மேலக்காவேரி வரதராஜப்பெருமாள் கோயில்
மேலக்காவேரி வரதராஜப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரி என்னும் இடத்தில் அமைந்துள்ள வைணவக் கோயிலாகும். [1]

அமைவிடம்
இக்கோயில் மேலக்காவேரியில் அமைந்துள்ளது.
அமைப்பு
நுழைவாயிலிலுள்ள ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம் காணப்படுகிறது. அடுத்துள்ள மண்டபத்தையடுத்து கருவறை உள்ளது. கருவறையில் மூலவர் வரதராஜப்பெருமாள் உள்ளார். அம் மண்டபத்தின் இடது புறத்தில் சீனிவாசப்பெருமாள், நம்மாழ்வார், ராமானுஜர், மதங்க மகரிஷி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் அனுமார் சன்னதியும், பெருந்தேவித்தாயார் சன்னதியும் உள்ளன.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் வரதராஜப்பெருமாள் ஆவார். இறைவி பூமிநீளாப்பெருந்தேவி ஆவார்.
12 கருட சேவை
கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். [2] [3]
குடமுழுக்கு
21 மார்ச் 2005 திங்கட்கிழமை (தாரண வருடம் பங்குனி 8ஆம் நாள்) மற்றும் 2 நவம்பர் 2015 திங்கட்கிழமை (மன்மத வருடம் ஐப்பசி 16) ஆகிய நாள்களில் குடமுழுக்கு நடைபெற்றது.