மாலிக் கபூர்

மாலிக் கபூர் [இறப்பு: 1316] தில்லியை ஆண்ட அலாவுதீன் கில்சியின் தலைமைப் படைத்தலைவர். அலாவுதீன் கில்சி குசராத்து மீது படையெடுத்து சோமநாதர் ஆலயத்தையும் இடித்துத் தள்ள ஆணையிட்டார். அப்போது குசராத்தை ஆண்டு கொண்டு இருந்தவர் வகேலா குல மன்னர், இரண்டாம் கர்ணதேவன். கில்ஜியின் படைகள் உலுக்கான் என்ற படைத்தலைவர் தலைமையில் 24. 02. 1299ல் குசராத்தை கைப்பற்றிதுடன், சோமநாதபுரம் கோயிலையும் சுவடு தெரியாமல் அழித்தனர். மேலும் குசராத்து மன்னரின் பட்டத்து அரசி கமலா தேவி மற்றும் அவளது பணிப்பெண்ணையும் (திருநங்கை), கில்ஜியின் படைத்தலைவர்கள் கைப்பற்றி தில்லி சுல்தான் கில்ஜியிடம் ஒப்படைத்தனர். குசராத் மன்னரின் மனைவியை கில்ஜி, இசுலாமிய மதத்திற்கு மத மாற்றம் செய்து மணந்து கொண்டார். அரசியின் பணிப்பெண்னான திருநங்கையையும் மதமாற்றம் செய்து ’மாலிக் கபூர்’ என்று இசுலாமிய பெயர் சூட்டினார்.

வாழ்வின் இறுதி காலத்தில் மாலிக் கபூர்

மத குருக்களின் எதிர்ப்பை மீறி, மாலிக்கபூருடன் கில்ஜி நெருங்கிய நட்பும் உறவும் கொண்டிருந்தார். மாலிக் கபூருக்கு முதலில் சிறு படைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாலிக் கபூர் விரைவாக கில்ஜியின் படையில் வேகமாக உயர்ந்து 10,000 படைவீரர்கள் கொண்ட படைஅணிக்கு படைத்தலைவரானார்.

வடமேற்கு இந்திய படையெடுப்புகள்

வடமேற்கு இந்தியாவை கைப்பற்றி இருந்த, யாராலும் வெல்ல முடியாத மங்கோலியா படைவீரர்களை 1305 மற்றும் 1306 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடந்த போர்களில் வென்று சாதனை படைத்தார்.

தென்னிந்திய படையெடுப்புகள்

மாலிக் கபூர் இரண்டு முறை தென்னிந்தியா மீது படையெடுத்தார். முதலில் 1309ல் தேவகிரி மீது படையெடுத்து வென்றார். தேவகிரி மன்னர் இராமச்சந்திரனின் குசராத் பகுதியையும் அவரின் மகள் இளவரசியுமான சோதி என்பவளையும் பரிசாக பெற்று கில்ஜியிடம் ஒப்படைத்தார்.

1311ல் மாலிக் கபூர் வாரங்கல் நாட்டை ஆண்டு கொண்டிருந்த காகாதீய குல மன்னர் பிரதாப் ருத்ர தேவனை வென்று, தில்லி சுல்தானுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி பணித்தார். அத்துடன் நில்லாது, ஹொய்சாலப் பேரரசை கைப்பற்றி ஹம்பி பகுதிகளில் இருந்த ஹோய்சாலேஸ்வரர் கோவில், கேதாரேஸ்வரர் கோயில் போன்ற போசளர் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்துக் கோயில்களை பாழடித்தார்.

உலகப்புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை வாரங்கல் அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார். பின்பு மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.

இசுலாமிய வரலாற்று அறிஞரான சியாவுதின் பருணியின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார். தில்லி சுல்தான் அலாவூதின் கில்ஜி, மாலிக் கபூரின் வெற்றிகளையும், கைப்பற்றிய தென்னிந்த்திய செல்வங்களைக் கண்டு பாராட்டி, மாலிக் கபூருக்கு தில்லி சுல்தானகத்தின் “தலைமைப் படைத்தலைவர்” பதவி வழங்கி பாராட்டினார்.

இறப்பு

அலாவுதீன் கில்ச்சிக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவர் படுக்கையில் வீழ்ந்தார். பின்னர் அவருக்கு நினைவாற்றல் குறையத் தொடங்கியது. இதனைப் பயன்படத்தி மாலிக் காபூர் கில்ச்சியின் வாரிசுகளைக் குருடாக்கி விட்டு அவர்களில் மீதம் இருந்த ஒரு சிறுவனை மன்னனாக்கி நாட்டை ஆளத்தொடங்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த கில்ச்சியின் விசுவாசிகள் இரவில் படுக்கையில் இருந்த மாலிக் காபூரைத் தாக்கிக் கொன்றனர்[1].

உசாத்துணை

இதனையும் காண்க

  1. எஸ். ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக். 206-207, மதுரையைச் சூறையாடிய மாலிக் காபூர்: விகடன் பிரசுரம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.