காவல்காரன் (திரைப்படம்)
காவல்காரன் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, சிவகுமார், எம். என். நம்பியார், அசோகன், மனோகர், வி. கே. ராமசாமி, நாகேஷ், பண்டரிபாய், மனோரமா, புஷ்பமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். காவல்காரன் படம் 1966 இன் பிற்பகுதியில் பூசை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், 1967 சனவரி 12 ஆம் தேதி எம்.ஜி.ஆரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுவிட்டுவிட்ட நிகழ்வு நேர்ந்தது. இந்நிகழ்வுக்கு முன்பே பெரும்பாலும் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட தாய்க்குத் தலைமகன், அரச கட்டளை ஆகிய படங்கள் தொடர்ந்த வெளியாயின. 1967 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி காவல்காரன் வெளிவந்தது. இந்தப் படத்தின் 95 சதவீதக் காட்சிகள் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகளில் அவரது வழக்கமான குரல் உடைந்துபோய், சற்று வார்த்தைகள் தெளிவில்லாமல் ஒலித்தது.
காவல்காரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | செப்டம்பர் 7, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4395 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
ஒரு பெரிய பங்களா வீட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்க வரும் ஒரு காவல் அதிகாரி கொல்லப்படுகிறார். அந்த பங்களாவில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துகிறார் கதாநாயகன் மணி (எம்.ஜி.ஆர்). கதாநாயகனின் தம்பியாக சிவகுமார் நடித்துள்ளார். நம்பியாரிடம் கார் டிரைவராக வேலைக்குச் சேரும் மணி, நம்பியாரின் மகளான சுசீலாவுடன் (ஜெயலலிதா) காதல் வசப்படுகிறார்.
தந்தையின் எதிர்ப்பை மீறி சுசீல் காதலனைக் கரம்பிடிக்கிறார். தன்னை அழிக்க முயலும் எதிரிகளின் திட்டங்களைத் முறியடித்து குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்புகிறார் எம்.ஜி.ஆர். நம்பியாரிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்த மணி ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி என்று கடைசியில் தெரிகிறது.
வசூல்
படம் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் மாறிப்போன அவரது குரலைக் கேட்டு கண்ணீர் சிந்தி அழுதனர். அவரது மாறிப்போன குரலே படத்துக்குப் பெரிய விளம்பரமாகி, படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. சென்னையில் குளோப், அகஸ்தியா, மேகலா ஆகிய திரையரங்குகள் மற்றும் மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் 100 நாட்களை கடந்தும், இலங்கை யாழ்ப்பாணத்தில் 160 நாட்களைக் கடந்தும் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.[1]
விருதுகள்
- 1967 ஆம் ஆண்டின் சிறந்த படமாகத் தமிழக அரசின் விருது பெற்றது.
மேற்கோள்கள்
- ஸ்ரீதர் சுவாமிநாதன் (2017 செப்டம்பர் 1). "காவல்காரன் 50 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களை அழவைத்த எம்.ஜி.ஆர்.!". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 1 செப்டம்பர் 2017.