மனோன்மணீயம்
மனோன்மணீயம் என்பது ஒரு நாடக நூல் ஆகும். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையாக இது போற்றப்படுகிறது. முழுவதும் செய்யுள் நடையிலேயே அமைந்துள்ள இந்நூல் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளையால் எழுதி 1891 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
லிட்டன் பிரபு என்னும் ஆங்கிலேயர் எழுதிய ”இரகசிய வழி” (The secret way) எனும் நூலைத் தழுவி மனோன்மணீயத்தை ஓர் இன்பியல் (comedy) நாடகமாக இதனை எழுதியுள்ளார் சுந்தரம்பிள்ளை[1]. வரலாற்றுத் தொடர்புடையது போன்றும் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்றும் எழுதப்பட்டுள்ள ஒரு கற்பனைப் புதினம் ஆகும்.
வரலாறு
சுந்தரனார் 1877-78 இல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம் பிரம்ம கீதை, சூதசம்ஹிதை, பெருந்திரட்டு ஆகியவை காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் "பரமாத்துவித" என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தை எழுதினார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதனை எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திருத்தங்கள் செய்து கொண்டார்[2].
இந்த நாடகம், பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள "நீராருங் கடலுடுத்த நிலமடந்தை" என்ற பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம், மற்றும் அனைத்து தமிழர் வாழும் இடங்களில் ஒலிக்கிறது.
பதிப்புகள்
பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1922 ஆம் ஆண்டில் இதனை மீள்பதிப்பித்தார்[3].
மேற்கோள்கள்
- மனம் கவரும் மனோன்மணீயம், கவிஞர் மா. உலகநாதன், தினமணி, ஏப்ரல் 11, 2010
-
- "மனோன்மணீயம்" சுந்தரனார், முனைவர் கி. முப்பால்மணி, தினமணி
- மதுரைத்திட்டத்தில் எஸ். வையாபுரிப்பிள்ளையின் “இலக்கிய தீபம்”