2011 லிபிய உள்நாட்டுப் போர்

2011 லிபிய எழுச்சி அல்லது 2011 லிபிய உள்நாட்டுப் போர் என்பது லிபியா நாட்டில் அந்த நாட்டின் 40 ஆண்டுகளுக்கு மேலான சர்வதிகார ஆட்சியாளரான முஅம்மர் அல் கதாஃபியை எதிர்த்து நடத்தப்பட்ட எழுச்சி. தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களாக பெப்ரவரி 2011 நடுவில் தொடங்கிய இந்த எழுச்சி பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறி உள்நாட்டுப் போர் மூண்டது. கதாஃபிக்கு எதிரான தேசிய இடைக்காலப் பேரவையின் படைகள் கதாஃபியின் படைகளை நேட்டோ படைகளின் துணையுடன் தோற்கடித்து லிபியா முழுவதையும் கைப்பற்றியது. அக்டோபர் 2011 இல் கதாஃபி எதிர்ப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு கொலைசெய்யப்பட்டதுடன் லிபிய எழுச்சி முடிவடைந்ததாகக் கருதப்படுகிறது.

லிபியாவின் படைத்துறை ஒரு பக்கத்தினர் எழுச்சியாளர்களுக்கு ஆதரவு தந்தது. எனினும் படைத்துறையை விட பலம் பெற்றவர்களான கதாஃபியின் பாதுகாவலர் படை தலைநகரை காவல் காத்து கதாஃபிக்கு சார்பான வன்முறையில் ஈடுபட்டனர். மார்ச் தொடக்கத்தில் மேற்குநாடுகள் கதாஃபியை கடுமையாக கண்டித்து, அவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டனர். அவரது நிதிகளை முடக்கினர். பல்வேறு பொருளாதார படைத்துறை தடைகளை விதித்தனர். ஐ.அ, ஐ.இரா ஆகிய நாடுகள் தாம் படைத்துறை முறையாகவும் தலையிடலாம் என்று எச்சரித்தனர். ஐ.நா கதாஃபியைக் கண்டித்தது. உக்கிரமடைந்த போரைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்புச் அவை லிபியாவின் கதாஃபி அரசுக்கு எதிராக மார்ச் 18, 2011 அன்று தடை விதித்தது. மேலும் தேவைப்பட்ட படை நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் அறிவித்தன. தலைநகர் திரிபோலியும், அக்டோபர் 2011 இல் கதாஃபியின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான சிர்டே கைப்பற்றப்பட்டு கதாஃபி கொல்லப்பட்டார்.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.