காமேஸ்வரர் கோயில் (வேளாங்கண்ணி அருகில்)

சகஸ்ரநாமம் பாடல் பெற்ற
அருள்மிகு ஸ்ரீ காமேஸ்வரர்(காமதேனீஸ்வரர்) ஆலயம்
புவியியல் ஆள்கூற்று:10.61°N 79.83°E / 10.61; 79.83
பெயர்
பெயர்:அருள்மிகு ஸ்ரீ காமேஸ்வரர்(காமதேனீஸ்வரர்) ஆலயம்
அமைவிடம்
ஊர்:காமேஸ்வரம் (நாகை - வேதாரண்யம் சாலையில், வேளாங்கண்ணி யிலிருந்து 8 கி.மி)
மாவட்டம்:நாகப்பட்டினம் மாவட்டம்(திருப்பூண்டி கிழக்கு) அஞ்சல் கீழ்வேளுர் வட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீ காமேஸ்வரர், ஸ்ரீகாமதேனீஸ்வரர்
தாயார்:ஸ்ரீ காமேஸ்வரி, ஸ்ரீகாமாட்சி
தல விருட்சம்:கொன்றை மற்றும் வில்வம்
தீர்த்தம்:சந்திரநதி(அந்தரியாமியாக உள்ளது), வங்கக்கடல் - சந்திரநதி முழுக்குத்துறை, திருக்குளம், கீரனேரி தீர்த்தவாரி.
சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, சூரிய பூஜை(பங்குனி 16 முதல் 23 முடிய), பிரதோஷங்கள், மற்ற உற்சவங்கள் அனைத்தும்
பாடல்
பாடல் வகை:சகஸ்ரநாமம்
பாடியவர்கள்:அகத்திய முனிவர்(ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கி.மு.235-கி.பி.220
அமைத்தவர்:(கடைச்சங்க காலச் சோழ மன்னர்)

அமைவிடம்

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தில்லையாடிக்கு மேற்கில் திருவிளையாட்டத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். [1] தற்போது முருகன் தலமாகப் பெயர் பெற்றுள்ளது. சுப்பிரமணியக் கடவுள் மூலத்தானத்தில் உள்ளார்.இத்தலத்திற்கு மகிழவனம் என்ற பெயருண்டு. [2]

வரலாறு

கலைஞான கல்வியும் நிறைவான வயதும்நல் கருத்துளோர் அன்பு நட்பும்
களிப்பூட்டும் வளமையும் இனிப்பூட்டும் இளமையும் கருதுநல மான உடலும்
நிலையான மனமும் அன்பான மனைவியும்(கணவரும்) நேரிய சந்தானமும்
நீர்மையுறு கீர்த்தியும் சீர்மையுறு வார்த்தையும் நிம்மதி கொடுக்கும் கொடையும்
மலைபோலும் நிதியமும் உனதன்பர் செங்கோலும் உவப்பான நல்ல வாழ்வும்
மலரும்நின் பாதத்தில் பேரன்பும் ஈந்துதவி மாத்தொண்டர் கூட்டும் தாராய்!
கலைஞானக் கண்ணனின் கனிவான தங்கையே காமேசு வரத்தின் வாழ்வே!
காமேசு வரரது இடப்பாகம் நிலைபெற்ற காமாட்சி அன்னை உமையே!! -- கவிஞர் கோவி. குப்புசாமி,காமேஸ்வரம்

காமேஸ்வரமாகிய இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறந்த ஊர். சந்திரநதி கடலொடு சங்கமிக்கும் புனித தலம்.

சிறப்புகள்

அரிச்சந்திரன் ஸ்தாபித்தல்

இராமபிரானுக்கு 32ம் பாட்டனான அரிச்சந்திரன் வசிட்டர், விஸ்வாமித்திரர் ஆகிய பிரம ரிஷிகளின் அறவுரைகளின்படி இங்கு வந்து கடல்நீராடி சிவலிங்க ஸ்தாபனம் செய்து வழிபட்டுத் தான் புலைத்தொழில் செய்த பாவத்தைப் போக்கிக் கொண்டார்.

