ரவா கேசரி

ரவா கேசரி என்பது தமிழ் நாட்டில் ஓர் இனிப்புவகைச் சிற்றுண்டி ஆகும். சில குடும்பங்களில் திருமணத்திற்காக பெண்ணும் பிள்ளையும் அறிமுகப்படுத்திக்கொள்ளும் சமயத்தில் வழக்கமாகச் செய்தளிக்கப்படும் இனிப்பு உண்டி.

தேவையான பொருட்கள்

(ஆ = ஆழாக்கு; மே = மேசைக்கரண்டி; தே = தேக்கரண்டி)

ரவை - 1 ஆ.
சர்க்கரை - 1 1/2 ஆ.
பால் - 3/4 ஆ.
தண்ணீர் - 1 1/4 ஆ.
நெய் - 1/2 ஆ.
குங்குமப்பூ - 1/2 தே அல்லது ஆரஞ்சுக்கலர்
ஏலப்பொடி - 1/2 தே
முந்திரிப்பருப்பு 12

செய்முறை

  • ஒரு கனமான பாத்திரத்திலோ அல்லது ஒட்டாத பூச்சுப்பாத்திரத்திலோ 1 மே. நெய் விட்டு மிதமான தீயில் முந்திரியை பொன்வறுவலாக வறுக்கவும். பின் முந்திரியை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
  • அதே பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யுடன் ஒரு மே. நெய் சேர்த்து ரவையை பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த ரவையில் பால், தண்ணீர், குங்குமப்பூ இவைகளைச் சேர்க்கவும். ரவை கெட்டியான பின், சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் மீதமுள்ள நெய்யில் பாதியை சேர்க்கவும். கேசரி இளகி வரும். பயப்படத் தேவை இல்லை. கிளறிக்கொண்டே மீதமுள்ள நெய்யையும் விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, ஒரு தட்டில் கொட்டி சமமாய்த் தட்டலாம். அல்லது ஒரு பால் கரண்டியில் அமுக்கித் தட்டினால் இட்லி போல் வரும். அதன்மேல் முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக அமுக்கி அலங்கரிக்கவும். [1]
  • கேசரி பரிமாறப்படுவதற்குத் தயார். ஐந்து நபர்களுக்கு போதுமானது.

சான்றுகள்

  1. "செய்முறை". பார்த்த நாள் ஆகத்து 22, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.