தாழிசை (பாவினம்)

தமிழில் பாக்களில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைகள் உள்ளது போல மூன்று இனங்கள் உள்ளன. அவை - தாழிசை, துறை, விருத்தம் என்பன. பாவகைகளின் இலக்கணத்திற்கும் பாவின இலக்கணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இல்லை. பாவினங்களுக்கு சீர், அடி எண்ணிக்கையும் வாய்பாட்டு அமைப்பும் மட்டுமே கருத்தில் கொள்ளப் பெறுகின்றன. இவற்றில் தாழிசை என்பது குறைந்த ஓசையுடையதும் இனிதான ஓசை உடையதுமாகும். ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருதல் இதன் தனிச் சிறப்பு.

தாழிசை ஆறுவகைப்படும். அவையாவன:

  1. குறள் தாழிசை - குறள் வெண்பாவில் கலித்தளை கலந்து செப்பலோசை சிதைந்து வருவது.
  2. வெள்ளொத்தாழிசை - இன்னிசைச் சிந்தியல் வெண்பா, ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருவது.
  3. வெண்டாழிசை - வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை ஆகியவற்றுள் ஒன்றாலோ, பலவாலோ மூன்றடிகளில் அமைவது; ஈற்றடி சிந்தடியாகவும் ஏனைய அடிகள் அளவடியாக வருவது
  4. ஆசிரியத் தாழிசை - அளவொத்த அளவடிகள் மூன்று கொண்டு, ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது; தனித்தும் வரும்
  5. கலித்தாழிசை அல்லது கலியொத்தாழிசை - இரண்டடிகளிலும் பல அடிகளிலுமாக அமையும். ஈற்றடி, சீர் மிகுந்து வரும். ஏனைய அடிகளில் சீர்கள் ஒத்தும் ஒவ்வாதும் அமையும்.
  6. வஞ்சித் தாழிசை - குறளடிகள் நான்கு கொண்டு அமைவது. அடிகள் அனைத்தும் ஓரெதுகை பெற்று வர வேண்டும். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவதும் மிக அவசியமானது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.