எம். ஏ. அப்துல் மஜீத்
எம். ஏ. அப்துல் மஜீத் (M. A. Abdul Majid, அக்டோபர் 15, 1926 - நவம்பர் 29, 2011) இலங்கையின் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களில் ஒருவர். 1960 முதல் 1994 வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தபால் தொலைத்தொடர்பு பிரதி அமைச்சராகவும் இருந்தவர். இவர் பி. ஏ. அப்துல் மஜீத் என மக்களால் அழைக்கப்பட்டவர்.
எம். ஏ. அப்துல் மஜீத் நாஉ | |
---|---|
பொத்துவில் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் மார்ச் 1960 – 1977 | |
முன்னவர் | எம். எம். முஸ்தபா |
பின்வந்தவர் | எம். ஏ. எம். ஜலால்தீன் |
சம்மாந்துறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1977 – 1989 | |
இலங்கை நாடாளுமன்ற தேசியப் பட்டியல் உறுப்பினர் | |
பதவியில் 1989–1994 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 15, 1926 சம்மாந்துறை, இலங்கை |
இறப்பு | நவம்பர் 29, 2011 85) சம்மாந்துறை, இலங்கை | (அகவை
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
சமயம் | இசுலாம் |
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் புகழ்பெற்ற காரியப்பர் குடும்பத்தில் முகம்மதலி - கதீஜா ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் அப்துல் மஜீத். ஆரம்பக் கல்வியை 1933 இல் சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பித்து பின்னர் 1934 இல் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் 1943 இல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்றார். 1947 கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பயின்று பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்று கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் பட்டதாரி என்ற பெருமை பெற்றார்[1]. சிறிது காலம் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் 1956 இல் அரசியலில் நுழைந்தார்.
அரசியலில்
சம்மாந்துறை பட்டின சபைத் தேர்தலில் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட வீரமுனை வட்டார வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1956 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கல்முனை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மார்ச் 1960, சூலை 1960, 1965, 1970 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். பின்னர் 1977 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட சம்மாந்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989 முதல் 1994 வரை முன்னாள் அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா அரசில் தேசியப் பட்டியலிலும் தெரிவாகி நாடாளுமன்றம் சென்றார். இலங்கையின் தபால், தந்தி மற்றும் காணி, விவசாயப் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.
மேற்கோள்கள்
- இன ஒற்றுமைக்காக உழைத்த உன்னத மனிதன் பீ.ஏ.அப்துல் மஜீட், தினகரன், டிசம்பர் 11, 2011