யூ. ஆர். ஜீவரத்தினம்
யூ. ஆர். ஜீவரத்தினம் (U. R. Jeevarathinam, 1927 செப்டம்பர் 14[1] - 2000, சூலை 26) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
யூ. ஆர். ஜீவரத்தினம் | |
---|---|
![]() 1948 ஸ்ரீ ஆண்டாள் திரைப்படத்தில் யூ. ஆர். ஜீவரத்தினம் | |
பிறப்பு | செப்டம்பர் 14, 1927 ஊஞ்சலூர், ஈரோடு, சென்னை மாகாணம், ![]() |
இறப்பு | 26 சூலை 2000 72) மந்தைவெளி, சென்னை | (அகவை
பணி | பாடகி, நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1937 - 1956 |
பெற்றோர் | சுப்பிரமணியம், குஞ்சம்மாள் |
வாழ்க்கைத் துணை | டி. எஸ். வெங்கடசுவாமி |
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாடு ஈரோடில் சுப்பிரமணியம், குஞ்சம்மாள் ஆகியோருக்குப் பிறந்த ஜீவரத்தினம், அவரது 9வது வயதிலேயே சென்னையில் கிருஷ்ணையா நாடகக் கம்பனியில் சேர்ந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜீவரத்தினம் கைலாச பாகவதர், குன்னக்குடி வெங்கட்ராமையர் போன்றோரிடம் பல ஆண்டுகள் முறையாக இசைப் பயிற்சி பெற்றார்.
1937 ஆம் ஆண்டில் வெளிவந்த மாடன் தியேட்டர்சின் சதி அகல்யா என்ற படத்தில் தேவலோகப் பெண்ணாகத் தோன்றினார். தொடர்ந்து பத்ம ஜோதி (1937), தாயுமானவர் (1938), சந்தனத்தேவன் (1939), ராக யோகம், சதி மகானந்தா, உத்தம புத்திரன், சத்தியவாணி, பரசுராமர் (1940) போன்ற படங்களில் நடித்தார். பக்த கௌரி திரைப்படத்தில் இவர் பாடி நடித்த தெருவில் வாராண்டி வேலன்.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கண்ணகி (1942) படத்தில் கௌந்தியடிகள் வேடத்தில் நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில் இவர் பாடிய மாநில மீதில் ஜீவகள் வாழும் வாழ்விது நாடகமாகும், பூதலம் புகழும் ஜோதி ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இத்திரைப்படத்தில் மாதவியாக நடித்த எம். எஸ். சரோஜாவுக்கு ஜீவரத்தினம் பின்னணி பாடியிருந்தார்.
திருவாரூரில் கண்ணகி படத்தின் பொன்விழா கொண்டாடிய போது சுவாமி தினகர் ஜீவரத்தினத்துக்கு இசைக்குயில் என்ற பட்டம் அளித்தார்.
தொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் முதல் திரைப்படமான பூம்பாவை (1944), ஜெகதல பிரதாபன், ராஜராஜேஸ்வரி (1944), என் மகன் (1945), வால்மீகி ஸ்ரீ முருகன் (1946) போன்ற படங்களில் நடித்தார்.
1945 இல் டி. எஸ். வெங்கட்சாமி என்பவரைத் திருமணம் முடித்தார். 70களில் நாடகங்களில் ஜீவரத்தினம் நடித்துப் பாடிக் கொண்டிருந்தார். 1971 ஆம் ஆண்டு கணவர் இறந்ததும் ஜீவரத்தினம் ஒருவரே குடும்பத்தை சுமக்க வேண்டியிருந்தது. டி. ஆர். மகாலிங்கம், திருச்சி லோகநாதன் போன்றோர்களுடன் ஜீவரத்தினம் பாடி பல நாடகங்களில் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
- சதி அகல்யா
- பத்மஜோதி
- தாயுமானவர்
- சந்தனத்தேவன்
- ராஜயோகம்
- சதி மகானந்தா
- உத்தம புத்திரன்
- சத்தியவாணி
- பரசுராமர்
- பக்த கௌரி
- கண்ணகி
- பூம்பாவை
- ஜகதலப் பிரதாபன்
- ராஜ ராஜேஸ்வரி
- என் மகன்
- வால்மீகி
- ஸ்ரீ முருகன்
- அபிமன்யூ
- ஸ்ரீ ஆண்டாள்
- போன மச்சான் திரும்பி வந்தான் (1954)
- வாழ்விலே ஒரு நாள் (1956)
உசாத்துணைகள்
- மோனா, திரை இசை மேதைகள் - யூ. ஆர். ஜீவரத்தினம், வீரகேசரி, திசம்பர் 18, 2011
- Article on U. R. Jeevarathinam
- ராண்டார் கை (January 22, 2010). "Bhaktha Gowri 1941". தி இந்து. http://www.hindu.com/cp/2010/01/22/stories/2010012250401600.htm.