பவானி சங்கமேசுவரர் கோயில்

பவானி சங்கமேசுவரர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தமிழ்நாடு, திருநணா (பவானி) என்னும் ஊரில் உள்ளது. பவானி சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. இறைவன் பெயர் சங்கமேஸ்வரர், இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகை.

கூடுதுறை கோயில்
தேவாரம் பாடல் பெற்ற
பவானி சங்கமேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:பவானி
மாவட்டம்:ஈரோடு
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்)
தாயார்:வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி
தல விருட்சம்:இலந்தை
தீர்த்தம்:காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம்
ஆகமம்:காரண ஆகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

கோவில் அமைப்பு

பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். (சங்கமம்-கூடுதல்). பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம்.

சிறப்புகள்

1804 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் கலெக்டராக இருந்த வில்லியம் காரோ ஆபத்து வேளையில் தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோவில் அம்மனுக்குக் காணிக்கையாக அளித்த தந்தக் கட்டில் ஒன்று இங்கு உள்ளது. அதில் அவரது கையொப்பமும் உள்ளது. இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது. கோவிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன. அவர்களது பாடல்களில் இவ்விடம் ’திருநாணா’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

தொன்நம்பிக்கைகள்

இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.