நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத் தமிழ் நாட்டு அரசியல்வாதி. இவர் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளை எனும் ஊரில் மளிகைக் கடை வைத்திருந்த இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த பாஸ்கரன் - கோமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.[1][2] பின்னர் 2016 ஜனவரி 2ஆம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[3]

நாஞ்சில் சம்பத்
விக்கிரமசிங்கபுரத்தில் ஸ்ரீ நாராயணகுரு பற்றி பேசிய போது எடுத்த படம்
பிறப்புபா. சம்பத்
மணக்காவிளை,
கன்னியாகுமரி மாவட்டம்,
 இந்தியா.
இருப்பிடம்மணக்காவிளை,
கன்னியாகுமரி மாவட்டம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நாஞ்சில் சம்பத்
கல்விமுதுகலைப் பட்டம்
பணிஅரசியல்வாதி
அறியப்படுவதுபேச்சாளர்,
எழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்பாஸ்கரன் (தந்தை),
கோமதி (தாய்)
வாழ்க்கைத்
துணை
சசிகலா
பிள்ளைகள்மதிவதனி (மகள்),
சரத் பாஸ்கரன் (மகன்)

கல்வி

இவர் தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை புனித மரியா கொரற்றி மேல்நிலை பள்ளியில் படித்தார். தனது பட்டப்படிப்பை நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் படித்தார்.

குடும்பம்

நாஞ்சில் சம்பத்தின் மனைவி பெயர் சசிகலா. இவர்களுக்கு மதிவதனி, சரத் பாஸ்கரன் என இரு குழந்தைகள் உள்ளனர்.

பேச்சாளர்

சிறு வயதிலேயே பேச்சில் சிறந்த விளங்கிய இவர் திமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்தார். பின்னர் வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது இவரும் வெளியேறினார். தமிழக இலக்கிய அரங்கில் முக்கிய பேச்சாளராகவும் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக சிறந்த பேச்சாளராகவும் இருக்கிறார். அதிமுக, திமுக போன்ற ஆட்சிகளில் போடப்பட்ட வழக்குகளில் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார். கடந்த மார்ச் 1, 2009 அன்று திருப்பூரில் ‘நாதியற்றவனா தமிழன்?’ என்ற தலைப்பில், அனைத்து மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசினார்.[4] அதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாஞ்சில் சம்பத்துக்காக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார்.

எழுதியுள்ள நூல்கள்

  1. இலக்கியப் பூங்கா
  2. பதிலுக்குப் பதில்
  3. பேசப் பெரிதும் இனியவன்
  4. என்னைத் தொட்ட என்.எஸ்.கே.
  5. நான் பேச நினைத்ததெல்லாம்...

கருத்து வேறுபாடு

இலங்கை அதிபர் ராஜபக்சே, சாஞ்சிக்கு வந்த போது, அங்கு செல்ல நாஞ்சில் சம்பத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் அதைத் தவிர்த்து துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்று விட்டதால், வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத்துக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.[5] இதனால், மதிமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறக் கூடும் என செய்திகள் வெளியாகின. ஆனால், மதிமுகவிலிருந்து தாமாக வெளியேறப் போவதில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறியதால், கட்சித் தலைமை அவரை நீக்கலாம் என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.[6] இதைத் தொடர்ந்து, அவர் அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

அரசியல் விலகல்

டி. டி. வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சம்பத், தினகரன் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைத் தொடங்கிய போது, அந்த அமைப்பின் பெயரில் திராவிடம் மற்றும் அண்ணா என்னும் பெயர்கள் இல்லாததால், அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இடத்தில் தனக்கு வேலை இல்லை எனக்கூறி இனி அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறினார்.[7]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.