குப்லாய் கான்

குப்லாய் கான் (மங்கோலியன்: Хубилай хаан, Xubilaĭ xaan; செப்டம்பர் 23, 1215 – பிப்ரவரி 18, 1294),[1][2] சிச்சு (சீனம்: 元世祖; பின்யின்: Yuán Shìzǔ; வேடு-கில்சு: Yüan Shih-tsu), என்ற கோயிலில் சூட்டப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது பெருமைக்குரிய கான் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பிரிவாகிய யுவான் அரசமரபை தோற்றுவித்து 1260 முதல்1294 வரை ஆண்டார்.

குப்லாய் கான்
மங்கோலியப் பேரரசின் கான்
யுவான் அரசமரபை தோற்றுவித்தவர்
சீனாவின் பேரரசர்

யுவான் ஆட்சிகாலத்தைய குப்லாய் கானின் ஓவியம்
ஆட்சிக்காலம் மே 5, 1260 – பிப்ரவரி 18, 1294
முடிசூடல் மே 5, 1260
முன்னையவர் மாங்கி கான்
பின்னையவர் துமுர் கான்
Consort தெகுலென் Tegulen, Chabi, Nambui
முழுப்பெயர்
மங்கோலியன்: Хубилай Сэцэн хаан
சீனம்: 忽必烈
செட்சென் கான் (Цэцэн хаан)
ஊழிப் நாட்கள்
சோங்டங் Zhongtong (中統) 1260–1264
சியுவான் Zhiyuan (至元) 1264–1294
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
செங்டே செகோங் வெம்வு பேரரசர்
(聖德神功文武皇帝)
கோயிலில் சூட்டப்பட்ட பெயர்
சிச்சு (世祖)
குடும்பம் யுவான்
தந்தை டொல்சி
தாய் சொர்காக்டனி பெகி
பிறப்பு செப்டம்பர் 23, 1215
இறப்பு பிப்ரவரி 18, 1294 (aged 78)
தாடு (தற்கால பெய்ஜிங்)
அடக்கம் Burkhan Khaldun, Khentii Province

குப்லாய் கான் செங்கிசு கானின் பேரன் ஆவார். குப்லாய் கானின் தந்தை டொல்சி செங்கிஸ் கானின் நான்கு மகன்களில் இளையவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் மாங்கி கானுக்கு அடுத்து, குப்லாய் புதிய கானாக 1260ல் பதவிக்கு வந்தார். மாங்கி கானுக்கு பின் இவரின் இளைய சகோதரர் ஆரிக் புகாவுக்கும் இவருக்கும் பதவிச் சண்டை 1264ம் ஆண்டு ஆரிக் புகா தோற்கும் வரை நீடித்தது. இச்சண்டை மங்கோலியப் பேரரசில் ஒற்றுமையின்மையைக் காட்டும் தொடக்கமாகக் கருதப்பட்டது [3]. குப்லாய் கானுக்கு சீனா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் உண்மையான அதிகாரம் இருந்தது, ஆனால் மங்கோலியப் பேரரசின் மற்ற இடங்களில் அதிகாரம் முழுமையாக இல்லை.[4][5][6]

1271ல் குப்லாய் கான் யுவான் அரசமரபைத் தோற்றுவித்தார். 1279ல் யுவான் படைகள் சாங் அரசமரபின் இறுதி எதிர்ப்பை முறியடித்தனர். சீனா முழுவதையும் வென்று சீனப் பேரரசர் என அழைக்கப்பட்ட இவரே சீனா முழுவதையும் ஆண்ட முதல் சீன இனத்தைச் சாராதவர் ஆவார். 1260க்குப் பின் புதிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றிய மங்கோலிய கானும் இவர் மட்டுமே ஆவார்.[7]

