அப்பல்லோ

அப்பல்லோ என்பவர் கிரேக்க மற்றும் உரோமப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு கடவுள் ஆவார். பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவரான இவர் கிரேக்கக் கடவுளர்களான சியுசு மற்றும் லெட்டோ ஆகியோரது மகன் ஆவார். சந்திரக் கடவுளான ஆர்ட்டெமிசு அப்பல்லோவின் இரட்டைச் சகோதரி ஆவார்.

அப்பல்லோ
அப்பல்லோ கடவுள்
இடம்ஒலிம்பசு மலைச்சிகரம்
பெற்றோர்கள்சியுசு மற்றும் லெட்டோ
சகோதரன்/சகோதரிஆர்ட்டெமிசு மற்றும் சியுசின் அனைத்துப் பிள்ளைகளும்

பிறப்பு

அப்போலோ (வலதுப்புறம்) மற்றும் ஆர்ட்டெமிசு (இடதுப்புறம்)

கோயசு மற்றும் போபே என்னும் டைட்டன்களின் மகள் லெடோ. இவர் சியுசு கடவுளால் கருத்தரித்து இருப்பதை அறிந்து கோபம் கொள்ளும் எரா, லெடோவிற்கு நிலம் அல்லது தீவு ஆகிய இரண்டிலும் பிரசவம் நடக்காது என்று சாபமளிக்கிறார். ஆகவே லெடோ பிரசவ வலி ஏற்பட்ட போது கிரேக்கம் முழுவதும் அலைந்து திரிந்தார். அவர் மீது இரக்கம் கொண்ட பொசைடன் அவருக்கு நிலமும் அல்லாத தீவும் அல்லாத மிதக்கும் தீவு எனப்படும் டெலோசு தீவிற்கு வழிகாட்டினார். அந்தத் தீவு அன்னப் பறவைகளால் சூழப்பட்டிருந்தது. இதையறிந்த எரா குழந்தைப்பிறப்பு கடவுள் எய்லெய்தியாவைக் கடத்தினார். இதனால் லெடோ ஒன்பது பகலும் ஒன்பது இரவும் பிரசவ வலியால் துடித்தார். பிறகு அப்போலோ, ஆர்ட்டெமிசு ஆகிய இருவரும் பிறந்தனர். பிறகு அந்தத் தீவு அப்பல்லோவின் புனிதத் தலம் ஆனது.

இளமைப்பருவம்

லெட்டோவைக் கொல்ல பைதான் என்ற கொடிய வேதாளத்தை எரா அனுப்புகிறார். தன் தாயைக் காக்க வில் அம்பு ஆயுதம் தருமாறு எப்பெசுடசுவிடம் வேண்டுகிறார். அதைப் பெற்ற பிறகு அவர் டெல்பியில் உள்ள புனிதக் குகையில் வசிக்கும் பைதானைக் கொன்றார். அப்போது அவர் பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையாக இருந்தார்.

லெடோவைக் கற்பழிக்க டைடியோசு என்ற அரக்கனை அனுப்பினார் எரா. இந்த முறை அப்பல்லோ தன் சகோதரி ஆர்ட்டெமிசின் உதவியுடன் அந்த அரக்கனை எதிர்த்து போரிட்டார். அவர்களுக்கு சியுசு கடவுளும் உதவினார். இறுதியில் அந்த அரக்கன் டார்டரசில் அடைக்கப்பட்டான்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.