மூணார்
மூணாறு தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி, கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். கடல் மட்டத்திலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.மூணாறு நகரமும்,அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணாறு என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை , நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சியாகும். உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மையான மக்கள் தோட்டத் தொழிளாலர்களான தமிழர்கள் ஆவர்
மூணாறு | |
— நகரம் — | |
![]() மூணாறு மலைவாழிடம் | |
அமைவிடம் | 10°07′N 77°04′E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி |
ஆளுநர் | ப. சதாசிவம் |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | மூணாறு |
மக்கள் தொகை • பெருநகர் |
• 68,205 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
557 கிமீ2 (215 சதுர மைல்) • 1,450 மீட்டர்கள் (4,760 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | tourism idukki.nic.in tourism |
வரலாறு
இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை பயிரிடத் தொடங்கினர். ஜான் டேணியல் முன்றோ என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே தோட்டப்பயிர் செய்ய வழிவகுத்தார். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதி, ரோப் கார் வசதியை ஏற்படுத்தினர். எனினும் பின்னர் வெள்ளத்தால் ரயில் பாதைகள் அழிந்ததால் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு சரக்குகளை கையாளப்பட்டது. இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் புகழ் பெற்றது.[2]
சுற்றுலா

தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி. 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூணாறு எனப் பெயர் பெற்றது. தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆனைமுடி சிகரம், மூணாறு மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது. தென்னிந்தியாவின் மூன்றாவது உயர மலையான சொக்கர்முடி மலை லோக்கார்ட் எஸ்ட்டேட்டின் (Lockhart Estate) ஓர் எல்கையாகும். ராஜமலைத் தொடரில் அழிந்துவரும் விலங்கினமான வரையாடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளது. மூணாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது.
முக்கிய சுற்றுலா இடங்கள்
- ராஜமலை (Rajamalai)
- ஆனை முடி மலைமுடி (Anaimudi Peak)
- ரோஸ் கார்டன் (Rose Garden)
- மாட்டுப்பட்டி அணை (Mattupatty Dam)
- எக்கோ பாயிண்ட் (Echo Point)
- குண்டலை அணை (Kundalai Dam)
- லோக்கார்ட் டீ மியூசியம் (Lockhart Tea Museum)
- லோக்கார்ட் டீ பார்க் (Lockhart Tea Park)
- லோக்கார்ட் கேப் வியூ பாயிண்ட் (Lockhart Gap View Point)
- கள்ளன் குகை (Kallan Cave)
- பெரியகானல் அருவி (Periyakanel Water Falls)
- ஆணையிரங்கல் அணை (Anayirangal Dam)
- லக்காம் அருவி(luckam water falls)
- வாகுவரை தேயிலை தோட்டம் (vaguvarrai estate)
மூணாறில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறுக்கு தமிழகத்திலிருந்து மதுரை, தேனி, கோவை, உடுமலைப்பேட்டை, சென்னையிலிருந்தும், கேரளத்தின் முக்கிய ஊர்களான கொச்சி, அலுவா, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்தின் வாயிலாக செல்லலாம். கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து பேருந்து உள்ளது. போடிநாயக்கனூர் நகரிலிருந்து 2 மணி நேரத்தில் சிற்றுந்தில் செல்லலாம்.போடியில் இருந்து மூணாறு சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது
இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.
1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் கண் கொள்ளாக் காட்சியாக முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