தொடக்க கால வாழ்க்கை

குப்லாய் டொல்சிக்கும் நெசுடோரியன் கிறித்துவர் (கிழக்கு கிறுத்துவ சபை) சொர்காக்டனி பெகி ஆகியோரின் இரண்டாவது மகன் ஆவார். செங்கிஸ் கானின் அறிவுரைப்படி சொர்காக்டனி பெகி பௌத்த மதத்தை சேர்ந்த பெண்ணை இவரைக் கவனிக்கும் தாதியாக நியமித்தார். செங்கிஸ் கான் கவாருச்மிடு பேரரசை வெற்றி கொண்டு திரும்பும் போது இலி ஆற்றுப்பகுதியில் 1224ல் தங்கள் முதல் வேட்டையை முடித்திருந்த மாங்கிக்கும் குப்லாய்க்கும் சடங்கு செய்தார் [8] . அப்போது குப்லாய்க்கு ஒன்பது வயது ஆகியிருந்தது.

1236ல் மங்கோலிய-யின் போருக்குப் பின் ஒகெடெய் எபய் மாகாணத்தை டொல்சி குடும்பத்தாருக்கு அளித்தார். டொல்சியின் மறைவுக்கு பின் குப்லாய் அதன் ஒரு பகுதியைப் பெற்றார். குப்லாய்க்கு அனுபவம் இல்லாததால் அவரது அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி நடந்தனர். அதிகாரிகளிடையே ஊழல் மிகுந்திருந்தது. அவர்கள் அதிக வரி விதித்ததால் நிறைய மக்கள் வெளியேறியதால் வரி வருமானம் குறைந்தது. குப்லாயின் தாய் சொர்காக்டனி நிருவாகத்தில் இவருக்கு உதவ புதிய அதிகாரிகளை அனுப்பினார். குப்லாய் மேற்கொண்ட வரி சீரமைப்பினால் வெளியேறிய மக்களில் பலர் திரும்பினர்[9]

குப்லாயின் தொடக்ககால வாழ்வில் அவர் சீனப் பண்பாட்டைப் பற்றியும் சீனர் வாழ்க்கை முறைபற்றியும் அறிய அதிக ஆர்வம் கொண்டது அவரது வாழ்வில் பின்னர் மிகுந்த செல்வாக்கு செலுத்தக்கூடியதாக இருந்தது. வட சீனாவில் இருந்த பௌத்த மதத்தலைவர் ஆயுன் என்பவரை 1242 இல் குப்லாய் காரகோரத்துக்கு அழைத்து பௌத்த மெய்யியல் குறித்துக் கேட்டறிந்தார். ஆயுன் 1243ல் பிறந்த குப்லாயின் மகனுக்கு சென்சின் என்று பெயர் வைத்தார்.[10] ஆயுன் முன்னர் தாவோயிசத்தைப் பின்பற்றிய தற்போது பௌத்தத்தைப் பின்பற்றும் லியு பின்சோங் என்பவரைக் குப்லாயிக்கு அறிமுகப்படுத்தினார். லியு பின்சோங் ஓவியம், கவிதை, கணிதம், எழுத்து போன்ற பல்துறையிலும் விற்பனராக இருந்தார். ஆயுன் தன் மடத்துக்குத் திரும்பியதும் குப்லாய் லியு பின்சோங்கைத் தனக்கு ஆலோசனை கூறும் அறிஞர் குழுவில் சேர்த்தார்.[11]

வட சீன வெற்றி

குப்லாயின் சகோதரர் மாங்கி மங்கோலியப் பேரரசின் பெருமைக்குரிய கானாக ஆனதும் குப்லாயும் குரிச்மியன் முகமது யலவாச்சும் வடசீனாவுக்கு மாங்கியால் அனுப்பப்பட்டார்கள். குப்வாய்க்கு அரசரின் நபராக வடசீனாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் அரசரின் நபராக பதவிவகித்த காலத்தில் எனான் மாகாணத்தில் விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தினார் ஜிஆன் மாகாணத்துக்கு பொருப்பேற்ற பிறகு சமூக நலத் திட்டங்களுக்கு அதிக பணத்தை ஒதுக்கினார் இவ்வாறான இவரின் நிருவாக மேலாண்மை காரணமாக சீனத் தளபதிகள் இடையே நன்மதிப்பைப் பெற்றார். இந்த நன்மதிப்பு யுவான் அரசமரபு உருவாக்கத்தின் போது துணை புரிந்தது.

