதில் டொலுய் தேவையற்ற அளவுக்கு அதிக எச்சரிக்கையுடன் செயல்படுவார் என செங்கிஸ்கான் நினைத்தார். 1227 இல் மேற்கு சியாவிற்கு எதிரான படையெடுப்பில் டொலுய் தனது தந்தையுடன் கலந்து கொண்டார்.
செங்கிஸ்கானின் இறப்பிற்குப் பிறகு டொலுய் மங்கோலியப் பேரரசை இரண்டு வருடங்களுக்கு பொதுவான மேற்பார்வையாளராக கவனித்துக் கொண்டார். மங்கோலிய உயர்குடியினர் இச்செயலை ஏற்றுக் கொண்டனர். ஏனெனில் மங்கோலிய பாரம்பரியப்படி கடைசி மகன் தனது தந்தையின் சொத்துக்களை பெற்றார். மற்றொரு காரணம், அந்நேரத்தில் மத்திய மங்கோலியாவில் மிகப்பெரிய மற்றும் மிக சக்தி வாய்ந்த ராணுவத்தை டொலுய் கொண்டிருந்தார். அடுத்த ககானை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதை டொலுய் ஆதரித்தார். அடுத்த ககானாக ஒகோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தனது தந்தையின் விருப்பத்தை டொலுய் நிறைவேற்றினார்.
டொலுய், ஒகோடியுடன் வடக்கு சீனாவில் படையெடுப்பை நடத்தினர். 1231–32 இல் உத்தியியலாளர் மற்றும் கள தளபதியாக டொலுய் பணியாற்றினார். சின் தலைநகரான கைஃபேங்கை முற்றுகையிட இரண்டு ராணுவங்கள் அனுப்பப்பட்டன. சின் அரசின் பெரும்பாலான பாதுகாப்புகளை தகர்த்த பின்னர் அவர்கள் வடக்கு பகுதிக்கு திரும்பினர்.[3]
இறப்பு
மங்கோலியர்களின் ரகசிய வரலாற்றின்படி சீனாவில் நடந்த ஒரு படையெடுப்பின்போது ஒகோடியை ஒரு மிக கடினமான உடல் நலக்குறைவில் இருந்து குணப்படுத்த டொலுய் தன்னைத் தியாகம் செய்தார். ஒகோடியின் உடல்நலக் குறைவுக்கு காரணம், சீனாவின் பூமி மற்றும் நீர் ஆவிகள் என ஷாமன்கள் கூறினர். தங்களது மக்கள் விரட்டப்படுவதாலும் மற்றும் தங்கள் நிலப்பகுதி அழிக்கப்படுவதாலும் அந்த ஆவிகள் வருத்தம் அடைந்திருந்தன என அவர்கள் கூறினர். நிலம், விலங்குகள் மற்றும் மக்களை காணிக்கையாக அளித்த பொழுது ஒகோடியின் உடல்நலக்குறைவு மீண்டும் அதிகமானது. ஆனால் ஒரு குடும்ப உறுப்பினரை அவர்கள் தியாகம் செய்த போது ஒகோடி உடல்நலக் குறைவில் இருந்து உடனடியாக மீண்டார். டொலுய் தானாக ஒப்புக்கொண்டு ஒரு சபிக்கப்பட்ட பானத்தை நேரடியாக குடித்த பிறகு இறந்தார். ஆனால் அடா-மாலிக் ஜூவைனி, குடிப்பழக்கத்தால் டொலுய் இறந்தார் என கூறுகிறார்.[4]
மரபு
மங்கோலியப் பேரரசின் விதியை அமைத்ததில் டொலுயை விட டொலுயின் வழித்தோன்றல்கள் எனப்படும் இவரது குடும்பத்தின் பங்கு முக்கியமானது. டொலுய்க்கும் அவரது நெசுத்தோரிய கிறித்தவ மனைவி சோர்காக்டனி பெகிக்கும் மோங்கே, குப்லாய், ஆரிக் போகே மற்றும் ஹுலாகு ஆகியோர் மகன்களாக பிறந்தனர். இதில் முதல் மூவர் மங்கோலியப் பேரரசின் கான் பட்டத்திற்கு போட்டியிட்டனர். ஹுலாகு இல்கானேடு அரச வம்சத்தையும் மற்றும் குப்லாய் சீனாவின் யுவான் அரசமரபையும் தோற்றுவித்தனர். டொலுயின் மகன்களான குப்லாய் மற்றும் ஆரிக் போகே இடையிலான சண்டையானது மங்கோலியப் பேரரசின் சக்தியை குறைத்தது மற்றும் 1260 மற்றும் 1264 இல் மேற்கு கானேடுகள் ஒன்றுடன் ஒன்று போரிட்ட டொலுய் வழித்தோன்றல்களின் உள்நாட்டுப் போருக்கு காரணமானது.
