சு. இராசரத்தினம்

சு. இராசரத்தினம் (ஜூலை 4, 1884 - 1970), இந்து போர்ட் இராசரத்தினம் எனச் சிறப்பாக அழைக்கப்பட்டவர். சைவ சமய அபிவிருத்தியில் கவனம் செலுத்தியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி. இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஏழாண்டுகள் உறுப்பினராக இருந்தவர். சட்டவல்லுனர்.

"இந்துபோர்ட்" சு. இராசரத்தினம்
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் வட மாகாண (மத்திய பகுதி) உறுப்பினர்
பதவியில்
1924  1931
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 4, 1884(1884-07-04)
கோப்பாய், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு 12 மார்ச்சு 1970(1970-03-12) (அகவை 85)
தேசியம் இலங்கைத் தமிழர்
பணி வழக்கறிஞர்
தொழில் அரசியல்வாதி
சமயம் சைவ சமயம்

வாழ்க்கைச் சுருக்கம்

இராசரத்தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாயில் 1884 சூலை 4 இல்,[1] சுப்பிரமணியம் என்பவருக்குப் பிறந்தார்.[2] அச்சுவேலியில் திருமணம் புரிந்தார்.[3] இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் (சரவணபவானந்தன், கதிரேசு, சற்குணானந்தன்), நான்கு பெண் பிள்ளைகள் (கனகாம்பிகை, யோகாம்பிகை, திலகவதி, மங்கையற்கரசி).[1]

பணி

சட்டம் கற்ற இராசரத்தினம், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்கலில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[3]

சமூகப் பணி

1923 டிசம்பர் 1 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பெற்ற சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தின் (இந்துபோர்ட்) வளர்ச்சியிலே முக்கிய பங்காற்றினார். அதன் முகாமையாளராகவும் செயலாளராகவும் அதன் ஆரம்பகாலத்திலிருந்து நீண்டகாலம் பணியாற்றியவர். வழக்கறிஞராக விளங்கிய அவர், தேடிவந்த உயர் பதவிகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு முழுநேர ஊழியராக, சைவ வித்தியா விருத்திச்சங்கத்துடன் ஒன்றித்தார். இதனால் "இந்து போர்ட்' என்றால் சு.இராசரத்தினத்தையே குறிப்பதாக அமைந்தது.[2] யாழ்ப்பாணக் குடாநாடு, முல்லைத்தீவு, பதுளை, நாவலப்பிட்டி, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, ஊர்காவற்றுறை உட்பட நெடுந்தீவு முதலான இடங்களில் 174 சைவப் பாடசாலைகள், 7 ஆங்கிலப் பாடசாலைகள், 16 பன்னவேலைப் பாடசாலைகள், தற்காலிக அங்கீகாரத்துடனான மேலும் 63 பாடசாலைகள், 2 அநாதை இல்லங்கள், ஓர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்பவற்றை சைவவித்தியா விருத்திச் சங்க நிர்வாகத்தின் மூலம் உருவாக்கி இயங்கச் செய்தார்.[2][3][4][5] 1928 அக்டோபரில் திருநெல்வேலியில் சைவாசிரியர் பயிற்சி நிறுவனம் இவரது முயற்சியால் உருவானது.[2]

சட்டசபை உறுப்பினர்

இராசரத்தினம் 1924 தேர்தலில் வடமாகாண மத்திய தொகுதியில் போட்டியிட்டு இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு[3][6] ஏழாண்டுகள் பதவியில் இருந்தார்.[2]

அக்காலத்தில் சைவர்களுக்குத் தீமையாக நடைமுறையில் இருந்த பல சட்டங்களைத் திருத்தியமைக்கக் காரணமாயிருந்தார். கிறித்தவப் பள்ளிகளுக்கு அருகில் சைவப்பள்ளிகள் அமைக்கவும், சைவப் பள்ளிகளுக்கு உதவி நன்கொடை பெற்றுத்தரவும் அக்காலகட்டத்தைய சட்டசபை காரணமாயமைந்தது. 1930 இல் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இரு அநாதை விடுதிகளும் கல்வி கற்பதற்கு பாடசாலை வசதிகளும் இவரது முயற்சியால் உருவாகின.

மறைவு

இராசரத்தினம் 1970 மார்ச் 12 இல் காலமானார்.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.