சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை.

சித்தன்னவாசல்
சித்தன்னவாசல் குடைவரை ஓவியம். இது 7-ஆம் நூற்றாண்டில் தீட்டியது. இதில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை
அமைவிடம்புதுக்கோட்டை, இந்தியா
ஆள்கூற்றுகள்10.4544°N 78.7247°E / 10.4544; 78.7247
கட்டப்பட்டதுசமண காலம்] (கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி 900)
கட்டிட முறைபாண்டியர்
வகைகலாச்சாரம்
State Party இந்தியா
Location of சித்தன்னவாசல் in இந்தியா
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்

சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.[1][2]

இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன.

சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது.

சமணர்களின் குகைக் கோயில்கள்

இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.[3]

சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம் வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதியில் ஓவியங்களின் மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார்.

தொல் பழங்கால ஓவியங்களை ஆய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவர் இதுவரை புதுகை மாவட்டத்தில் திருமயம் ஓவியங்களுக்கு பின்னர் சித்தன்ன வாசல் மலையில் புராதன ஓவியங்களை கண்டறிந்துள்ளார். நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அவற்றிற்கு பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என பெயரிட்டிருக்கிறார் ஆய்வாளர்.

ஓவியத்தின் காலமும் சமயமும்

சித்தன்னவாசலில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுவதால் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தொட்டே சமயம் மெய்யியல் தொடர்பான பயன்பாட்டில் இருந்த இடம். முதலில் இக்குகை ஓவியங்கள் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியது என்று கருதப்பட்டாலும் அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டிய மன்னன் சீர்செய்தான் என கூறுவதால் இந்த ஓவியம் சேந்தன் மாறன் (கி.பி. 625-640) காலத்திலோ மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640-670 காலத்திலோ இந்த ஓவியம் சீரமைக்கப்பட்டது என்று உறுதியானது.[4][5]

இந்த குகை ஓவியங்கள் ஆசீவக துறவிகளுடையது என்றும் சைன சமயத்தினருடையது என்றும் இருவேறுபட்ட கருத்துகள் உள்ளன. இதை ஆசீவகத்துறவிகளுடையது எனச்சொல்லும் க. நெடுஞ்செழியன் ஓவியங்களில் காணப்படும் மூன்று ஆண்கள் குளத்தில் நீராடுவது போல் இருப்பதாலும் தலைமுடியை நன்கு வளர்த்திருப்பதாலும் இது சைன துறவுநெறிக்கு முரண்பட்டிருப்பதால் இது ஆசீவக ஓவியங்கள் என்கிறார்.[6]

சித்தன்னவாசல் காட்சிக்கூடம்

பாறை ஓவியங்கள் மலையின் கிழக்கு பகுதியில் உள்ள சமணர் இருக்கைகள் மேற்புறம் இருக்கின்றன. பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என நான்கு ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதனையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு- அரிய பொக்கிஷமான குகை ஓவியம், சமணர் படுக்கை
  2. SITTANAVASAL CAVE (CHITHANNAVASAL CAVE) AND ELADIPATTAM
  3. சித்தன்னவாசல்
  4. "Sittanavasal – A passage to the Indian History and Monuments". Puratattva: The Legacy of Chitrasutra, Indian History and Architecture. பார்த்த நாள் 26 October 2012.
  5. "Rock-cut Jaina temple, Sittannavasal". Archaeological Survey of India. பார்த்த நாள் 26 October 2012.
  6. சித்தண்ண வாயில், க. நெடுஞ்செழியன்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.