அய்கொளெ
ஐகொளெ அல்லது அய்கொளெ (Aihoḷe) கருநாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இவ்வூர் வரலாற்றுச் சிறப்புபெற்ற பழங்காலக் கோயில்களைக் கொண்டுள்ளது. பெங்களூருவிலிருந்து 510 கிமீ தொலைவில் அமைந்துள்ள அய்கொளெ. கிபி ஐந்தாம் நூற்றாண்டு காலத்திலிருந்து கட்டப்பட்ட 125 (கிட்டத்தட்ட) கற்கோயில்களைக் கொண்டு சாளுக்கிய கட்டிடபாணிக்குச் சான்றாக விளங்குகிறது. இது வடகருநாடகத்தின் முக்கியச் சுற்றுலாத் தலம். மலப்பிரபா ஆற்றின் திசையில் [[ பட்டடக்கல்லுக்குக் கிழக்கே அய்கொளெயும், பட்டடக்கல்லுக்கும் அய்கொளெக்கும் மேற்கில் பாதமியும் அமைந்துள்ளன. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக இவ்வூர் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலுள்ளது.[1]
அய்கொளெ ಐಹೊಳೆ | |
---|---|
சிற்றூர் | |
![]() அய்கொளெ நினைவுச் சின்னங்களின் தொகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பாகல்கோட் |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | கன்னடம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
அருகிலுள்ள நகரம் | பட்டடக்கல் |
வரலாறு
தொடக்ககால கல்வெட்டுக்களில் அய்கொளெயின் பெயரானது ”ஆரியபுரம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] கிபி 450களில் உருவாக்கப்பட்ட அய்கொளெ, சாளுக்கிய அரசர்களின் முதல் தலைநகரமாக இருந்தது. இங்குள்ள 125 பழங்காலக் கோயில்களில் சில, சாளுக்கியக் காலத்து கட்டிடக் கலைஞர்களால் சோதனை முயற்சியாகக் கட்டப்பட்டவை.[3] மெகுட்டி குன்றுகளுக்கருகிலுள்ள மொரெரா அங்கடிகாலுவில் (Morera Angadigalu) வரலாற்றுக்கும் முந்தைய ஆதாரங்கள் அதிகளவில் காணப்பட்டுள்ளன. சாளுக்கிய காலத்துக்கும் முந்தையகாலச் செங்கல் கட்டிடங்கள் இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க அய்கொளெ, ’இந்தியப் பாறை கட்டிடக்கலையின் தொட்டில்’ என அழைக்கப்படுகிறது.[4]
சாளுக்கிய அரசன் முதலாம் புலிகேசி தனது தலைநகரை அய்கொளெயிலிருந்து அருகிலுள்ள பாதாமிக்கு மாற்றினான். தற்போது பாதாமி என்றழைக்கப்பட்டும் இவ்வூர் அக்காலத்தில் வாதாபி என்றழைக்கப்பட்டது. அய்கொளெயில் கோயில்கள் அமைப்பதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு சாளுக்கியர்கள் பட்டடக்கல்லில் மேலும் மேம்பட்ட கோயில்களைக் கட்டினர்.