விநாயகர் அவதரித்தல்

விநாயகரின் தோற்றம் பற்றிய புராணச் செய்திகளில் கீழ்கண்ட வரலாறும் ஒன்று. சிவபிரான் நெற்றிக்கண் பட்டு மன்மதன் எரியும் போது அவன் உடம்பிலிருந்து பண்டாசுரன் தோன்றுகிறான். அவன் அட்டகாசம் தாங்க முடியாத தேவர்கள் இறைவியிடம் முறையிட, அம்பிகை லலிதாம்பிகையாக மாறி அவனை அழிக்க முயல்கின்றாள். பண்டாசுரன் தனக்குக் கவசமாக விக்னயந்திரத்தை வைத்திருந்ததால் அழிக்க முடியவில்லை. அன்னை இங்கு வந்து தன் பர்த்தாவான ஸ்ரீகாமேஸ்வரரை அன்புடன் பார்த்தார். அத்திருநோக்கால் வினாயகர் தோன்றி விக்னயந்திரத்தை அழித்து அன்னையின் பேரன்புக்குப் பாத்திரமானார். இதனை அகத்திய மாமுனிவர் தனது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில்
காமேச்வர முகாலோக கல்பித ஸ்ரீகணேச்வரா” (77ஆம் திருநாமம்) என்றும்
மஹாகணேச நிர்பின்ன விக்னயந்திரப்ரஹர்ஷசிதா”(78ஆம் திருநாமம்) என்றும்

அம்பிகையைப் போற்றுவதால் அறியலாம். இதன் மூலம் வினாயகர் இத்தலத்தில்தான் அவதரித்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

காசிக்கு வீசம் பெரியது

மகாபாரத யுத்தத்தில் அம்பு பட்டுச் சரப்படுக்கையிலிருந்த பிதாமகர் பீஷ்மர் தன் உயிர் போன பின், தனது அஸ்தியைக் கரைக்கச் சென்றால், இந்தப் பாரத பூமியில் எங்கு அது மலர்களாகத் தோன்றுகிறதோ அங்கே கரையுங்கள். அந்த ஷேத்திரம் காசியை விட மேன்மையான ஊர் என்கிறார். அவரது அஸ்தியைப் பண்டவர்கள் காசி முதற்கொண்டு தேசம் முழுதும் கொண்டு செல்லும் போது,சந்திர நதி கடலில் சங்கமிக்கும் இந்தத் தலத்தில் மலர்களாக மாறியது. எனவே இங்கே கடலில் கரைத்துஇறைவனை மீண்டும் வழிபட்டு, அஸ்தினாபுரம் சென்று முடி சூட்டிக் கொண்டனர். அதனால்தான் காசிக்கு வீசம் (1/16) கூட காமேஸ்வரம் எனப்படுகிறது.

கட்டிடத் தொன்மை

வடநாட்டுச் சாதவாகனர்கள் காலத்தில்(கி.மு.235-கி.பி.220) வைதிக சமயம் புத்துயிர் பெற்றது. அப்போது கடைச்சங்க காலச் சோழ மன்னர்களால் முழுவதும் செங்கற்களால் கலை வேலைபாடுகளுடன் கட்டப்பட்ட கோயில். கட்டிட வேலைபாடு மிகவும் தேர்ந்த செங்கல் சிற்பியால் அமைக்கப் பட்டுள்ளது. இவ்வளவு காலம் ஆகியும் வேலைபாடுகள் அப்படியே இருப்பது மிக மிக அற்புதம்.


வழிபட்டோர்

கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர்கள்

துர்வாச முனிவரிடமிருந்து கோவில்பத்து என்னும் ஊரில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் தப்பித்த பாண்டவர்கள், பிதுர்கடன் செலுத்த இத்தலத்திற்கு வரும்போது இத்தலத்தில் வாசம் செய்த அமித்திர முனிவரின் உணவான நெல்லிக்காயை(ஆம்லகம்) விழுந்தமாவடியில் பறித்த சாபத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் மறுபடியும் மீண்டு, அம்முனிவரின் ஆசியும் இங்கே பெற்றனர். பின்பு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவுடன் ஸ்ரீ காமேஸ்வரரை வணங்கி, கடற்கரையில் தர்ப்பணம் செய்து பிதுர்கடன்செலுத்தியுள்ளனர்.

