ம. திருமலை
ம. திருமலை என்பவர் தமிழறிஞர், பேராசிரியர், திறனாய்வாளர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார்.
பிறப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் தும்முசினம்பட்டி எனும் கிராமத்தில் ம. திருமலை பிறந்தார்.
கல்வி
இவர் மதுரை மாவட்டம், சோழவந்தானில் பள்ளிப் படிப்பையும், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் செயகாந்தன், தகழி சிவசங்கரன் பிள்ளை நாவல்கள் ஒப்பாய்வு என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியற் புலத்தில் உள்ள ஒப்பிலக்கியத்துறையில் விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பிப்ரவரி 10 2012 முதல் பிப்ரவரி 9 2015 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.