தியாகராசா பரதராசன்
கப்டன் மொறிஸ் (செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989, மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை) என்ற புனைபெயரைக் கொண்ட பரதரராஜன் தியாகராஜா ஒரு விடுதலைப் புலி போராளியாவார். இவர் தனது பதினைந்தாவது வயதில், 1984இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, ஐந்து ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். குறுகிய காலப் பகுதியில் அளப்பரிய இயக்கப் பணிகளாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர்[1] ஆனார். மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் மரணம் அடைந்தார்.[2],[3]
கப்டன் மொறிஸ் | |
---|---|
கப்டன் மொறிஸ் | |
பிறப்பு | செப்டெம்பர் 12, 1969 ஆத்தியடி, புலோலி மேற்கு, பருத்தித்துறை,தமிழீழம் |
இறப்பு | மே 1, 1989 ஆத்தியடி, பருத்தித்துறை |
தேசியம் | ஈழத்தமிழர் |
மற்ற பெயர்கள் | M.O (Mines Operator) |
பணி | புலிகளின் போராளி, பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் |
குடும்பப் பின்னணி
இவர் தியாகராஜா மற்றும் சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஆறாவது புதல்வன். இவரது தந்தை சபாபதிப்பிள்ளை தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். இவரது அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். இவரது தம்பி மயூரன், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராவார். மயூரன் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் நவம்பர் 11, 1993 இல் மரணமடைந்தார்.
கல்வி
மொறிஸ் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையிலும் கற்றார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைதல்
1984 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.[4] 1983 இல் தென்னிலங்கையில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து போராளிகளின் படகோட்டியாக இருந்த மறைந்த பொலிகண்டி கணேஸ்மாமா உடனான சந்திப்பும் இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையக் காரணமாகக் கருதப்படுகிறது.
இயக்கப் பணிகள்
ஆரம்ப காலங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் போராளிகளின் தாக்குதல்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். பருத்தித்துறை, தம்பசெட்டி வீதியால் சென்று கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் வாகனத்திற்கு ´கிரனைட்´ எறிந்து அவர்களின் ரோந்து நடவடிக்கையைத் தடை செய்ததால்,[3] மேலிடத்தின் உடனடிக் கவனத்துக்கு உள்ளாகி சில முக்கிய பதவிகளைப் பெற்றார்.
- 1985 இல் தொண்டைமானாற்றில் போராளிகளின் காவல் தரிப்பில் ஈடுபட்டு இராணுவம் கடல் வழியாக உள்ளே நுழையாமல் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.
- அந்தக் காலகட்டத்திலேயே போராளிகளுக்கான விசேட இராணுவப் பயிற்சியைப் பெற்று முதல் தடவையாக பூநகரித் தாக்குதலில் பங்கேற்று நெருப்புக் காயங்களுக்கு ஆளாகி யாழ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.
- 1986 இல் பருத்தித்துறை, கலட்டிப் பகுதியில் நியாய விலைக் கடை ஆரம்பித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் ஊர்மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை வழங்கியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்குத் தேவையான பணத்தைத் திரட்ட உதவிகள் புரிந்தார்.
- 1987 இல் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. போர்ச்சூழலினால் நீதி மன்றங்கள் இயங்காமல் இருந்த காரணத்தினால் அமைப்பு சார்பான கிராம நீதிமன்றங்களை நிறுவி, மக்களின் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்து வைக்கும் பணியிலும் அவர் பெரு வெற்றி கண்டிருந்தார்.
- 1988 இல் மொறிஸ் இந்திய இராணுவத்தினரின் பெரும் தேடுதலுக்கும் ஆளானார். இதனால் 1987 - 1988 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல தாக்குதல்களை ஈடுபட்டுள்ளார்.
மறைவு
1989, மே முதலாம் நாள், இந்திய அமைதிப் படையுடனான மோதலில் உயிரிழந்தார்.[5] இவருடன் லெப்.றம்போ மற்றும் வீரவேங்கை சிறீ ஆகியோரும் உயிரிழந்தனர்.