ஹரி சிங்

மகாரஜா ஹரி சிங் (Hari Singh) (23 செப்டம்பர் 1895 – 26 ஏப்ரல் 1961), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் ஆவார்.

ஹரி சிங்
हरि सिंह
ਹਰਿ ਸਿੰਘ
حری سنگه
மகாராஜா, ஜம்மு காஷ்மீர்
ஹரி சிங், 1944
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் அரசர்
ஆட்சி23 செப்டம்பர் 1925 — 26 ஏப்ரல் 1961
முன்னிருந்தவர்பிரதாப் சிங்
பின்வந்தவர்ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் முடியாட்சி ஒழிக்கப்பட்டது (கரண் சிங், ஜம்மு காஷ்மீர் அதிபர்)
துணைவர்மகாராணி தாரா தேவி (நான்காம் மனைவி)
வாரிசு(கள்)கரண் சிங்
அரச குடும்பம்இராசபுத்திர டோக்ரா வம்சம்
தந்தைஅமர்சிங்
பிறப்பு23 செப்டம்பர் 1895
ஜம்மு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு26 ஏப்ரல் 1961 (வயது 65)
மும்பை, மகாராட்டிரா, இந்தியா
சமயம்இந்து சமயம்
மகாராஜா ஹரி சிங் ஜம்மு காஷ்மீர் இராச்சியம், (1895–1961)

நான்கு முறை திருமணம் செய்த இவரின் நான்காவது மனைவியின் பெயர் மகாராணி தாரா தேவி ஆகும் (1910–1967). இவரது மகன் கரண் சிங், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அதிபராகவும் (President), பின்னர் பிரதம அமைச்சராகவும் (Prime Minister) முதல்வராகவும் செயல்பட்டவர்.

இளமைக் காலம்

அஜ்மீரில் கல்லூரி படிப்பு முடித்த ஹரி சிங், டேராடூன் இராணுவக் கல்லூரியில், இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியை எடுத்துக் கொண்டார். தமது இருபதாம் வயதில் ஜம்மு காஷ்மீர் பகுதியின் படைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆட்சிக் காலம்

1925இல் இவரது சித்தப்பா மகாராஜா பிரதாப் சிங்கின் மறைவிற்குப் பின்னர், ஹரி சிங்கிற்கு ஜம்மு காஷ்மீரின் மன்னராக பட்டம் சூட்டப்பட்டது. ஹரி சிங், ஜம்மு காஷ்மீரில் கட்டாய ஆரம்பக் கல்வியை நடைமுறைப் படுத்தினார். குழந்தைத் திருமணத்தை தடை செய்தார்.[1]

இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் உயர்நிலைப் போர்க் குழுவில் 1944 முதல் 1946 முடிய உறுப்பினராக செயல்பட்டார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர்

1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், தனது ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைக்காது, இறையாண்மை மிக்க நாடாக ஆள முடிவு செய்தார்.

இவரது முடிவினை சாதமாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் இராணுவம், ஜில்ஜிட்-பால்டிஸ்தானில் வாழும் பஷ்தூன் பழங்குடி மக்களுக்கு போர்க்கருவிகளை வழங்கி, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளையும் மற்றும் ஜம்முவின் மேற்கு பகுதிகளில் முசாஃபராபாத் நகரத்தையும், அதனை ஒட்டிய பகுதிகளையும் கைப்பற்றச் செய்தனர்.

இந்தியாவுடன் இணைப்பு ஒப்பந்தம்

பாகிஸ்தானின் நடவடிக்கையைக் கண்டு அஞ்சிய ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை இந்தியாவுடன் இணைக்க, இந்திய அரசுடன் 26 அக்டோபர் 1947இல் ஒப்பந்தம் செய்து கொண்டார். [2] [3] [4]இவ்வொப்பந்தப்படி, இந்திய இராணுவம் ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு அனுப்பப்பட்டதால், ஜம்மு காஷ்மீரை முழுவதுமாக ஆக்கிரமிப்பிக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்குக் தடை ஏற்பட்டது. [5][6]இந்நிகழ்வுகளால் 1947-இல் இந்திய-பாகிஸ்தான் போர் ஏற்பட்டது.

கரண் சிங்

சர்தார் வல்லபாய் படேல் மற்றும் ஜவகர்லால் நேருவின் பெரு முயற்சியால், மன்னர் ஹரி சிங்கின் மகன் இளவரசர் கரண் சிங், 1949 முதல், ஜம்மு காஷ்மீரில் முடியாட்சி முறை ஒழிக்கப்படும் வரை, 1952 வரை ஜம்மு காஷ்மீர் மாகாணத்தின் அதிபரானார். பின்னர் கரண் சிங் 1964இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். [7]

மறைவு

மன்னர் ஹரி சிங் தனது இறுதிக் காலத்தை ஜம்முவில் உள்ள ஹரி நிவாஸ் அரண்மனையில் கழித்தார். 26 ஏப்ரல் 1961-இல் உடல் நலக்குறைவால் மும்பையில் ஹரி சிங் மரணமடைந்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.