இராமபிரான்

இராமபிரான் அகத்திய முனிவருடன் வழிபட்ட சதுரேஸ்வரங்கள் இராமேஸ்வரம்,காமேஸ்வரம், தர்ப்பேஸ்வரம்(திருப்புல்லாணி) மற்றும் (திருவாரூர் கேக்கரை) குருவி இராமேஸ்வரம் நான்கினுள் இத்தலமும் ஒன்று. இங்கு அகத்தியர் மறுபடியும் இராமருடன் வந்து ஆலய வழிபாடு செய்துள்ளார். இராமபிரான் லிங்கம் அமைத்து வழிபட்டுத் தர்ப்பணம் செய்துள்ளார். வழிபாடு செய்த இடம் இன்றும் லிங்கத்தடி(இராமன் குட்டை) என்று அழைக்கப்படுகிறது.

மன்மதன்

மன்மதன் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிவபெருமான் மீது மலரம்பு எய்தான். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த தீயால் மன்மதன் எரிந்து போனான். அவனது மனைவி இரதிதேவியின் வேண்டுதலால் மகேஸ்வரன் மீண்டும் காமனை உயிர்ப்பித்தார். காமன் தான் செய்த பாவத்தைப் போக்க வேண்டுகிறான். சிவபெருமான் இத்தலத் திருக்குளத்தில் நீராடித் தன்னை வழிபட்டால் பாவம் நீங்கும் எனக் கூறுகின்றார். அதன்படி காமன் வந்து இங்கு வழிபட்டுத் தன் பாவங்களைப் போக்கிக் கொண்டான். காமன் வழிபட்டதால் இறைவன் ஸ்ரீ காமேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். இறைவி ஸ்ரீ காமேஸ்வரி என்றும் ஸ்ரீ காமாட்சி என்றும் பெயர் பெற்றார். ஊரின் பெயரும் காமேஸ்வரம் ஆயிற்று.

காமதேனு

அகத்தியர் இங்கு இறைவனை வழிபட்ட போது தெய்வப்பசு காமதேனுவும் இறைவனை வணங்கி அகத்தியருக்கு உணவு படைத்துள்ளது. காமதேனு வழிபட்டதால் இறைவன் ஸ்ரீ காமதேனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

அகத்தியர்

அகத்தியர் வேதாரண்யம் செல்லும் வழியில் இங்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டு, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் இயற்றிப் போற்றியுள்ளார். அதில் ‘காமேச்வர’ என்கிற பதம் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் 5 இடங்களிலும், ஸ்ரீ லலிதா த்ரிசதீ நாமாவளியில் 14 இடங்களிலும் வருகின்றது. காமாட்சி என்கிற பதம் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு இடத்திலும், ஸ்ரீ லலிதா த்ரிசதீ நாமாவளியில் ‘காமேச்வரி’ என்கிற பதம் ஒரு இடத்திலும் வருகின்றது.

நக்கீரர்

“ நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என இறைவனுடன் வாதிட்ட நக்கீரர் நெற்றிக்கண்ணால் பாதிக்கப்பட்ட காமன் இங்கு வந்து வழிபட்டுத் தன் பாவம் போக்கியதை அறிந்து கொண்டு,தானும் வணங்கிப் பேரருள் பெற்றார். அதன் காரணமாக இத்தல மக்கள் என்றும் நலம் பெறச் சந்திரநதியின் குறுக்கே தடுப்பணையாக ஏரியை வெட்டி, ஆற்றுநீர் வீணாகக் கடலில் சென்று கலக்காதவாறு தடுத்துப் பயிர்வளம் பெருக உதவிச் சாதனை செய்துள்ளார். ஏரி இன்றும் கீரனேரி என அழைக்கப்படுகிறது. மேலும் தைப்பூசத்தில் சந்திரநதி – கீரனேரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
  2. திருவிடைக்கழி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.