பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்தவன்

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்[1]..

கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது[2].

இவனை

  • குட்டுவன் இரும்பொறை [3]
  • சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை [4]
  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை [5]
  • பூழியர் மெய்ம்மறை [6]
  • கொடித்தேர்ப் பொறையன் [7]
  • இயல்தேர்ப் பொருநன் [8]
  • கோதை மார்பன் [9]

வரலாறு

அரிசில் கிழார் இவறைப் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்து, 8-ம் பத்தாக உள்ளன.

நாடு
  • அரிய பொருள்களை இறக்குமதி செய்யும் கொடுமணம் என்னும் துறைமுகமும், முத்துக்குப் பெயர்போன பந்தர் நகரமும் இவன் நாட்டில் இருந்தன. [10]
வெற்றிகள்
  • அதியமானையும் இருபெரு வேந்தர்களையும் கொல்லி மலை நீர்கூரில் நடந்த போரில் வென்று அவர்களது முரசையும் குடையையும் கைப்பற்றிக்கொண்டான். [11]
  • அதியமானின் தகடூரையும் கைப்பற்றிக்கொண்டான். [12] [13]
  • தோட்டி நகரைக் கைப்பற்றினான். [14]
  • கழுவுள் என்பவனின் தலைநகரைப் பாழாக்கினான். [15]
  • இவனது போர்ப்படை யானைகள் கொங்கர் மேய்க்கும் ஆனிரைகள் போல மிகுதி. [16]
  • இவனது போர்க்குதிரைகள் இவன் நாட்டில் மேயும் ஆடுகள் போல் மிகுதி. [17]
இவனுக்குப் புலவர் அறிவுரை
  • அறிந்தவர்களையும் (உரவர்), அறியாதவர்களையும் (மடவர்) எண்ணிப்பார்த்துச் செயல்படவேண்டும். [18]
  • உன் முன்னோரின் வலிமையை உணர்ந்தவர்கள் உன் வலிமையை உணரவில்லை. அறிந்து செயல்படுக. [19]
மகன்
வீறுசால் புதல்வன் இவனுக்கு உண்டு. [20]
கொடை

தன்னிடம் இரப்பவர்களுக்கு வழங்கும்போது, முனபே இரந்தவர்கள் வாழ்வுக்காகச் சேர்த்துத் தடையின்றி வழங்கினான். [21]

வாழ்த்து
புலவர் இவனை அயிரை மலை போல் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். [22]
குணநலன்கள்
பெரியோரைப் பேணுவான். சிறியோர்க்கு உதவுவான். [23]

குறிப்புகள்

  1. புலியூர்க் கேசிகன், பக். 333
  2. டான் பொஸ்கோ
  3. பதிற்றுப்பத்து, பதிகம் 9
  4. மோசிகீரனார் புறம் 50
  5. பதிற்றுப்பத்து, பதிகம் 8
  6. பதிற்றுப்பத்து 73
  7. பதிற்றுப்பத்து 73
  8. பதிற்றுப்பத்து 75
  9. பதிற்றுப்பத்து 79
  10. பதிற்றுப்பத்து 74
  11. பதிற்றுப்பத்து, பதிகம் 8
  12. பதிற்றுப்பத்து 78
  13. பதிற்றுப்பத்து, பதிகம் 8
  14. ஆர் எயில் தோட்டி வௌவினை பதிற்றுப்பத்து 71
  15. பதிற்றுப்பத்து 71
  16. பதிற்றுப்பத்து 77
  17. பதிற்றுப்பத்து 78
  18. பதிற்றுப்பத்து 71
  19. பதிற்றுப்பத்து 72
  20. பதிற்றுப்பத்து 74
  21. பதிற்றுப்பத்து 76
  22. பதிற்றுப்பத்து 79
  23. பதிற்றுப்பத்து 79

உசாத்துணைகள்

  • புலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).
  • செல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).
  • புலியூர்க் கேசிகன், புறநானூறு தெளிவுரை, பாரிநிலையம், சென்னை, 2004 (மறு பதிப்பு)
  • டான் பொஸ்கோ, பண்டைய கேரளாவின் வரலாறு 03 ஏப்ரல் 2009 இல் அணுகப்பட்டது. (ஆங்கில மொழியில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.