மஞ்சள் (மூலிகை)

மஞ்சள், அரிணம் அல்லது பீதம் (Curcuma longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.

மஞ்சள்
மஞ்சள் செடியின் வரைபடம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: இஞ்சி வரிசை
குடும்பம்: இஞ்சிக் குடும்பம்
பேரினம்: Curcuma
இனம்: C. longa
இருசொற் பெயரீடு
Curcuma longa
லி.[1]
மஞ்சள் வயல்
மஞ்சள் தூள்
மஞ்சள் கிழங்குகள்
மகளிர் உரைத்து மேனியில் பூசிக் குளிக்கும் மஞ்சள்
தமிழ் நாட்டில் உள்ள ஓர் கிராமத்தில் உள்ள ஓர் மஞ்சள் வயல்
இந்தியாவிலூள்ள மகரசட எனும் கிராமத்திலுள்ள ஓர் மஞ்சள் மூலிகையின் பூ
மஞ்சளின் கிழங்கு

வளர்வதற்கேற் சூழல்

மஞ்சளுக்கு 20 °C and 30 °C (68 °F and 86 °F) இடைப்பட்ட வெப்பநிலை தேவைப்படுகிறது. மேலும் கணிசமான அளவு நீர்ப்பாசணமும் தேவைப்படுகிறது.[2] தமிழகத்தில் ஈரோடு மாவட்டமானது மஞ்சள் வேளாண்மைக்கும்,சந்தைக்கும் பெயர்பெற்றுள்ளது.

வரலாறு

மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது.[3] இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.[4]

மஞ்சளின் வகைகள்

மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

  • முட்டா மஞ்சள்
  • கஸ்தூரி மஞ்சள்
  • விரலி மஞ்சள்
  • கரிமஞ்சள்
  • நாக மஞ்சள்
  • காஞ்சிரத்தின மஞ்சள்
  • குரங்கு மஞ்சள்
  • குடமஞ்சள்
  • காட்டு மஞ்சள்
  • பலா மஞ்சள்
  • மர மஞ்சள்
  • ஆலப்புழை மஞ்சள்

மஞ்சளின் இயல்புகள்

முட்டா மஞ்சள்
இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள்.

கஸ்தூரி மஞ்சள்
இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது.

விரலி மஞ்சள்
இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.

மஞ்சளின் பயன்பாடுகள்


  • சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
  • பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
  • சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.
  • உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
  • பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
  • வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
  • இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
  • நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

மேலதிக தகவல்கள்

  • மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
  • மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
  • மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன.
  • மஞ்சள்தூளைத் திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (TNT) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது.[5]

இந்துக்கள் நம்பிக்கை

இந்து சமயத்தவர் மஞ்சளைப் புனிதப் பொருளாகக் கருதுகின்றனர்.

  • புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர்.
  • புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்கின்றனர்.
  • மாரியம்மன் கோயிலுக்கு அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது.
  • பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவர்.
  • மஞ்சள் தூளை நீரில் கலந்து பிள்ளையார் பிடித்து அறுகம்புல் வைத்து பிள்ளையாராக வழிபடுவர்..
  • திருவிழாக் காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளிப்பர்.

மேற்கோள்கள்

  1. "Curcuma longa information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்த்த நாள் 2008-03-04.
  2. Materia Indica, 1826, Whitelaw Ainslie, M.D. M.R.A.S., via Google Books
  3. Chattopadhyay, Ishita; Kaushik Biswas, Uday Bandyopadhyay, and Ranajit K. Banerjee (10 July 2004). "Turmeric and curcumin: Biological actions and medicinal applications". Current Science (Indian Academy of Sciences) 87 (1): 44–53. பன்னாட்டுத் தர தொடர் எண்:0011-3891. http://repository.ias.ac.in/5196/1/306.pdf. பார்த்த நாள்: 16 March 2013.
  4. "Herbs at a Glance: Turmeric, Science & Safety". National Center for Complementary and Alternative Medicine (NCCAM), National Institutes of Health (2012). பார்த்த நாள் 11 October 2012.
  5. Curry powder molecule 'is cheap sensor for explosives'; By Jason Palmer; http://www.bbc.co.uk/news/science-environment-12849781, 25 March 2011

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.