அய்கொளெ கோயில் கட்டிடங்களின் காலம் கிபி 5-6ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி 12 ஆம் நூற்றாண்டு வரை நீள்கிறது.[5][6]
அய்கொளெ கல்வெட்டுகள்

மேகுட்டி கோயிலிலுள்ள இரண்டாம் புலிகேசியின் புகழை எடுத்துரைக்கும் கல்வெட்டு ஒன்று மேகுட்டி கோயிலிலுள்ளது. இக்கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அரசரவைப் புலவர் இரவிகீர்த்தியினதாகும். கிபி 634 காலத்தைச் சேர்ந்த இக் கல்வெட்டு சமசுகிருத மொழியில் பழைய கன்னட எழுத்துருக்களைக்கொண்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு அய்கொளெ கல்வெட்டு என அழைக்கப்படுகிறது. இதில் ஹர்சவர்த்தனரை எதிர்த்து அடைந்த வெற்றி, பல்லவர்களை வென்றது, தலைநகரை அய்கொளெயிலிருந்து பாதாமிக்கு மாற்றியது போன்ற இரண்டாம் புலிகேசியின் சாதனைகள் பற்றிய குறிப்புகளும், காளிதாசர் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன.[7][8]
_at_the_Lad_Khan_temple_in_Aihole.jpg)
இரண்டாம் புலிகேசியால் அமைக்கப்பட்ட கல்வெட்டு (634 AD) ஒன்று அய்கொளெ ஜைனக் கோயிலில் உள்ளது. மகாபாரதப் போர் மற்றும் கலி யுகம் குறித்த விவரங்களுக்கு அறிஞர்கள் இக்கல்வெட்டை உறுதுணையாகக் கொள்கின்றனர்.[9] இக்கல்வெட்டில் சாளுக்கிய அரசன் மங்களேசன் காலசூரியர்களை வென்ற குறிப்பு உள்ளது. மேலும் பல்லவர்களுக்கும் வாதாபி சாளுக்கியர்களுக்கும் இடையே இருந்த எதிர்ப்புகள் பற்றிய குறிப்புகளும் இரண்டாம் புலிகேசிக்கும் மங்களேசனுக்கும் இடையே அரசுரிமை குறித்து நிகழ்ந்த உள்நாட்டுச் சண்டை மற்றும் அச்சண்டையின் விளைவாக முடிவுற்ற மங்களேசன் ஆட்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.[10]
அய்கொளெயில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் அமோகவர்சன் கல்வெட்டில் அவனது புது ஆட்சிமுறை பற்றிய குறிப்புகள் உள்ளன.[11]
முற்காலச் சாளுக்கிய கட்டிடபாணி

_in_the_Ravana_padhi_cave_temple_in_Aihole.jpg)
பண்டைய இந்துக் கோயில் கட்டிடக்கலையின் தொட்டிலாக அய்கொளெ கருதப்படுகிறது.[12] இங்கு 70 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. பல்வேறு பாணிகளில் கலைஞர்கள் கட்டிடங்கள் அமைப்பதற்கு சோதனை முயற்சிகளை மேற்கொண்டதை இங்குள்ள கட்டிடங்கள் காட்டுகின்றன. இங்குள்ள அக்காலக் கலைஞர்கள் அதிமுற்கால குடைவரைக் கோயில்களை உருவாக்கியுள்ளனர்[13] அய்கொளெயில் தொடங்கிய கலைஞர்களின் கட்டுமானத் திறன், முழுவளர்ச்சியடைந்த சாளுக்கிய பாணி கட்டிடக்கலையாக முழுமையடைந்துள்ளது.
சாளுக்கிய நாட்டிற்கு வடக்கிலும் தெற்கிலுமுள்ள நாட்டினரின் கட்டிட அமைப்புகளிலிருந்து, முற்காலச் சாளுக்கியர்கள் தங்களது கட்டிட பாணியை அமைத்துக் கொண்டனர்.[14] வட இந்தியபாணி வளைவு கோபுரங்கள், தாங்குபலகைகளுடன் அமைந்த தென்னிந்தியபாணி பூசப்பட்ட சுவர்கள், தக்காணப் பீடபூமியின் மேல்மாட அமருமிடங்கள், சரிவு இறவானங்கள், சாய்வு கூரைகள் மற்றும் வேலைப்பாடமைந்த தூண்களும் கூரைகளும் (George Michell,1997) சாளுக்கிய பாணி கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டன. காரையில்லாத இணைப்புகள், அகலத்தையும் உயரத்தையும் விட நீளத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தட்டையான கூரைகள், சிறந்த சிற்ப வேலைபாடுகளுடைய உட்கூரைகள், கூட்டமாக இன்றி தனித்தனியாக வடிக்கப்பட்ட, தனிப்பட்ட முக்கியத்துவமளிக்கப்பட்ட சில குறிப்பிட வடிவங்கள் ஆகியவை பாதாமி சாளுக்கியக் கட்டிடங்களின் தனித்துவ அமைப்புகளாக உள்ளன. சாளுக்கியகாலச் சிற்பங்களில் காணப்படும் தரமும், அழகுணர்ச்சியும் பிற்கால இந்தியக் கலைப்பாணியில் காணப்படவில்லை (Susan Huntington, 1985).
