கந்தையா குணரத்தினம்

கந்தையா குணரத்தினம் (Kanthia Kunaratnam, 30 ஏப்ரல் 1934 – 9 செப்டம்பர் 2015) இலங்கைத் தமிழ் இயற்பியலாளரும், கல்வியாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் ஆவார்.[1]

பேராசிரியர்
கந்தையா குணரத்தினம்
பிறப்புஏப்ரல் 30, 1934(1934-04-30)
ஏழாலை, இலங்கை
இறப்பு9 செப்டம்பர் 2015(2015-09-09) (அகவை 81)
கொழும்பு, இலங்கை
இனம்இலங்கைத் தமிழர்
கல்வியூனியன் கல்லூரி, தெல்லிப்பழை
படித்த கல்வி நிறுவனங்கள்இலங்கைப் பல்கலைக்கழகம்
லண்டன் இம்பீரியல் கல்லூரி
பணிகல்விமான்
பட்டம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர்
பதவிக்காலம்ஏப்ரல் 1994 - பெப்ரவரி 1997
முன்னிருந்தவர்அ. துரைராஜா
பின் வந்தவர்பொ. பாலசுந்தரம்பிள்ளை

ஆரம்ப வாழ்க்கை

தெல்லிப்பழை, யூனியன் கல்லூரியில் கல்வி பயின்ற குணரத்தினம் 1954 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று 1958 இல் இயற்பியலில் சிறப்புப் பிரிவில் இளமாணிப் பட்டம் பெற்றார்.[2]

பணி

பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்னர் குணரத்தினம் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.[2] 1960 முதல் 1963 வரை லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பயின்று டிப்புளோமா பட்டத்தையும், கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.[2]

1971 சனவரி முதல் செப்டம்பர் வரை டர்காம் பல்கலைக்கழகத்தின் முதல் நிலவியல் பிரிவில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[2] 1971 அக்டோபர் முதல் டிசம்பர் வரை குயீன் எலிசபெத் கல்லூரியின் இயற்பியல் துறையில் வருகைதரு ஆய்வாளராகப் பணியாற்றினார்.[2]

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்ட போது யாழ்ப்பாண வளாகத்தின் இயற்பியல் பீடத்தின் நிறுவனத் தலைவராக ஏப்ரல் 1975 இல் குணரத்தினம் நியமிக்கப்பட்டார்.[3] 1980 அக்டோபர் வரை அவர் அதன் தலைவராகப் பணியாற்றினார்.[3] 1981 சனவரி முதல் அக்டோபர் வரை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத்தின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[2] பின்னர் இலங்கை திரும்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத் தலைவராக 1985 பெப்ரவரி வரை பணியாற்றினார்.[3] 1988 அக்டோபர் முதல் 1989 ஆகத்து வரை எடின்பரோ பல்கலைக்ழகத்தின் புவி இயற்பியல் பீடத்தில் வருகைதரு பேராசிரியராகவும், பின்னர் கேம்பிரிட்சுப் பல்கலைக்ழகத்தில் புவியறிவியல் பீடத்தில் சிறிது காலம் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.[2]

1991 சனவரி முதல் 1993 நவம்பர் வரை பேராசிரியர் குணரத்தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணினியறிவியல் துறையின் தலைவராகப் பணியாற்றினார்.[4]

பேராசிரியர் குணரத்தினம் 1977 சனவரி முதல் 1978 மே வரையும், பின்னர் 1985 சனவரி முதல் 1988 மார்ச்சு வரையும் யாழ்ப்பாணப் பல்கலைக்ழகத்தின் அறிவியல் பீடத் தலைவராகப் பணியாற்றினார்.[5] 1994 ஏப்ரல் முதல் 1997 பெப்ரவரி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றினார்.[6] 2000 ஏப்ரலில் பணியில் இருந்து இளைப்பாறினார்.[2] இறக்கும் வரை அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் "ஓய்வுபெற்ற" பேராசிரியராகப் பணியாற்றினார்.[7]

பேராசிரியர் குணரத்தினம் 1998 ஆம் ஆண்டில் அரச வானியல் கழகத்தின் ஆய்வாளராகவும், 1999 இல் இயற்பியல் கழகத்தின் உறுப்பினராகவும் இணைந்தார்.[2] 2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[2]

பேராசிரியர் குணரத்தினம் 2015 செப்டம்பர் 9 இல் கொழும்பில் காலமானார்.[8][9]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.