எண்ணெய்
எண்ணெய் என்பது முனைவுத்தன்மையற்ற (nonpolar), சூழல் வெப்பநிலையில் பிசுக்குமை தன்மை கொண்ட நீர்மமாக இருக்கும் ஒரு வேதிப்பொருள் ஆகும். இது நீரில் கரையாததும், கொழுமியங்களில் கரையும் தன்மை கொண்டதுமாகும். இவை உயர் கார்பன், ஐதரசன் அளவைக் கொண்டிருப்பதுடன், இலகுவில் எரியும் தன்மை (flammable) கொண்டதாகவும், மேற்பரப்புச் செயலியாகத் தொழிற்படுவதாகவும் (Surfactant) காணப்படும்.
இது முதலில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறித்தது எனினும், இப்போது எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டது.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலையெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என வெவ்வேறு அடைபெற்று வெவ்வேறு வகை எண்ணெய்களைக் குறிக்கின்றது. நிலத்தடியினின்று தோண்டி எடுக்கப்பட்ட எண்ணெயும் பாறைநெய் அல்லது பாறை எண்ணெய் என வழங்கப்படும்.
எண்ணெய் வகைகள்
தமிழர்களின் அன்றாட வாழ்வில் இடம் பிடித்திருக்கும் மிக முக்கியமான உணவுப்பொருள் எண்ணெய் ஆகும். அந்த எண்ணெய் பல வகைப்படும்.அவை எண்ணெய் வித்துக்களில் இருந்து பெறப்படுகின்றன.
எண்ணெய் வித்துக்கள்
- எள்
- ஆமணக்கு
- வேம்பு
- புன்னை
- இலுப்பை
- தேங்காய்
- நிலக்கடலை
- பனை
- சூரியகாந்தி
நல்லெண்ணெய்
எண்ணெய் என்பது எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை மட்டுமே முதலில் குறித்தது. கிறிஸ்துவின் சம காலத்திலும் அதற்கு முன்னரும் நல்லெண்ணெய் தமிழர் சமையலில் பயன்பட்டு வந்துள்ளது.
விளக்கெண்ணெய்
ஆமணக்கு விதையினைச் செக்கிலிட்டு பெறப்படும் எண்ணெய் விளக்கெண்ணெயாகும். இது தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
புன்னை எண்ணெய்
புன்னை மரத்தின் விதைகளில் இருந்து புன்னை எண்ணெய் பெறப்படுகிறது. இது விளக்கு எரிக்க பயன்படுகிறது.
மணிலா எண்ணெய்
நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மணிலா எண்ணெய் என அழைக்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய்
தென்னை மரத்தில் இருந்து பெறப்படும் தேங்காயை வெயிலில் இட்டு காய வைத்து, செக்கிலிட்டு ஆட்டி பெறப்படும் எண்ணெய் தேங்காய் எண்ணெயாகும்.
மேற்கோள்கள்
- அறியப்படாத தமிழகம்