வாத்தியார்
வாத்தியார் (vaathiyaar) 2006 நவம்பர் 10 ஆம் திகதி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் மல்லிகா கபூர் நடிப்பில் டி. இமான் இசையமைப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.
வாத்தியார் | |
---|---|
இயக்கம் | ஏ. வெங்கடேஷ் |
தயாரிப்பு | வி.பழனிவேல் ஏ.சி.ஆனந்தன் |
கதை | அர்ஜுன்(கதை) |
திரைக்கதை | ஏ.வெங்கடேஷ் |
இசை | டி.இமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே.எஸ்.செல்வராஜ் |
படத்தொகுப்பு | பி.சாய்சுரேஷ் |
வெளியீடு | 10 நவம்பர் 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
துரை (அர்ஜுன்) நல்லது செய்யக்கூடிய தாதா. காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரபாண்டியன் (பிரகாஷ்ராஜ்) மற்றும் ஒரு காவலர் (சத்யன்) துரையைக் கைது செய்ய தகுந்த நேரத்திற்காக காத்திருக்கின்றனர். துரை ஆதரவற்றவர்களுக்கான அனாதை இல்லம் நடத்துகிறார். அவருக்கு சுப்பிரமணி (மணிவண்ணன்) மற்றும் அய்யனார் (வடிவேலு) உறுதுணையாக உள்ளனர். துரையின் தாய்க்கு (சுஜாதா) துரையின் செயல்களில் விருப்பமில்லை. தொலைக்காட்சி நிருபரான அஞ்சலி துரையைக் காதலிப்பதற்காக அனாதை என்று பொய் சொல்லி அங்கு வருகிறார்.
துரை இப்படி மாறுவதற்கு அவரது கடந்தகால வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வே காரணமாகிறது. துரை (அண்ணாதுரை) நற்குணமும் நேர்மையும் கொண்ட பள்ளி ஆசிரியராக இருந்துள்ளார். அவர் பணியாற்றிய பள்ளியில் நடந்த தீவிபத்தில் அங்கு படித்த சிறுகுழந்தைகள் இறந்துவிடுகின்றனர். இதற்கு காரணமான அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் தட்டிக்கேட்க தாதாவாக மாறுகிறார். எங்கு தவறு நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிறார்.
அந்த நகரத்தில் வெடிகுண்டு வைக்க ஒரு அரசியல்வாதி திட்டமிடுவது துரைக்குத் தெரியவருகிறது. அதிலிருந்து அந்த நகரத்தையும் மக்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
- அர்ஜுன் - துரை (அண்ணாதுரை)
- மல்லிகா கபூர் - அஞ்சலி
- பிரகாஷ்ராஜ் - ஈஸ்வரபாண்டியன்
- வடிவேலு - அய்யனார்
- பிரதீப் ரவட் - நாச்சியார்
- மணிவண்ணன் - சுப்ரமணியன்
- சத்யன் - காவலர்
- சுஜாதா - துரையின் தாய்
- தேவன்
- தலைவாசல் விஜய் - பள்ளி ஆசிரியர்
- மனோபாலா - அய்யனாரின் தந்தை
- சிங்கமுத்து - அய்யனாருடைய தந்தையின் நண்பர்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - அஞ்சலியின் தந்தை
- மகாநதி சங்கர்- கூலிகன்
- தம்பி ராமையா
- எஸ்.என்.லட்சுமி
- சகீலா - "பப்பள பாப்பா" பாடலில் சிறப்புத்தோற்றம்
- அந்தாரா பிஸ்வாஸ் - ஒரு பாடலுக்கு நடனம்
- சுஜா வருணீ - ஒரு பாடலுக்கு நடனம்
தயாரிப்பு
2006 ஆம் ஆண்டு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. நடிகை துலிப் ஜோஷி கதாநாயகியாக முதலில் நடிக்கத் துவங்கி பின் சில பிரச்சனைகள் காரணமாக நீக்கப்பட்டு மல்லிகா கபூர் கதாநாயகி ஆனார். பாடகர் பிளாசி ஒரு பாடலுக்கு ஆடினார். அர்ஜுன் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் காட்சி ஸ்ரீபெரும்புதூரில் 12 லட்ச ரூபாய் செலவில் படமாக்கப்பட்டது. ராஜ்குமார் என்ற உதவி இயக்குனர் தன்னுடைய கதையைத் திருடி வாத்தியார் திரைப்படத்தை எடுத்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் செய்தார். ஆனால் அர்ஜுன் " நான் யாருடைய கதையையும் திருடவேண்டிய அவசியமில்லை. வாத்தியார் கதை தன் சொந்தப் படைப்பு" என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
வெளியீடு
இப்படத்தைத் தீபாவளியன்று வெளியாவதில் சில பொருளாதாரக் காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக 2006 நவம்பர் 10ஆம் திகதி வெளியானது.[1][2]
விமர்சனம்
ஆனந்த விகடன் : "பள்ளிகளை நடத்துவதில் இருக்கும் அலட்சியங்களையும், சட்ட மீறல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட நினைத்தது இயக்குநர் ஏ.வெங்கடேஷின் நல்ல முயற்சி" என்று பாராட்டி 38/100 மதிப்பெண் வழங்கியது.[3]
இசை
இசையமைப்பாளர் டி.இமான்
வ.எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | என்னடி முனியம்மா[4] | கார்த்திக், ப்ளாஸி | தபு சங்கர் |
2 | எங்கோ பார்த்திருக்கிறேன் | டி.இமான் | தபு சங்கர் |
3 | தஞ்சாவூரு கோபுரமே | கார்த்திக், கல்யாணி | தபு சங்கர் |
4 | கைய வீசம்மா[5] | டி.இமான், ஜோஷ்னா | பழனி பாரதி |
5 | பப்பல பாப்பா | அனுராதாஸ்ரீராம் | கலைக்குமார் |