குப்லாயின் அரசவையில் இருந்த நேபாள ஓவியரால் வரையப்பட்ட குப்லாயின் ஓவியம்

1253ல் குப்லாய் யுனான் மாகாணத்தை தாக்குமாறு பணிக்கப்பட்டார். குப்லாய் தலி அரசை அடிபணியுமாறு கூறி அவர்களின் முடிவை கேட்க சென்ற குப்லாயின் தூதர்கள் அரச குடும்பத்தால் கொல்லப்பட்டனர். மங்கோலியர்கள் மூன்று பிரிவாக பிரிந்து தாக்குதல் தொடுத்தனர். முதல் பிரிவு கிழக்கு பகுதி வழியாக சிசுன் வடிநிலம் நோக்கி நகர்ந்தார்கள் இரண்டாவது பிரிவு மலைப்பாங்கான சிசுனின் மேற்குப்பகுதி வழியாகவும் [12] மூன்றாவது பிரிவு வடபுறமிருந்த ஏரி பகுதி வழியாகவும் நகர்ந்தார்கள். குப்லாய் தென்புறமாக சென்று முதல் பிரிவுடன் இணைந்து கொண்டார். குப்லாய் தலி நகரை கைப்பற்றினாலும் தனது தூதர்களை கொன்றனர் என்று கோபம் கொள்ளாமல் அங்குள்ள மக்களுக்கு பெரும் சிரமம் கொடுக்காமல் விட்டார்.

திபெத்திய துறவிகளின் குணப்படுத்தும் முறையால் ஈர்க்கப்பட்டு 1253ல் சக்யா ஒழுங்கை சார்ந்த துறவி திரோகன் சோக்யல் பாக்காவை தன் அறிஞர்கள் குழுவில் இணைத்துக்கொண்டார். பௌத்த தந்திர கோயிலான சாபுய்யில் குப்லாய்க்கும் அவர் மனைவிக்கும் இவர் ஆசி வழங்கினார். 12545ல் உக்கேரனிய இனத்தவரான லியன் (1231-1280) என்பவரை சமாதான ஆணையகத்தின் தலைவராக அறிவித்தார். குப்லாய்யை பிடிக்காத அதிகாரிகள் சிலர் அவர் தன்னை வெல்ல முடியாதவராக எண்ணிக்கொண்டு மங்கோலியப் பேரரசு போல் புதிய பேரரசு அமைக்க முயல்வதாக மாங்கி கானிடம் தெரிவித்தனர். வரி வசூலை கவனிக்கும் இரு அதிகாரிகளை குப்லாயின் அதிகாரிகளை விசாரிக்க மாங்கி கான் அனுப்பினார். அவர்களில் ஒருவர் ஆரிக் புகாவின் நெருங்கி நண்பரும் வட சீனாவின் ஆளுநரும் ஆவார். அவர்கள் 142 விதிமீறல்கள் இருந்தாக சொல்லி அதற்கு துணைபுரிந்ததாக சீன அதிகாரிகளை குற்றஞ்சாட்டி சிலரை சிறைச்சேதம் செய்தனர். குப்லாய் உருவாக்கிய சமாதான ஆணையம் கலைக்கப்பட்டது [13]. குப்லாய் இரு தூதர்களை அனுப்பி அவர்களுடன் தன் மனைவிகளையும் அனுப்பி மாங்கி கானை சமாதானம் செய்தார். மாங்கி கான் பொதுவில் வைத்து குப்லாயை மன்னித்து அவருடன் முன்பிருந்தது போலவே நட்பானார்.