ஒகோடி மற்றும் குயுக் ஆகியோரின் இறப்பிற்கு பின்னாலான பிரதிநிதித்துவ காலங்களில் டொலுயின் வழித்தோன்றல்கள், ஒகோடி மற்றும் சூச்சியின் மகன்கள் ஆகியோருக்கு இடையேயான போட்டியானது மங்கோலிய பேரரசில் வளர்ச்சியற்ற தன்மை மற்றும் சண்டையை உருவாக்கியது. 1252ல் ககான் என்ற பட்டத்தை டொலுயின் இறப்பிற்குப் பிறகு மோங்கே வழங்கினார்.[5] 1271 இல் யுவான் அரசமரபை குப்லாய் கான் தோற்றுவித்த போது அவர் தனது தந்தை டொலுயின் பெயரை அலுவல் பதிவுகளில் ருயிசோங் என பதிவிட்டார். டொலுயின் வழித்தோன்றல்கள் மங்கோலியா மற்றும் தெற்கு மங்கோலியாவை 1251 முதல் 1635 வரையிலும், மங்கோலியாவை 1691 வரையிலும் ஆண்டனர்.
செங்கிஸ்கான் தவிர டொலுய் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உள்மங்கோலியாவில் சீன பொதுவுடைமைவாதிகளால் 1950களில் கட்டப்பட்ட செங்கிஸ்கான் கல்லறையில் கௌரவப்படுத்தப்பட்டனர்.
குடும்பம்
லிங்குன் கதுன் உட்பட டொலுய்க்கு பல துணைவிகள் மற்றும் மனைவிகள் இருந்தனர்.[6] ஆனால் டொலுயின் முதன்மை மனைவி சோர்காக்டனி பெகி ஆவார். இவரே டொலுயின் நான்கு ஆட்சி செய்த மகன்களுக்கும் அன்னை ஆவார்.
டொலுயின் மகன்கள் பின்வருமாறு:
- மோங்கே, மங்கோலியப் பேரரசின் பெரிய கான்.
- குதுக்து
- குப்லாய், மங்கோலியர்களின் பெரிய கான் மற்றும் யுவான் அரசமரபின் பேரரசர்.
- ஹுலாகு, மங்கோலிய பாரசீகத்தின் முதல் இல்கான்.
- ஆரிக் போகே, ககான் பதவிக்கு போட்டியிட்ட இவரை மங்கோலிய பாரம்பரியவாதிகள் குப்லாய்க்கு எதிராக ஆதரித்தனர்.
- புஜேக். இவர் ஆரம்பத்திலேயே இறந்துவிட்டார். 1236–41 இல் மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பு மற்றும் 1250 இல் மோங்கேயின் தேர்வு ஆகியவற்றில் இவரது பங்கை தவிர இவரைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை.
- முகா
- சதுக்தை
- சபுக்தை
பரம்பரை
ஓவலுன் | எசுகெய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
போர்ட்டே | தெமுசின் (செங்கிஸ் கான்) | கசர் | கச்சியுன் | தெமுகே | பெலகுதை | பெக்தர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூச்சி | சகதை | ஒகோடி | டொலுய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உசாத்துணை
- The secret history of the Mongols
- William Bayne Fisher, John Andrew Boyle, Ilya Gershevitch, Ehsan Yar The Cambridge History of Iran, p.313
- Mote, Frederick W. Imperial China 900-1800, p.447
- Kahn, Paul; Cleaves, Francis Woodman. The Secret History of the Mongols, p.xxvi
- Weatherford, Jack. Genghis Khan and the making of the modern world, p.169
- F.,, Broadbridge, Anne. Women and the making of the Mongol Empire. Cambridge. பக். 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781108424899. இணையக் கணினி நூலக மையம்:1022078179. https://www.worldcat.org/oclc/1022078179.