கழுவுள்

காமூர் அரசன் கழுவுள். இப்போதுள்ள காங்கேயம் சங்ககாலத்துக் காமூர் என்பது தொல்லியல் அறிஞர்களின் துணிபு.

பெருஞ்சேரல் இரும்பொறை, ஆயர்களின் தலைவனான கழுவுளின் நாட்டைக் கைப்பற்றி அந்நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து சென்றான்.[1] பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடும் புலவரும் இதனைக் குறிப்பிடுகிறார்.[2]

கழுவுள் அரசன் காமூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இந்தக் காமூரை வேளிர் மன்னர்கள் 14 பேர் ஒருங்கிணைந்து தாக்கினர். அப்போது அந்தக் காமூர் மக்கள் செய்வது அறியாமல் கலங்கிநின்றனர். (தோழி! காதலர் காட்டுவழியில் செல்கிறார். அங்கே வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் கூடு கூடாகப் பூத்திருக்கும் 'இருப்பை'ப் பூ பாறையில் கொட்டுகிறது. அந்த வழியில் செல்லும் காதலரை எண்ணும்போது என் நெஞ்சம் கழுவுள் காமூர் கலங்கியது போலக் கலங்குகிறது - என்கிறாள், தலைவி ஒருத்தி) [3]

இவன் மாவண் கழுவுள் என்று போற்றப்படுவதால் சிறந்த கொடைவள்ளல் எனத் தெரிகிறது. இவனது காமூரில் வேங்கைப் பூ மணக்கும். அந்தப் பூக்கள் பூதம் (புயல்காற்று) கொண்டுவந்து போட்டவை.[4]

சான்று மேற்கோள்

  1. 8ஆம் பத்து பாடல் 71
  2. (பெருங்குன்றூர் கிழார் - பதிற்றுப்பத்து 88)
  3. பரணர் அகம் 135
  4. (மருதன் இளநாகனார் - அகம் 365)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.