தாவோயிசத்தவர்கள் பௌத்த மடங்களை தாக்கி அங்கிருந்த செல்வங்களை சூறையாடினர். அதை நிறுத்தச்சொன்ன மாங்கி தாவோயிசத்தவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சமாதானத்தை நிறுவச்சொல்லி குப்லாய்க்கு கட்டளையிட்டார் [14]. குப்லாய் தாவோயித்தவர்களையும் பௌத்தர்களையும் 1258ன் ஆரம்பத்தில் கூட்டி 237 தாவோயிசக் கோவில்களை பௌத்த கோவில்களாக கட்டாயப்படுத்தி மாற்றினார் மேலும் தாவோயிசத்தின் நூல்களை அழித்தார்.[15][16][17][18]. குப்லாய் கானும் யுவான் அரசமரபும் பௌத்தத்தை ஆதரித்த போதிலும் மங்கோலியப் பேரரசின் பிரிவுகளான சாங்கடய் கானகம், தங்க கூட்ட கானகம், இல்கானகம் போன்றவற்றின் கான்கள் பின்னர் இசுலாமிற்கு பல்வேறு காலங்களில் மாறினார்கள்.

1258ல் மாங்கி கான் கிழக்குப் பகுதியுள்ள படைக்கு குப்லாயை தளபதியாக நியமித்தார். தான் சிசுன் பகுதியை தாக்கும் போது தனக்கு உதவ வரும்படி பணித்திருந்தார். மாங்கி கான் போரில் காயம் பட்டதால் குப்லாய் வீட்டில் தங்கியிருக்க அனுமதி கிடைத்தது. ஆனால் குப்லாய் சகோதரன் மாங்கி கானுக்கு உதவ முடிவெடுத்து சிசுன் நோக்கி சென்றார். சிசுன் பகுதியை அடையும் முன் மாங்கி இறந்துவிட்ட தகவல் கிடைத்த போதும் அதை இரகசியமாக வைத்திருந்து யாங்சி ஆற்றங்கரையோரமாக இருந்த பகுதிகளை கைப்பற்றினார்.

சொங் அரசமரபின் அமைச்சர் சிய சிடோ ரகசியமாக குப்லாயை சந்தித்து 200,000 சொங் நாணயங்களையும் 200,000 பொதி பட்டையும் யாங்சி ஆற்றை எல்லையாக கொண்டால் தருவதாக சொன்னார் [19]. முதலில் இதற்கு குப்லாய் ஒப்புக்கொள்ளவில்லை பின்னர் ஒப்புக்கொண்டார்.

கடைசி காலங்கள்

இல்கானேட்டின் பாரசீகத்தில் கசன் இஸ்லாம் மதத்திற்கு மாறி குப்லாய் கானை தனது ராஜாதிராஜன் என்று ஏற்று கொண்டார்.

1291 இல் குப்லாய் கான் தனது பேரன் கம்மலாவை புர்கான் கல்துன் மலைக்கு இக் கோரிக் (விலக்கப்பட்ட பகுதி) தனக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்த அனுப்பினார். அங்குதான் செங்கிஸ்கான் புதைக்கப்பட்டார். அந்த புனிதமான பகுதி குப்லாய்கானின் வழி வந்தவர்களால் மிகக் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. 1293 ஆம் ஆண்டில் பயன் கரகோரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனைச் சுற்றியிருந்த பகுதிகளின் மீது தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினார். எனவே குப்லாயின் எதிரியான கைடு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முயற்சி செய்யவில்லை. 1293 இல் இருந்து குப்லாயின் ராணுவம் கைடுவின் படைகளை நடு சைபீரிய பீடபூமியில் இருந்து அப்புறப்படுத்தியது.