கோயில்கள்
இந்து கோயில்கள்

துர்க்கா கோயில்
துர்க்கா கோயில் அல்லது கோட்டை கோயில் என்றறியப்படும் () இக்கோயில், அய்கொளெயில் உள்ள கோயில்களில் நன்கறியப்பட்ட கோயிலாகும். புத்தமத சைத்திய அமைப்பில் உள்ள இக்கோயிலின் கருவறை மீது சிறு கோபுரமும், கருவறையைச் சுற்றி தூண்கள் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயில் முழுவதும் அழகான சிற்பங்கள் நிறைந்துள்ளன. இக்கோயிலின் காலம் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் இக்கோயில் வளாகத்தில் ஒரு சிற்ப அருங்காட்சியம் (Museum and Art Gallery) அமைக்கப்பட்டுள்ளது.
லாட் கான் கோயில்
லாட்கான் கோயில் அய்கொளெயில் உள்ள கோயில்கள் அனைத்திலும் காலத்தால் முந்தையது; ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.[12]) லாட் கான் கோயில் ஒரு கருவறையையும் அதன் முன்பமைந்த இரு மண்டபங்களையும் கொண்டுள்ளது.[15] கருவறைக்குள் இலிங்கத் திருவுருவம் காணப்படுகிறது. கருவறையின் முன்புள்ள முகப்பு மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடமைந்த 12 தூண்கள் உள்ளன. முகப்பு மண்டபத்துக்கு முன்புள்ள அவை மண்டபத்தின் தூண்கள், ஒரே மையம் கொண்ட இரு செவ்வகச் சுற்றமைப்பில் அமைந்துள்ளன. கூரைகளில் பூவடிவ வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஊராட்சிக் கூட வடிவமைப்பால், துவக்ககால கட்டுமானச் சோதனை முயற்சியாக இக்கோயில் உள்ளதாகக் கருதப்படுகிறது.
சாளரங்கள் சட்டப்பின்னல் வடிவில் வட இந்தியபாணியில் உள்ளன. இக்கோயில் சாளுக்கிய அரசர்களால் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலில் வசித்த லடா கான் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. துர்க்கா கோயிலுக்குத் தென்புறம் அமைந்துள்ளது. கருவறையும் அதன் முன்னமைந்துள்ள முகமண்டபம் மற்றும் அவை மண்டபம் இரண்டும் இக்கோயிலின் பின்புறச் சுவற்றில் அமைந்துள்ளன. மேற்கு, தெற்கு, கிழக்குச் சுவர்களில் அழகான வேலைப்பாடைமைந்த கற்சட்டப் பின்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவலிங்கம் அமைந்துள்ள கருவறையின் விட்டக்கல்லில் கருடனின் உருவமும், தட்டையான மேற்புறமுடைய நடுச் சதுரக்கூடத்தில் நந்தியும் அமைந்துள்ளன. நந்திக்கு நேர் மேலாக பிற்கால சேர்க்கையாகக் கருதப்படும் (கிபி 450 ) ஒரு நாகர வகை கோபுர வடிவமைப்பு சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இராவண பாடி குகை

இராவண பாடி குகை, அய்கொளெயில் அமைந்துள்ள மிகப்பழமையான குடைவரைக் கோயிலாகும்(). இக்கோயில் ஹூச்சமல்லி கோயிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் ஒரு செவ்வக வடிவக் கருவறையும் இரு மண்டபங்களும் உள்ளன. கருவறையில் இலிங்கம் காணப்படுகிறது. இது பாதாமி குடைவரைக் கோயில்களைவிடப் பெரிய கருவறை கொண்ட சைவக் குடைவரைக் கோயில். மூன்று வாயில்களும் சிற்ப வேலைப்பாடுடைய தூண்களும் கொண்ட நடைப்பகுதி ஒன்று கருவறையின் முன் உள்ளது. கோயில் சுவர்களில் நடனமாடும் சிவன் உள்ளிட்ட பல பெரியளவு உருவங்கள் காணப்படுகின்றன. அய்கொளெயில் உள்ள மூன்று குடைவரைக் கோயில்களில் சிவனுக்குரிய இக்கோயிலே மிகவும் அறியப்பட்டதாக உள்ளது.
