சவ்வாது மலை
சவ்வாது மலை அல்லது ஜவ்வாது மலை (Javadi Hills) கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இம்மலைத் தொடர்கள் வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். இம்மலைத்தொடரில் உள்ள பீமன்மடவு அருவியும் காவலூர் வானியல் ஆய்வகமும் முதன்மை சுற்றுலா இடங்களாகும்.[1]

மலையின் இயற்கைவளம்
இம்மலை இயற்கை எழில் கொஞ்சும் காடுகள், நீரோடைகள், அருவிகள் என காண்போரை மெய்மறக்க வைத்துவருகிறது. இம்மலையின் மேல் பீமன் அருவியும், மலையின் வடபகுதியில் அமிர்தி அருவியும், மேற்குப் பகுதியில் ஏலகிரி மலையில் சலகாம்பாறை அருவியும் சிறு சுற்றுலா இடங்களாக விளங்கிவருகின்றன.[2]
ஆறுகள்
இம்மலையிலிருந்து செய்யாறு, ஆரணியாறு, கமண்டல நாகநதி ஆறு, மிருகண்டாநதி ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலையின் அடிவாரத்தில் படவேட்டிற்கு அருகில் செண்பகத் தோப்பு அணையும் மேல்சோழங்குப்பம் அருகில் மிருகண்டாநதி அணையும் கட்டப்பட்டு அவற்றையும் சுற்றுலா இடமாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. ஜவ்வாது மலையின் மேல் கோமுட்டேரி என்ற படகு குழாமும், உள்ளது.
ஜவ்வாதுமலைத்தொடர் கிழக்கு மேற்காக உள்ளது . மேலும் வடபகுதி தென்பகுதி என இரண்டாக உள்ளது. போளூர் வட்டம், தென்மாதிமங்கலம் அருகே உள்ள பர்வத மலை சிவன் கோயிலும் படவேடு அருகில் உள்ள கோட்டை வரதர் ஆலயமும் இம்மலைத்தொடரில் அமைந்த சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். போளூர், செங்கம், சமுனாமரத்தூர், கலசப்பாக்கம் வேலூர், திருப்பத்தூர் வட்டங்களைச்சார்ந்த 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இம்மலைத் தொடரில்அமைந்துள்ளன. இம்மலைவாழ் மக்களில் பெரும்பகுதியினர் மலையாளி என்ற பழங்குடி இனத்தவராவார்கள். இவர்களது முக்கியத் தொழில் வேளாண்மையாகும், இங்கு பழ வகைகள், சாமை, வரகு, தேன், கடுக்காய்,தினை போன்றவை முக்கிய வேளாண்மை உற்பத்திப் பொருட்களாகும். இம்மலையில் மிகச்சிறப்பு வாய்ந்தது சந்தன மரங்களாகும். தற்போது பெரும்பாலான சந்தன மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. வனத்துறையின் பாதுகாப்பில் சில மரங்களே காணப்படுகின்றன.
ஜவ்வாது மலையின் இரண்டு பகுதிகள்
ஏலகிரி மலை
சுற்றுலாத்தலம்
அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். இது வேலுர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏரி படகு சவாரி, பாரா கிளைடிங் என மனதை கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
விழாக்கள்
இம்மலையில் ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடைவிழா ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் நடைபெறும். இவ்விழாவின் போது இம்மலைவாழ் மக்களின் படைப்புகள், காட்டுப்பொருட்கள், மலர்கள், காய் கனிகள் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள் என விழா சிறப்புற நடைபெறும். இம்மலைக்கு செல்ல திருவண்ணாமலை மாவட்டம் போளுரில் இருந்தும், வேலூரில் இருந்தும், திருப்பத்துரில் இருந்தும் பேருந்து இயக்கப்படுகிறது. யானைகள் மற்றும் வன விலங்குகள் இடர் இருப்பதால் இரவுப் பயணம் தவிர்க்கப்படுகிறது.இம்மலையில் முயல்,மான்,காட்டெருமை,காட்டுப்பன்றி,குரங்கு,மலைப்பாம்பு,நரி ஆகியன உள்ளன.
ஜவ்வாது மலை
இயற்பியல் மையம்
இம்மலையில் காவலூர் என்ற இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய தொலை நோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் அமைந்துள்ளது. இங்கு வானியல் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மையம் இந்திய வானியற்பியல் மையத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இம்மையத்திலிருந்து வானைக் காண சனிக்கிழமை மட்டும் பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
- "Javadi Hills Recreation / Outdoor / Hills". Tourist Link. பார்த்த நாள் 5 திசம்பர் 2015.
- "சிவகுமாரின் பயணங்கள்". சிவகுமார் (8 செப்டம்பர்,2008). பார்த்த நாள் 27 ஏப்ரல் 2017.
வெளியிணைப்புகள்
- ஜவ்வாது மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டைகள் கண்டுபிடிப்பு
- ஜவ்வாது மலை
- ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்