தொல்மானிடவியல்

தொல்மானிடவியல் (Paleoanthropology) என்பது, தொல்லுயிரியல், பௌதீக மானிடவியல் ஆகிய துறைகளின் சேர்க்கையும், அவற்றின் துணைத் துறையும் ஆகும். மனித குலத்தின் குறிப்பிட்ட இயல்புகளின் வளர்ச்சி அவற்றின் உருவாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன் புதைபடிவங்கள், கற்கருவிகள், தொல்பொருட்கள், குடியேற்றச் சூழல் என்பவற்றை ஆய்வு செய்வதன் மூலம், ஒமினிடே குடும்பத்தின் உறவுமுறைத் தொடர்புகளை மீட்டுருவாக்கம் செய்வதும் இத்துறையின் கீழ் அடங்கும்.[1][2] தொழில்நுட்பங்களும், வழிமுறைகளும் வளர்ச்சியடைந்துவரும் நிலையில், தொல்மானிடவியல் ஆய்வுகளில் மரபியல் பெரும் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக, இனங்களின் கூர்ப்பு தொடர்பான உறவுமுறை வழிகளை ஆய்வு செய்வதில், டி.என்.ஏ அமைப்புக்களைச் சோதிப்பதும், ஒப்பிடுவதும், முக்கிய ஆய்வு முறைகளாக உள்ளன.

புதைபடிவ ஒமினிட் மண்டையோடுகள் ஐக்கிய அமெரிக்காவின் ஒக்லகோமா நகரில் உள்ள எலும்பியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொல்மானிடவியலின் வரலாறு

18ம் நூற்றாண்டு

1758ல் கார்ல் லின்னேயசு ஓமோ சப்பியன்சு என்பதைத் தனது சிஸ்டெமா நச்சுரே என்னும் நூலின் 10வது பதிப்பில் ஒரு இனப்பெயராக அறிமுகப்படுத்தினார். ஆனாலும் இனத்தின் சிறப்பு இயல்புகள் குறித்த அறிவியல் விளக்கத்தை அவர் தரவில்லை.[3] உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு பெரும் மனிதக் குரங்குகள் மனிதனுக்கு நெருக்கமான உறவுடையவை எனக் கருதப்பட்டன.

19ம் நூற்றாண்டு

19ம் நூற்றாண்டின் இறுதியில் மனிதக் கூர்ப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு வழிவகுத்த முக்கிய கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தொல்மானிடவியல் சார்ந்த அறிவியல் தொடங்கியது. செருமனியில் நீன்டர்தால்களின் கண்டுபிடிப்பு, தாமசு அக்சுலியின் (Thomas Huxley) இயற்கையில் மனிதனின் இடம் குறித்த சான்றுகள் (Evidence as to Man's Place in Nature), சார்லசு டார்வினின் மனிதனின் மரபுவழி (The Descent of Man) ஆகியவை தொடக்க காலத்தின் முக்கியமான ஆய்வுகள்.

நீன்டர்தால் மனிதனின் கண்டுபிடிப்பு, குகை மனிதன் தொடர்பான சான்றுகள் ஆகியவற்றுடன் 19ம் நூற்றாண்டில் நவீன தொல்மானிடவியல் துறை தொடங்கியது. மனிதர்கள் பெரும் மனிதக் குரங்குகளுடன் ஒத்த தன்மையைக் கொண்டவர்கள் மக்களுக்கு சில காலமாகவே தெரிந்திருந்தது. ஆனாலும், பொதுவான இனங்களின் உயிரியல் கூர்ப்பு தொடர்பான கருத்து 1859ல் சார்ல்சு டார்வினின் இனங்களின் தோற்றம் குறித்து (On the Origin of Species) என்னும் நூல் வெளியாகும்வரை முறையாக உணரப்படவில்லை.

தாமசு அக்சுலிக்கும், ரிச்சார்டு ஒவனுக்கும் இடையிலான வாதங்கள் மனிதக் கூர்ப்பு என்னும் எண்ணக்கரு பற்றியதாகவே இருந்தன. அக்சுலி தனது 1863ம் ஆண்டின் நூலில் மனிதனுக்கும், மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் வேறுபாடுகள் என்பன குறித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விளக்கியிருந்தார். டார்வினின் மனிதனின் மரபுவழி என்னும் நூல் வெளியாகியபோது அது அவரது கோட்பாட்டின் பெரிதும் அறியப்பட்ட விளக்கமாக இருந்தது. அத்துடன் அதன் விளக்கம் அவரது கோட்பாட்டைப் பெரும் சர்ச்சைக்கு உரியதாக ஆக்கியது. டார்வினின் சில ஆதரவாளர்கள் கூட (ஆல்பிரட் ரசல் வலசு, சார்ல்சு லயெல் போன்றோர்) இயற்கைத் தேர்வு முறையில் மனிதன் அவனது எல்லையில்லா மூளைத் திறனையும், ஒழுக்க உணர்வுகளையும் பெற்று வளர்ச்சியடைந்திருக்க முடியும் என்பதை ஏற்கப் பின்னின்றனர்.

மேற்கோள்கள்

  1. "paleoanthropology". Oxford University Press. பார்த்த நாள் October 1, 2015.
  2. "paleoanthropology". Dictionary com LLC. பார்த்த நாள் October 1, 2015.
  3. "Caroli Linnæi Systema naturæ". Biodiversity Heritage Library. பார்த்த நாள் September 27, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.