சென்னையின் வரலாறு
சென்னை (Chennai) என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் தலைநகராகும். இந்நகரம் முதலில் மதராசு என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.[1] இது வங்கக்கடலோரம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 8.9 மில்லியன் மக்கள் தொகை உடையது. இது 400 ஆண்டுகள் பழமையான நகரம் ஆகும். இது உலகிலேயே 31 ஆவது பெரிய பெருநகரப் பகுதி ஆகும்.

மெட்ராஸ்-சென்னை
மெட்ராஸ் என்ற பெயரும் சென்னை என்ற பெயரும் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களின் பெயரில் இருந்துதான் தோன்றியது எனப் பரவலாக நம்பப்படுகின்றது. கிழக்கிந்திய கம்பெனி தாங்கள் குடியமர்வதற்காகத் தேர்வு செய்த இடத்தில் சென்னப்பட்டினம், மதராஸப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன. இந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான நிலப்பரப்பே தற்காலத்தில் சென்னை என்று அழைக்கப்படுகிறது.[2] கிருஷ்ணகிரி மாவட்டம் பெண்ணேஸ்வர மடம் என்னும் ஊரில் கி.பி. 1367 சூலை 21 இல் வெட்டப்பட்ட ஒரு பாறைக் கல்வெட்டில் சென்னையில் கடற்கரையை ஒட்டி இன்றும் அதே பெயரில் உள்ள பல இடங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன அதில் மாதரசன்பட்டணம் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]
தென் இந்தியாவின் பண்டைய பகுதி
முதலில் மதராசபட்டிணம் என அழைக்கப்பட்ட சென்னை, நெல்லூரிலுள்ள பெண்ணையாறு மற்றும் கடலூர் பெண்ணையாறு நதிகள் இடையே, தொண்டை மண்டலத்தில் அமைந்திருந்தது. அப்போது காஞ்சிபுரம் இதன் தலைநகரமாக இருந்தது. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தொண்டைமண்டலம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சோழ வம்சத்தின் பிரதிநிதியாக இருந்த தொண்டைமான் இளந்திரையனால் ஆட்சி செய்யப்பட்டது. இவன், தொண்டைமன்டலத்தின் ஆதி குடிகளான குரும்பர்களை அடக்கி தொண்டைமண்டலத்தில் தன் ஆட்சியை நிலைநாட்டியதாக நம்பப்படுகிறது.
புனித ஜார்ஜ் கோட்டையில் பிரித்தானியர் குடியேற்றம் காரணமாகவும், அதன் பின்னர் பல கிராமங்களை இணைத்து செய்யப்பட்ட விரிவாக்கம் மற்றும் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி குடியேறிய ஐரோப்பியர்களின் காரணமாகவும் நவீன "சென்னை" நகரம் உருவானது. ஐரோப்பியர்களால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதி கட்டப்பட்டிருந்தாலும், இதனைச் சுற்றியுள்ள பகுதியிகளில் பின்னர் செய்யப்பட்ட விரிவாக்கதில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் திருவான்மியூர் திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் கோயில்கள் இணைக்கப்பட்டன.
திருவான்மியூர், திருவொற்றியூர் மற்றும் திருமயிலை மூவர்களின் (நாயன்மார்) தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கையில், திருவல்லிக்கேணி ஆழ்வார்களின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
சோழ மற்றும் பல்லவ சாம்ரஜ்யம்
இளந்திரையனுக்குப் பிறகு, இந்தப் பகுதி சோழ இளவரசன் இளங்கிள்ளியால் ஆளப்பட்டு வந்தது.
இரண்டாம் புலிமாயியை (Pulumayi II) அரசானாகக்கொன்ட ஆந்திர சாதவாகனர்களின் ஊடுருவல்களால் தொண்டைமண்டலத்தில் சோழர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவர்கள் காஞ்சிபுரம் பகுதியை கவனிக்க தலைவர்களை நியமனம் செய்தனர். மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாதவாகனர் பேரரசின் கீழ் காஞ்சிபுரம் இருந்தபோது, அதன் தலைவனாக கருதப்பட்ட பப்பசுவாமி, ஏற்கனவே காஞ்சிபுரத்தில் (சுற்றியுல்ல ஒரு நிலப்பகுதிக்கு) ஒரு தலைவனாக இருந்தவன். அதுவரை சாதாரன இராஜப்பிரதிநிதிகளாக இருந்த பல்லவர்கள், பின்னர் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளின் சுதந்திரமான அரசர்களாக மாறினர்.
மேற்கோள்கள்
- "இன்று சென்னை நகரின் 376-வது பிறந்த தினம்". News 7 Tamil (2015 ஆகத்து 22). பார்த்த நாள் 2016 ஏப்ரல் 30.
- முகமது ஹுசைன் (2018 சூலை 21). "தெரு வாசகம்: போர்ச்சுகல் மெட்ராஸ், திராவிடச் சென்னை". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 27 சூலை 2018.
- எஸ. மே. ரமேஷ் (சூலை 26 2018). "பழமையான நகரம் 'மாதரசன்பட்டணம்' என்னும் சென்னை 651 வயதைக் கடந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் தகவல்". இந்து தமிழ்.