பதினாறு வயதினிலே
பதினாறு வயதினிலே தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பம் ஒன்றை உருவாக்கியது, முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் நடிப்பில், 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது.
பதினாறு வயதினிலே | |
---|---|
![]() | |
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எஸ். ஏ. ராஜ்கன்னு |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி ரஜினிகாந்த் காந்திமதி |
ஒளிப்பதிவு | பி. எஸ். நிவாஷ் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
விநியோகம் | ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 15, 1977 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படம் தெலுங்கில் '16 வயசு' மற்றும் இந்தியில் 'சொல்வ சவன்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது, ஸ்ரீதேவி அனைத்து மொழியிலும் கதாநாயகியாக நடித்தார், ஸ்ரீதேவியின் முதல் இந்தி மொழி திரைப்பட கதாநாயகி அறிமுகமாகும்.
நடிகர்கள்
வகை
கதைச் சுருக்கம்
கிராமத்துச் சூழலில் அமைந்த இக்கதையில் கமலஹாசன் சப்பாணி என்னும் கைவிளங்காதவன் வேடமேற்று வெள்ளந்தியான குணசித்திரப் பாத்திரத்தில் நடித்திருந்தார். கிராமத்திலேயே மிக அதிகம் படித்தவளாக, 'பத்தாம் வகுப்பு தேர்ச்சி'யாகி விட்ட மயிலிடம் (ஸ்ரீதேவி) ஒரு தலைக் காதல் கொண்டிருக்கிறார். அவளோ கிராமத்திற்கு வரும் மருத்துவ இளைஞனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவன் காதலிப்பது தன்னையல்ல, தனது பதினாறு வயதையே என்று அவள் உணர்கையில், அவளது தாய் இறக்கிறாள். அனாதையாக நிற்கும் மயிலுக்கு தானே ஆதரவாக சப்பாணி துணை நிற்கிறான்.
ஒரு முறை மயிலிடம் அவமானப்படுகிற பரட்டை (ரஜனிகாந்த்) அவளது பெண்மையைச் சூறையாட முயல்கையில், ஓணானைக் கூட கொல்வதைப் பார்க்கச் சகிக்காத சப்பாணி, ஆத்திரமிகுதியில் பரட்டையைக் கொலை செய்ய, கைதாகிச் செல்லும் அவனுக்காக காத்திருக்கிறாள் மயில்.
படத்தின் சிறப்பம்சங்கள்
கிராமத்துக் கதைகள் எத்தனையோ முன்னர் இந்திய, குறிப்பாக தமிழ்த் திரையில், வந்திருப்பினும், முதன் முதலாக கிராமத்திற்கே சென்று படம் பிடிக்கப்பட்டது "பதினாறு வயதினிலே". படப்பிடிப்பு அரங்குகளில், கிராமத்துச் சூழலை அமைத்துப் படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் முதன்முறையாக, இயற்கையான வெளிப்புறச் சூழலிலேயே அநேகமாக முழுப்படமும் எடுக்கப்பட்டது அக்கால கட்டத்தில் புதுமையான ஒன்றாகவும், ஒரு புத்துணர்வு சூழலை உருவாக்குவதாகவும் அமைந்தது. இத்திரைப்படத்தை ஒட்டி, கிராமத்துக் கதைகள் வெளிப்புறப்படப்படப்பிடிப்பில் எடுக்கப்படுவதான ஒரு சகாப்தமே உருவாகிவிட்டது எனலாம்.
