ரவி வர்மா

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.

ராஜா ரவி வர்மா
பிறப்புஏப்ரல் 29, 1848
கிளிமானூர், திருவிதாங்கூர்
இறப்புஅக்டோபர் 2, 1906(1906-10-02) (அகவை 58)
கிளிமானூர்
இந்தியா
பணிஓவியர்
கையொப்பம்

வாழ்க்கைக் குறிப்பு

ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா - நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.

ஓவியக்கலையில் ஈடுபாடு

ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார்.அவரிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார் .தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்து கொண்டார்.[1] சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்.

எண்ணெய் வண்ண ஓவியக்கலை

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 1870 - 1880 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்.[2]

மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894 இல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899 இல் அச்சகத்தை ஸ்லிஷர் (Slisher) நகரத்துக்கு மாற்றினார். 1906 இல் தமது 58ஆவது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

புகழ்பெற்ற ஓவியங்கள்

1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது"[3].

ரவிவர்மா குறித்த விமரிசனங்கள்

இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது ஓவியங்களில் வெறும் கதை சொல்லும் (illustrative) தன்மையும், உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான் காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல் செய்யும், இந்தியக் கலையியலைப் புறக்கணித்த ஓவியர் என்றும் குறைகூறினார்கள். அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட பிரதி ஓவியங்கள் 'கேலண்டர் ஓவியர்' என்று அவரை கொச்சைப் படுத்தப் பயன்பட்டன. மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி இந்திய வண்ண உத்தியை அவர் அவமதித்ததாகக் கூடக் குறிப்பிட்டார்கள்.[4]

இரவி வர்மா வரைந்த படங்கள் சிலவற்றின் வரிசை

குறிப்புகள்

  1. "காவிய ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்த தின சிறப்பு பகிர்வு". Vikatan. 30 december 2016. http://www.vikatan.com/news/coverstory/27361.html. பார்த்த நாள்: 15 February 2017.
  2. ராஜா ரவிவர்மா - டாக்டர் ஜெயபாரதி (TSCயில்)
  3. ராஜா இரவிவர்மா (பரம்பரைச் சொத்தைப் பாதுகாத்தல்)
  4. ராஜா இரவிவர்மா

வெளி இணைப்புகள்

ரவி வர்மாவின் ஓவியங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.