1281 இல் குப்லாய் தன் மனைவி சபி இறந்தவுடன் தனது ஆலோசகர்களிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்து பின்வாங்கினார். தனது ராணிகளில் ஒருவரான நம்புயி மூலமாக அறிவுரைகளை வழங்கினார். குப்லாயின் மகள்களில் இரண்டு பேரது பெயர்கள் மட்டுமே தெரிய வருகின்றன. அவருக்கு வேறு மகள்களும் இருந்திருக்கலாம். தனது தாத்தா செங்கிஸ்கானின் காலத்தில் இருந்த வல்லமை மிக்க பெண்களை போல் இல்லாமல் குப்லாய்கானின் மனைவிகள் மற்றும் மகள்கள் கிட்டத்தட்ட இருந்த இடம் தெரியாமல் இருந்தனர். குப்லாய் தனக்கு அடுத்து கானாக தனது மகன் செஞ்சினை தேர்ந்தெடுத்திருந்தார். செஞ்சின் செயலகத்தின் தலைவராக இருந்தார். மேலும் அரசமரபை கன்பூசிய வழிமுறைகளின்படி நிர்வாகம் செய்தார். தங்க நாடோடிக் கூட்டத்தின் பிடியில் இருந்து திரும்பி வந்த நோமுகான் செஞ்சினை தேர்வு செய்ததில் தனக்கு இருந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் வடக்கு பகுதிக்கு நாடுகடத்தப்பட்டார். 1285 இல் ஒரு அதிகாரி செஞ்சினுக்காக குப்லாய் கான் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அந்த ஆலோசனை குப்லாய்கானை கோபப்படுத்தியது. செஞ்சினை பார்க்க மறுத்தார். 1286 இல் செஞ்சின் இறந்தார். தனது தந்தைக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இறந்தார். குப்லாய் கான் இதற்காக வருந்தினார். தனது மனைவி பைரம் (கொகேஜின்) உடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தார்.

தனது விருப்பத்திற்குரிய மனைவி, மற்றும் தேர்வு செய்யப்பட்ட வாரிசு செஞ்சின் ஆகியோரின் இறப்புகளால் குப்லாய் கான் சோர்வுற்றிருந்தார். வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மீது எடுக்கப்பட்ட படையெடுப்புகளும் தோல்வியில் முடிந்திருந்தன. ஆறுதல் தேடிக் கொள்வதற்காக குப்லாய் கான் உணவு மற்றும் மதுவின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். இதன் காரணமாக அவரின் எடை கூடியது. கீல்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டார். மது மற்றும் பொதுவாகவே மாமிசம் நிறைந்த மங்கோலிய உணவுகளை குப்லாய் கான் அதிகமாக உட்கொண்டார். அவருக்கு கீல்வாதம் வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தனது குடும்பத்தின் இழப்பு, உடல்நலக் குறைவு மற்றும் வயோதிகம் ஆகியவற்றின் காரணமாக குப்லாய் கானுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அந்நேரத்தில் கிடைத்த எல்லா விதமான மருத்துவ சிகிச்சைகளையும் குப்லாய் கான் பெற்றார். கொரிய ஷாமான்கள் முதல் வியட்நாமிய மருத்துவர்கள் வரையானவர்களிடம் இருந்து தீர்வுகள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டார். ஆனால் எதுவும் பலன் தரவில்லை. 1293 ஆம் ஆண்டின் இறுதியில் பாரம்பரிய புதுவருட பிறப்பு விழாவில் கலந்துகொள்ள பேரரசர் மறுத்தார். தனது இறப்பிற்கு முன்னர் குப்லாய் பட்டத்து இளவரசரின் முத்திரையை செஞ்சினின் மகனான தெமுரிடம் கொடுத்தார். தெமுர் மங்கோலியப் பேரரசின் அடுத்த ககானாகவும், யுவான் அரசமரபின் இரண்டாவது ஆட்சியாளராகவும் பதவி ஏற்றார். குப்லாய் கான் படிப்படியாக உடல் நலம் குன்றினார். 1294 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி தனது 78 வது வயதில் இறந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மங்கோலியாவில் இருந்த கான்களை புதைக்கும் இடத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

மரபு

உலான்பாடரிலுள்ள சுக்பாதர் சதுக்கத்தில் உள்ள குப்லாய் கானின் சிலை. ஒகோடி கான் மற்றும் நன்கு பெரிய செங்கிஸ் கானின் சிலைகளுடன் இந்த சிலையானது மங்கோலிய பேரரசுக்கென அர்ப்பணிக்கப்பட்ட சிலை வளாகத்தை அமைக்கிறது.