படத்தின் நடிகர்கள் முன்பே பெயர் பெற்றிருப்பினும் அவர்களை இப்படம் பெரும் புகழுக்கு உரித்தவர்களாக்கியது. வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறிக் கொண்டிருந்த கமலஹாசன் இத்திரைப்படத்தில் கவர்ச்சியற்ற ஒரு பாத்திரத்தில் நடித்ததன் மூலம், எத்தகைய குணச்சித்திரத்தையும் தாம் ஏற்று நடிக்க வல்லவர் என நிரூபித்தார். கமலஹாசனின் நடிப்பாற்றல் விஸ்வரூபம் எடுத்தமைக்கு இப்படமே அடிக்கல் நாட்டியது என்றால் மிகையாகாது. இதில் அவர் ஏற்ற பாத்திரம் வெளிப்பார்வைக்கு பாகப்பிரிவினை என்னும் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஏற்று நடித்த பாத்திரத்தை ஒத்திருப்பினும், அதன் பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்திய கமலஹாசன் சிவாஜி கணேசனின் கலை வாரிசு என்று ஏற்கப்படத் துவங்கியதற்கு பதினாறு வயதினிலே திரைப்படம் பிள்ளையார் சுழியிட்டது.
இதைப் போலவே, கதாநாயகியாக முன்னரே மூன்று முடிச்சு போன்றவற்றில் அறிமுகமாகி விட்டாலும், பாத்திரத்தின் தன்மைக்கேற்ற நடிப்பாற்றலை வழங்குவதில் தனக்குள்ள ஆற்றலை நிரூபிக்க ஸ்ரீதேவிக்கு இது மிக அருமையான ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. வில்லன் நடிப்பில் ரஜினிகாந்திற்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது இப்படமேயாகும். இதில் அவர் பேசும் ஒரு வசனமாகிய "இது எப்பிடி இருக்கு?" என்பது பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகிப் பலராலும் பேசப்பட்டது. பின்னர், இப்பெயரில் ஒரு திரைப்படமே வெளிவந்தது.
கிராமியக் கதை கொண்ட படங்களில் தன் ஆளுமையை இளையராஜா வெளிக்கொணர்ந்த முதன்மையான படங்களில் இதுவும் ஒன்று. அன்னக்கிளி படத்திற்குப் பிறகு, முழுவதும் கிராமிய இசையில் அமைந்த "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு", "மஞ்சக்குளிச்சு" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாயின.
பல காலமாகத் திரைப்படங்களில் பாடிவந்த எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றது, இத்திரைப்படத்தில் அவர் பாடிய "செந்தூரப் பூவே" என்னும் பாடலின் மூலம்தான்.
மலேசியா வாசுதேவன் ஒரு முன்னணி (பின்னணி) பாடகராக பரிணாமம் பெற்றது இத்திரைப்படப் பாடல்களைப் பாடிய பிறகுதான்.
விருதுகள்
தேசிய விருதுகள்
- சிறந்த பாடகிக்கான தேசிய விருது - எஸ். ஜானகி
பிலிம்பேர் விருதுகள்
- சிறந்த நடிகர் - கமல்ஹாசன்
தமிழக அரசின் திரைப்பட விருதுகள்
- சிறந்த இயக்குநர் – பாரதிராஜா
- சிறந்த நடிகர் – கமல்ஹாசன்
- சிறந்த பின்னணிப் பாடகி – எஸ். ஜானகி
- சிறந்த இசையமைப்பாளர் – இளையராஜா
பாடல்கள்
இத்திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[1]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம்(நி:நொ) |
1 | ஆட்டுக்குட்டி | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | கண்ணதாசன் | 4:20 |
2 | சோளம் விதைக்கையில | இளையராஜா | கண்ணதாசன் | 4:34 |
3 | மஞ்சக்குளிச்சு | எஸ். ஜானகி | ஆலங்குடி சோமு | 4:26 |
4 | செந்தூரப் பூவே | எஸ். ஜானகி | கங்கை அமரன் | 3:33 |
5 | செந்தூரப் பூவே (சோகம்) | எஸ். ஜானகி | 0:40 | |
6 | செவ்வந்தி பூவெடுத்த | மலேசியா வாசுதேவன், பிரியங்கா. சுசீலா | கண்ணதாசன் | 4:34 |
மேற்கோள்கள்
- "16 Vayathinile songs". Raaga. மூல முகவரியிலிருந்து 2013-12-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014 நவம்பர் 25.