தமிழர் பாலியல் வழக்கங்கள்

பாலியல் வாழ்வின் ஒரு இயல்பான செயற்பாடு. ஒவ்வொரு சமூகத்துக்குமிடையே பாலியல் நோக்கிய அணுகுமுறைகள் அல்லது வழக்கங்கள் சற்று வேறுபடும். இந்தக் கட்டுரை தமிழ்ச் சூழலில் காணப்படும் பாலியல் வழக்கங்களைப் பற்றியதாகும்.

பாலியல் தொடர்பான திறந்த கதையாடல்கள் தமிழ்ச் சூழலில் இன்னும் ஆழமாக நடைபெறவில்லை. மேற்கத்தைய பாலியல் புரட்சி போன்று தமிழ்ச் சூழலில் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும் இன்றைய உலகமய ஊடகங்களும், பழந்தமிழர் பாலியல் முறைகள் பற்றிய அலசலும் இன்று பாலியல் தொடர்பான ஒரு கதையாடலைத் தமிழர் மத்தியில் தோன்றிவித்துள்ளது.

கருத்தாக்கங்களும் முரண்களும்

கோயிலில் காம நிலைகளில் கடவுள் சிற்பங்கள் வடிமைக்கப்படுள்ளன. தமிழிலக்கியத்தில் காதல், களவு, காமம் ஆகியவை சிறப்பாக கூறப்பட்டுள்ளன. 1800 ஆம் ஆண்டுக்கு பின்னரே ஆண்களும் பெண்களும் மேற்சட்டை அணியும் வழக்கம் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டது.[1] இப்படியிருக்க பாலியல் குறித்து ஒரு தணிக்கை தற்காலத் தமிழ்ச் சூழலில் காணப்படுகிறது.

தமிழர் வரலாற்றில் பெண்ணுக்கு கண்டிப்பான கற்பு, குடும்பம் போன்ற ஒழுக்க விதிகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆண்களுக்கு அப்படி இருக்கவில்லை. எனினும் "பாலியலை இயற்கையான தூண்டுதலாக தமிழர்கள் நோக்கியிருக்கிறார்கள் என்பது எட்டுத் தொகையையும், பத்துப்பாட்டையும் வாசிக்கும்போது புரிகிறது. அதனை தீயது, பாவம், அசிங்கம் என்று ஒதுக்கும் போக்கு அன்று இல்லை. ஆனால், அப்படியான ஒரு பார்வை பின்னாளில் வருவதற்கான அடையாளங்களையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை."

சங்க காலம் தொடர்ந்து சமணமும் பெளத்தமும் தமிழ்நாட்டில் நிலைபெற்றன. இவை ஒரு ஆணின் ஆத்ம விடுதலைக்கு பெண்ணை ஒரு தடைக்கல்லாக, தூய்மையற்றவளாக கருதின.

அதன் பின் வந்த பல நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் நிலையான அரசு இல்லாததால் "பெண்கொள்ளை என்பது ஓர் அன்றாட நிகழ்வாக நடந்த அக்காலகட்டத்தில் வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைத்தலும், குழந்தை மணமும் உருவானது. பெண்ணுக்கான இன்றைய நடத்தைக் கட்டுப்பாடுகள் அவ்வாறு உருவானவை." [2] மேலும் ஆங்கிலேயரின் வருகை பின்பு அவர்களின் "விக்டோரியன் மொராலிட்டி" இங்கு வந்தது.[2] அது தமிழரிடையே இருந்த நிர்வாணம், காமம் போன்றவை மனித இயல்புகளாக கருதக்கூடிய பார்வையை ஆபாசம் என்று மாற்ற உந்தியது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தியல் ஒழுக்கம் தமிழ் சினிமா, இந்து சமயம் போன்ற சமூக நிறுவனங்களால் முன்னிறுத்தப்படுகின்றது. விதவை மறுமணம் போன்ற முற்போக்கான போக்குகளும், மணவிலக்கு செய்து மறுமணம் செய்வோரும், பல காதலர்களைக் கொள்ளும் வழக்கமும் ஏற்பட்டு வருவதாலும் நடைமுறையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தியல் ஒழுக்கம் பலருக்கு பொருந்துவதில்லை.

