தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை
1944 இல் கவிமணி
பிறப்புஜூலை 27, 1876
தேரூர், கன்னியாக்குமரி மாவட்டம்
இறப்புசெப்டம்பர் 26, 1954(1954-09-26) (அகவை 78)
அறியப்படுவதுகவிஞர்
பட்டம்கவிமணி
பெற்றோர்சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி
வாழ்க்கைத்
துணை
உமையம்மை
கையொப்பம்

வாழ்க்கைக் குறிப்பு

சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு பெண் குழந்தைகளை அடுத்து மூன்றாவதாக தேசிக விநாயகம் பிறந்தார். இரண்டு பெண்களுக்கு பின் பிறந்த ஆண் மகவுக்கு தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை வைத்தார் சிவதாணுப்பிள்ளை. ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எம். ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901 இல் மணம் முடித்தார். நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போல வளர்த்தார்.[1][2]

ஆசிரியர் பணி

நாகர்கோவிலிலுள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

குழந்தை இலக்கியப் பணி

தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய மலரும் மாலையும் தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது குழந்தைப் பாடல்களில் ஒன்று.[3]

மொழிபெயர்ப்பாளர்

எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.

ஆராய்ச்சியாளர்

ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.[4].

விருதுகள்

24 டிசம்பர் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.[5]. 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.[2]

கவிமணியின் நூல்கள்

ஆதாரம்

  • திருவேங்கிமலை சரவணன், தலை நிமிர்ந்த தமிழர்கள் (குமுதம் வெளியிடு )
  • முல்லை நிலையம் வெளியிட்ட மலரும் மாலையும் என்ற நூலில் உள்ள ஆசிரியர் குறிப்பு
  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=1079596
  2. http://www.evi.com/q/facts_about__kavimani_desigavinayagam_pillai
  3. ஆதி வள்ளியப்பன் (2016 நவம்பர் 15). "சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 20 நவம்பர் 2016.
  4. http://eluthu.com/kavignar/Kavimani-Desigavinayagam-Pillai.php
  5. http://www.rhythemmusic.net/component/content/article/86/1020-desigavinayagam-pillai-index
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.