ஜோதிர்லிங்க கோயில் தொகுதி
இராவணபாடி கோயிலுக்குத் தென்மேற்கில் சிறிது தொலைவில் ஜோதிர்லிங்க கோயில்கள் அமைந்துள்ளன. இங்கு தட்டையான மேற்கூரையுடன் முன்புறம் நந்தி மண்டபங்களுடன் இரு கோயில்கள் உள்ளன. மற்ற கோயில்களில் கருவறையும் முன்மண்டபங்களும் அமைந்துள்ளன. இரு கோயில்கள் கதம்பநாகர வகைக் கோபுரங்களைக் கொண்டுள்ளன. கல்யாணிச் சாளுக்கியர் காலக் கல்வெட்டுகள் இரு கோயில்களில் காணப்படுகின்றன. ஏனைய கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன[16].
குச்சப்பய்ய குடி
குச்சப்பய்ய குடி (Huchappayya (gudi) temple), அய்கொளெ கோட்டைக்குத் தென்புறம் மலப்பிரபா ஆற்றுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஹூச்சப்பய்ய கோயில் கருவறை மீதுள்ள கோபுரம் நகரா வடிவில் அமைந்துள்ளது. இது சிவனுக்குரிய கோயிலாக உள்ளது. நாகர அமைப்புக் கோபுரம் கொண்ட கருவறை, கூடம், முகமண்டபம் மற்றும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட உட்புறத்தையும் கொண்டுள்ளது. முகமண்டபத்திலும் கூடத்திலும் பல பெரிய சதுரவடிவத் தூண்கள் உள்ளன. முகமண்டபத் தூண்களில் ஆணும் பெண்ணும் இணைந்த சிற்பங்களும் மேற்புற உட்கூரையில் நடராசர் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கருவறையின் வெளிச்சுவரில் மூன்று மாடங்களில் நரசிம்மர் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் காலம் கிபி எட்டாம் நூற்றாண்டாகும்.
யேனியர் கோயில்கள்
அய்கொளெயின் தென்புறத்தில் மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ள யேனியர் கோயில் தொகுதியில் (Group of Yeniar Shrines) 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டு கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் உள்ளறை, கூடம் முகமண்டபம் என்ற அமைப்பைக் கொண்டுள்ளன.
இராமலிங்கம் கோயில்கள்
யேனியர் கோயில்களுக்குத் தென்புறத்தில் இராமலிங்க கோயில் தொகுதி (Ramalinga group of temples) அமைந்துள்ளது. இத்தொகுதியின் முதன்மைக் கோயில் இராமலிங்கம் கோயிலாகும். மூன்று கருவறைகள் கொண்டுள்ள இக்கோயிலில் இரண்டில் சிவலிங்கங்களும் மூன்றாவதில் பார்வதியின் உருவமும் உள்ளது. இக்கோயிலின் காலம் கிபி 11 ஆம் நூற்றாண்டாகும். மேற்கு நோக்கியமைந்த இரு கதம்பர் காலப் பாணிக் கோபுரங்களைக் கொண்டுள்ளது. இக்கோயிலில் ஒரு சிறு மசூதியுள்ளது. (ஆதாரம்: கர்நாடக மாநில அரசிதழ் 1983)
காளகநாதர் கோயில்

காளகநாதர் தொகுதி கோயில்கள் (Galaganatha group of temples) மலப்பிரபா ஆற்றங்கரையில் ஹூச்சியப்பக் கோயில் தொகுதிக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. 38 கோயில்களைக் கொண்டுள்ள இத்தொகுதியின் முதன்மைக்கோயில் காளகநாதர் (சிவன்) கோயிலாகும். இக்கோயிலின் கோபுரம் வளைகோட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் கங்கை மற்றும் யமுனையின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் காலம் கிபி எட்டாம் நூற்றாண்டு என அறியப்பட்டுள்ளது. கூடம், உள்நடை மற்றும் கருவறை கொண்டுள்ள காளகநாதர் கோயில் தவிர இத்தொகுதியின் பெரும்பாலான பிற கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. திரிகூடாச்சல அமைப்பில் (மூன்று அறைகள்) உள்ள பத்தாம் நூற்றாண்டுக் கோயில் ஒன்றும் இத்தொகுதியில் உள்ளது.
