வான் டீமனின் நிலம்
வான் டீமனின் நிலம் (Van Diemen's Land) என்பது ஆஸ்திரேலியாவின் தற்போதைய மாநிலமான தாஸ்மானியா தீவிற்கு ஆரம்பத்தில் ஐரோப்பியர்கள் வைத்த பெயராகும். டச்சு நாடுகாண் பயணி ஏபல் டாஸ்மான் தாஸ்மானியாவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநரான அந்தனி வான் டீமனின் நினைவாக டாஸ்மான் இத்தீவிற்கு "வான் டீமனின் நிலம்" எனப் பெயரிட்டார்.
![]() 1852 இல் வான் டீமனின் நிலத்தின் தோற்றம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தெற்குப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 42°00′S 147°00′E |
உயர்ந்த புள்ளி | ஓசா மலை |
நிர்வாகம் | |
ஐக்கிய இராச்சியம் | |
பெரிய குடியிருப்பு | ஹோபார்ட் |
மக்கள் | |
மக்கள்தொகை | 40,000 (1855) |
இனக்குழுக்கள் | தாஸ்மானிய பழங்குடிகள் |
1803 இல் இத்தீவு பிரித்தானியரினால் குற்றவாளிகளின் குடியேற்றமாக மாற்றப்பட்ட போது இது பிரித்தானியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் பகுதியாக வான் டீமனின் நிலம் என்ற பெயரில் இணைக்கப்பட்டது. 1824 ஆம் ஆண்டில் இத்தீவு நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டு தனியான குடியேற்றப் பிரதேசமாக மாற்றப்பட்டது. 1856 ஆம் ஆண்டில் இப்பிரதேசம் சுயாட்சி கொண்ட தனியான நாடாளுமன்றதைக் கொண்ட நாடாக ஆக்கப்பட்டு அதற்கு தாஸ்மானியா என்ற பெயரும் இடப்பட்டது.
குற்றவாளிகளின் குடியேற்றப் பிரதேசம்
1830களில் இருந்து 1853 ஆம் ஆண்டில் குற்றவாளிகள் அனுப்பப்படுவது நிறுத்தப்படும் வரையில் வான் டீமனின் நிலமே ஆஸ்திரேலியாவின் முக்கிய குடியேற்ற நாடாக இருந்தது. மொத்தமாக 75,000 குற்றவாளிகள் இத்தீவிற்கு அனுப்பப்பட்டனர். இது ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகளின் 40 விழுக்காடு ஆகும்.

ஆண் குற்றவாளிகள் பல்வேறு தொழில்களிலும் நியமிக்கப்பட்டனர். கடுமையான குற்றவாளிகள் டாஸ்மான் தீபகற்பத்தில் உள்ள சிறையில் (போர்ட் ஆர்தர்) வைக்கப்பட்டனர்.
பெண்கள் ஏனைய விடுதலை பெற்ற குடியேறிகளின் வீடுகளில் வேலைக்காக அனுப்பப்பட்டனர். அல்லது பெண்களுக்கான தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். வான் டீமனின் நிலத்தில் மொத்தம் ஐந்து பெண்கள் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
விடுதலை பெற்ற பலர் தீவை விட்டு விலகி விக்டோரியாவில் குடியேறினர். இதனால் விக்டோரியாவில் ஏற்கனவே குடியேறியிருந்த குடியேற்றவாசிகளுக்கும் வான் டீமனில் இருந்து வந்தவர்களுக்கும் இடையில் அடிக்கடி கலகங்கள் ஏற்படலாயின.