கே. சந்தானம்
கே. சந்தானம் (Kasturiranga Santhanam) (1895 – 28 மார்ச் 1980), தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், தமிழ், சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆழ்ந்த நூலறிவைக் கொண்ட அறிஞரும் ஆவார். திருச்சிராப்பள்ளி கஸ்தூரி ரங்கனின் மகனாகப் பிறந்த சந்தானம், திருச்சி சூசையப்பர் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்து, பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

மகாத்மா காந்தி மீது ஈடுபாடு கொண்ட சந்தானம், இளமையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு பெற்றார். 1930-ஆண்டில் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை சென்றவர். மகாத்மா காந்தி நடத்திய சபர்மதி ஆஸ்ரமத்தில், தனது மனைவியுடன் சந்தானம் தங்கி சேவை செய்து கொண்டிருந்தார். ஒரு முறை இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து சிறை சென்ற போது, சந்தானத்தின் மனைவி காலமாகிவிட்டார்.
சந்தானம் 1937 முதல் 1942 முடிய இந்திய இம்பீரியல் சட்டமன்றக் குழுவில் உறுப்பினராகவும், 1946-ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். 1948-ஆம் ஆண்டு முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் இரயில்வே மற்றும் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியவர். 1952-இல் விந்தியப் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]
சந்தானம் கமிட்டி
1962-இல் இந்தியாவில் ஊழலை ஒழிப்பது குறித்து, இந்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்கும் குழுவிற்கு சந்தானத்தை தலைவராக லால் பகதூர் சாஸ்திரி நியமித்தார்.[2] சந்தானம் கமிட்டியின் அறிக்கையின் படி, இந்திய அரசு, 1964-இல் மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை (Central Vigilance Commission) அமைத்தது.
1976-இல் கே. சந்தானத்தின் பரிந்துரையின் படி, இந்திய அரசில் ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான நடத்தை விதிகள் (Code of Conduct) நடைமுறைபடுத்தப்பட்டது.[3]
பங்களிப்புகள்
- கே. சந்தானம், ஏப்ரல் 1930-ஆம் ஆண்டில் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை சென்றவர்.
- இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இராஜாஜி மற்றும் காமராசருடன் சேர்ந்து பணியாற்றியானர்.
- இந்தியன் எக்சுபிரசு ஆங்கில நாளிதழின் முதல் தலைமை ஆசிரியராகவும் (1933 – 1940), பின்னர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியராகவும் (1943–1948) பணியாற்றியவர்.
- தமிழ், சமசுகிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமைப் பெற்ற கே. சந்தானத்தின் படைப்புகள் பாரதிய வித்தியா பவன் நிறுவனம் வெளியிட்டது.
கே. சந்தானத்தின் படைப்புகள்
- An Anthology of Indian Literature (1969)
- Gospel of Gandhi (1967)
- British Imperialism and Indian Nationalism (1972)
- காளிதாசரின் சாகுந்தலம் இலக்கியத்தையும், பவபூதியின் உத்தர இராம சரித்திரத்தையும் சமசுகிருத மொழியிலிருந்து ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தவர்.
மேற்கோள்கள்
- The Hindu dated February 15, 1952, New Lieutenant-Governors online
- 1.4.1 Santhanam Committee Report - The Central Vigilance Commission
- Austin, Granville (1999). Working a Democratic Constitution - A History of the Indian Experience. New Delhi: Oxford University Press. பக். 642. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:019565610-5.