1260 இல் குப்லாய் கான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வானது மங்கோலிய பேரரசை ஒரு புதிய திசையில் உந்தியது. இவரது சர்ச்சைக்குரிய தேர்வானது மங்கோலியர்களிடையே ஒற்றுமையின்மையை அதிகரித்த போதும், சீனாவுடன் மங்கோலியப் பேரரசின் மற்ற பகுதிகளுக்கிடையே பெயரளவிலான தொடர்பை ஏற்படுத்துவதில் குப்லாய்க்கு இருந்த விருப்பமானது சர்வதேச கவனத்தை மங்கோலியப் பேரரசின் மீது ஈர்த்தது. ஒரு ஒன்றிணைந்த, ராணுவ ரீதியில் சக்தி வாய்ந்த சீனாவை மறுஉருவாக்கம் செய்வதில் குப்லாய் மற்றும் அவரது முன்னோர்களின் படையெடுப்புகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன. திபெத், மஞ்சூரியா மற்றும் மங்கோலிய புல்வெளி ஆகியவற்றை நவீன பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்டு ஆண்ட மங்கோலிய ஆட்சியானது பின்வந்த சிங் அரச மரபின் உள் ஆசிய பேரரசுக்கு முன்னோடியாக அமைந்தது.[20]

மேற்கோள்கள்

  1. Rossabi, Morris (1988). Khubilai Khan: His Life and Times. University of California Press. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-06740-1.
  2. Rossabi, Morris (1988). Khubilai Khan: His Life and Times. University of California Press. பக். 227–228. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-06740-1.
  3. Encyclopædia Britannica. பக். 893.
  4. Marshall, Robert. Storm from the East: from Genghis Khan to Khubilai Khan. பக். 224.
  5. Borthwick, Mark (2007). Pacific Century. Westview Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8133-4355-0.
  6. Howorth, H. H.. The History of the Mongols. II. பக். 288.
  7. Atwood, C. P.. Encyclopedia of Mongolia and the Mongol Empire. பக். 457.
  8. Weatherford, Jack. The Secret History of the Mongol Queens. பக். 135.
  9. By John Man. Kublai Khan. Random House. பக். 41. http://books.google.com/books?id=uV0ikDy7Qm8C&pg=PA41&lpg=PA41&dq=Kublai+allowed+local+officials+free+rein&source=bl&ots=hX1h4WJxai&sig=1iN5mHGatZJSldXXx3h02aWPCkM&hl=en&sa=X&ei=fE7EUurSMsnfoATfwoGAAQ&ved=0CC8Q6AEwAQ#v=onepage&q=Kublai%20allowed%20local%20officials%20free%20rein&f=false.
  10. Man, John. Kublai Khan. பக். 37.
  11. Haw, Stephen G.. Marco Polo's China. பக். 33.
  12. Man, John. Kublai Khan. பக். 79.
  13. Weatherford, Jack. Genghis Khan. பக். 186.
  14. Gazangjia. Tibetan Religions. பக். 115.
  15. Sun Kokuan. Yu chi and Southern Taoism during the Yuan period, in China under Mongol rule. பக். 212–253.
  16. Encyclopædia Britannica. பக். 502.
  17. Prabodh Chandra Bagchi. India and China. பக். 118.
  18. Kalidas Nag. Greater India. பக். 216.
  19. Mah, Adeline Yen. China. பக். 129.
  20. Atwood 2004, p. 611
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.