கேசவர் கோவில்
கேசவர் கோவில் அல்லது சென்னகேசவர் கோயில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகருக்கு அருகில் உள்ள சோமநாத்பூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பழமையான கோவில். இதுவே ஓய்சாளர்களால் கட்டப்பட்ட கடைசி பெரிய கோவில். சோம்நாத்பூர் மைசூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது (பெங்களூரில் இருந்து தென்மேற்காக 140 கி.மீ தொலைவில் உள்ளது). ஓய்சாளர் கட்டிடக்கலையால் ஆன கோவில்களுள் இதுவே நன்கு பாதுகாக்கப்பட்ட முழுமையான கோவில். இது மூன்றாம் நரசிம்ம மன்னனின் தளபதியான சோமநாதன் என்பவரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது. இக்கோயில் கி.பி. 1268 இல் கட்டப்பட்டது. அக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் ஒய்சாளர்கள் 260 ஆண்டுகளாக கருநாடகத்தில் ஆட்சி செலுத்தி வந்திருக்கின்றார்கள்.
இக்கோயிலில் உள்ள சிற்பங்களைச் செதுக்கியவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்திய வழக்கத்தில் இருந்து சற்று வேறானது. சிற்பிகளில் புகழ்மிக்க மல்லித்தம்மாவும் குறிப்பிடப்படுகின்றார். கோயிலில் புறச்சுவரில் உள்ள 194 சிற்பங்களில் 40 சிற்பங்களை மல்லித்தம்மா செதுக்கியதாக குறிப்பிடப்பட்டுளன. மற்ற சிற்பிகளாகிய பல்லையா, சௌடைய்யா, பார்மய்யா,காமய்யா, நஞ்சய்யா ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன[1].