சூரியநாராயணர் கோயில்
சூரியநாராயணர் கோயிலில் குதிரைகள் இழுக்கும் தேரில், மனைவியர் உஷா, சந்தியாவுடன் சூரியனின் 0.6 மீ உயரச் சிலை அமைந்துள்ளது. இக்கோயில் 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நான்கு தூண்கள் கொண்ட கருவறையின் மேல் நாகர வகைக் கோபுரமும் உட்புறத்தில் இரண்டடி உயர சூரியன் சிலையும் காணப்படுகிறது. லாட்கான் கோயிலுக்கு வடகிழக்கில் இக்கோயிலுள்ளது.
சக்ரா குடி
லாட்கான் கோயில்கள் தொகுதிக்கு மேலும் சற்று தென்புறத்தில் சக்ரா குடி (Chakra Gudi) கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரு கூடமும் கருவறையும் உள்ளது. கருவறைமீதான கோபுரம் நாகர பாணியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் காலம் 9 ஆம் நூற்றாண்டாகக் கணிக்கப்பட்டுள்ளது.
குச்சிமல்லி கோயில்

குச்சிமல்லி கோயில் அல்லது குச்சிமல்லி குடி (Huchimalli (gudi) temple) கோயிலில் முதன்மைக் கருவறையையொட்டி அர்த்தமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இது கோயில் கட்டிட அமைப்புகளில் ஏற்பட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. இக்கோயில் அய்கொளெ கிராமத்தின் வடக்குப்பகுதியில், பயணியர் மாளிகைக்குப் பின்னால் அமைந்துள்ளது. கோயிலின் வெளிச்சுவர்கள் சட்டப்பின்னல் வடிவச் சாளரங்களைக் கொண்டுள்ளன. கருவறையின் மேற்கோபுரம் நாகர வகையைச் சேர்ந்தது. இக்கோயிலின் எதிர்ப்புறம் சிறிது தொலைவில் சிதிலமடைந்த ஒரு கோயில் காணப்படுகிறது.
- மேலும் சில இந்துக் கோயில்கள்
அய்கொளெயிலுள்ள மேலும் சில பழமையான இந்துக் கோயில்கள்
- படிகெர குடி (Badigera gudi)
- அம்பிகெர குடி (Ambigera Gudi)
- சிக்கி குடி (Chikkigudi Group)
- கௌடர் குடி (Gaudara gudi)
- ராச்சி குடி (Rachi gudi)
- குச்சப்பய்ய மடம் (Huchappayya Matha)
- காளபசப்பன்ன குடி (Halabasappana Gudi)
- கொண்டி குடி (Kontigudi group of temples),
- திரியம்பகேசுவரர் கோயில் (Triyambakeshvara Group)
ஜைனக் கோயில்கள்
- மேகுட்டி ஜைனக் கோயில்
மேகுட்டி ஜைனக் கோயில் (Meguti Jain temple) ஒரு சிறு குன்றின்மீது அமைந்துள்ளது. (). இக்கோயில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரருக்கான கோயிலாகும்.[17] கோயில் உயர மேடையொன்றின்மீது அமைந்துள்ளது. முகமண்டபத்துக்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைந்துள்ள முகமண்டபம் பெரியதாக உள்ளது. முதன்மைக் கருவறைக்கு மேல் கூரைமீதமைந்துள்ள மற்றொரு கருவறைக்குச் செல்வதற்கும் படிக்கட்டுகள் உள்ளன. இரண்டாம் புலிகேசியின் அவையிலிருந்த புலவர் இரவிகீர்த்தியால் இக்கோயில் கட்டப்பட்டது எனக் கோயில் வெளிச்சுவற்றில் காணப்படும் கிபி 634 ஆம் ஆண்டு கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது. காளிதாசர் மற்றும் பாரவி குறித்த குறிப்பும் இக்கல்வெட்டில் உள்ளது.
