சுருளி ராஜன்
சுருளி ராஜன் (ஆங்கிலம்: Suruli Rajan) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சுருளி ராஜன் | |
---|---|
பிறப்பு | 1938 பெரியகுளம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 1980 |
பணி | நடிகர், |
செயல்பட்ட ஆண்டுகள் | 1965-1980 |
வாழ்க்கை
நடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1938ம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும். சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளிவேலர் சுவாமி பெயர் இவருக்கு இடப்பட்டது. இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
நடிப்பு
மதுரையில் வேலைபார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் நடித்தார். ஆகையால் 1959ம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். முதலில் கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார். பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட "இரவும் பகலும்" (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார், அப்போதே "காதல் படுத்தும்பாடு" என்ற படத்திலும் நடித்தார். 1970ல் திருமலை தென்குமரி, 1971ல் "ஆதிபராசக்தி" என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப்பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பினார். 1970ம் ஆண்டுகளில் புகழின் உச்சத்தில் இருந்தார். ம. எ. காஜா வின் "மாந்தோப்புக்கிளியே" என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரானார்.[1][2]
ஒளி பிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, முரட்டுக்காளை, ஹிட்லர் உமாநாத், பாலாபிசேகம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
விருது
இவருக்கு 1981-82ம் ஆண்டுக்கான சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.
மரணம்
சிரிப்பு நடிகர் சுருளி ராஜன் தனது புகழின் உச்சியில் இருந்த 1980ம் ஆண்டு 42 வயதில் மரணமடைந்தார்.