திருமணத்துக்கு முந்திய அல்லது வெளியேயான உடலுறவு தமிழ்ச் சமூகத்தில் கருத்தியல் நோக்கில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. நடைமுறையில் அந்த நடத்தைகள் மறைமுகமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சிறுபான்மை பாலுறவு இயல்புகளின் அங்கீகாரம்

தமிழ்ச் சமூகம் ஓரினச்சேர்க்கை, இருபால்சேர்க்கை போன்ற பாலுறவுகளையும், திருநங்கைகளையும் முழுமையாக ஏற்கவில்லை, அங்கீகரிக்கவில்லை. மேற்குநாட்டு சமூகங்களில் இடம் பெறும் கதையாடல்களும் தமிழ்ச் சூழலில் இடம் பெறவில்லை. பொதுவாக இவை தமிழ் பண்பாட்டுக்கு புறம்பானவை அல்லது ஏற்கத்தகாதவை என்ற கருத்தே இருக்கின்றது. இருப்பினும் ஆவணப் பத்திரத்தில் மாறிய பாலினம் (Third Gender) என்ற தெரிவை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் முடிவு ஒரு மாற்றத்தை பிரதிபலிக்கின்றது.[3] விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் இப்படிக்கு ரோஸ் என்ற திருநங்கை தொகுப்பாளராக விழங்கும் நிகழ்ச்சியும் ஒரு முக்கிய மாற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.[4]

மாறிவரும் பாலியல் பற்றி பார்வைகள்

பாலியல் தொடர்பாக தமிழர் கருத்துகள் பற்றி விரிவான ஆய்வுகள் உள்ளனவா என்று அறிய முடியவில்லை. பொதுவாக தமிழ்ச் சமூகம் 'விக்டோரியன் மொராலிட்டி’[2] அல்லது conservative மன்ப்பான்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஒருவருக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் "உயர்ந்த விழுமியாக" கருதப்படுகிறது. இருப்பினும் பாலியல் தொடர்பான பார்வை தற்போது மாறிவருகிறது. அவற்றின் சில எடுத்துக்காட்டுகள் கீழே:

பிரச்சனை பெண் அணியும் உடையில் இல்லை. அதனை ஒரு சரக்காக மாற்றி சங்கேதப்படுத்தியிருக்கும் ஆரோக்கியமற்ற நமது ஒடுக்கப்பட்ட பண்பாட்டில் உள்ளது. துணி விலகியவுடன் மனம் விலகி உடல் வெலவெலக்கும் நமது பாலுணர்வின் பலவீனத்தில் இருக்கிறது. உடல் தெரிய ஆடை உடுத்தும் ஒரு பெண் உடல், ஒரு ஐரோப்பியனுக்கு கவர்ச்சிகரமானதாக இருப்பதில்லை. நமக்கோ அதுதான் மிகப்பெரிய கவர்ச்சி. காரணம் பாலுணர்வு பற்றி நம்மிடம் உலவும் மர்மங்களும், புனைவுகளும், ஆண்-பெண் இருவரையும் பழக விடாத பண்பாட்டு இறுக்கமுமே காரணம். ஒருவேளை இதனை அனுமதித்தால் உடனடியாக எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் “தவறான“ நடைமுறைகளை பின்பற்றி பண்பாடு கெட்டு சீரழிந்துவிடும் என்று பயப்பட வேண்டியதில்லை.
சுத்தக் காமம் … அழகானது … இயற்கையானது. ஒரு ஆணும் பெண்ணும் சுலபமாக அனுபவிக்க ஆயிரம் பேர் சாட்சியிட்டு திருமணம் என்ற சடங்கெல்லாம் தேவையில்லை. காதல் என்ற திரை கூடத் தேவையில்லை… நல்ல நட்பும்.. கூட ஒரு கருத்தடை சாதனமும் இருந்தால் காம அரக்கனிடமிருந்து ஒரு சிறுவிடுதலைக்கு போதுமானது ” என்று சொன்னாள் ஒரு சென்னைத் தோழி...

மேற்குலக சமூக தமிழ்ச் சமூக பாலியல் வழக்கங்கள் ஒப்பீடு

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

  1. முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் "அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர்".
    மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கங்கள்: 168-169.
  2. ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள் - ஜெயமோகன்
  3. Response to TN govt scheme overwhelming. Times of India. 16 Mar 2008.
  4. A Transgender TV Debut By Rama Lakshmi, Washington Post Foreign Service. Sunday, December 9, 2007; Page A25

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.