இக்கோயிலுக்கு தென்கிழக்கில் சிறிய ஜைனக் குகைக் கோயில் ஒன்றுள்ளது. அங்கு ஐந்தடி உயர பாகுபலி உருவம் கருவறையிலும், பிற தீர்த்தங்கரர்களின் உருவங்கள் சுவற்றிலும் காணப்படுகின்றன.
- ஜைனக் குகைக் கோயில்
ஜைனக் குகைக் கோயில் (Jain cave temple) பட்டடக்கல் அல்லது பாதாமியிலிருந்து அய்கொளேக்குள் நுழையும் பகுதியில் மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்குகைக்கு அருகிலுள்ள பாறையில் பழைய கன்னட எழுத்துருக்களில் அமைந்த கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
- "Evolution of Temple Architecture – Aihole-Badami- Pattadakal". UNESCO (2004). பார்த்த நாள் 21 October 2015.
- Encyclopaedia of the Hindu world, Volume 1 By Gaṅgā Rām Garg page 251
- Raghavan, Vikram K (13 May 2010). "Surviving the test of time". http://www.thehindu.com/arts/surviving-the-test-of-time/article427990.ece. பார்த்த நாள்: 31 March 2014.
- "Aihole's stories in stone". பார்த்த நாள் 2011-07-28.
- Sigfried J. de Laet and Joachim Herrmann, History of Humanity: From the seventh century B.C. to the seventh century A.D.. UNESCO, 1996.
- Reshma Rai, An Introduction of Naga, in Rajagriha
- "Message with Long Life: Indian Inscriptions". Dr. Jyotsna Kamat. பார்த்த நாள் 2009-05-05.
- "Aihole's stories in stone". பார்த்த நாள் 2013-05-02.
- "The Scientific Dating of the Mahabharat War, Aihole Inscription". Dr.P.V.Vartak. மூல முகவரியிலிருந்து 16 April 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-05.
- "EARLY CHALUKYAS". மூல முகவரியிலிருந்து 10 April 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-05.
- "Bombay-Karnataka Inscriptions, Volume I – Part I, Introduction". பார்த்த நாள் 2009-05-05.
- "Echoes from Chalukya caves". பார்த்த நாள் 2009-04-01.
- "ARCHITECTURE, The Chalukyan magnificence". மூல முகவரியிலிருந்து 10 May 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-01.
- Monuments of India, Part II, Early Chalukya, Aihole
- "Aihole, Lad Khan Temple". பார்த்த நாள் 2009-04-01.
- Jyotirlinga-Temple-Complex,-Aihole
- http://www.jainglory.com/research/meguti
13.கர்நாடக மாநில அரசிதழ் 1983.
வெளியிணைப்புகள்
![]() |
விக்கிப்பயணத்தில் அய்கொளெ என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
- Aihole temples
- Photos of Aihole temples
- Official site of Bagalkot District
- Aihole group of temples on Google Maps
- Aihole Galaganatha and Ramalingeshwara group of temples on Google Maps
- Sacred Landscapes in Early Medieval South India: the Chalukya state and society (ca. AD 550-750) - Aihole
- Photos of Aihole British Library Collection