கவிஞர்

கவிஞர் (Poet) என்பவர் கவிதையை உருவாக்கும் நபர் ஆவார். இவர்கள் புலவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். கவிஞர் தன்னை தானே கவிஞர் என்று வர்ணித்துக் கொள்ளலாம் அல்லது மற்றவர்களால் இவர் கவிஞரென்று விவரிக்கப்படலாம். ஒரு கவிஞர் வெறுமனே கவிதை எழுத்தாளராக மட்டும் இருக்கலாம் அல்லது பார்வையாளர்களுக்கென்றே அவர் தன் கவிதை கலையை வெளிப்படுத்துபவராகவும் இருக்கலாம். ஒரு கவிஞரின் பணி அடிப்படையில் தகவல்தொடர்புகளில் ஒன்றாக இருக்கும். கவிஞர் தன்னுடைய எண்ணங்களை அல்லது, சிந்தனைகளை இலக்கிய உணர்வோடு வெளிப்படுத்துவார். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது இடம் அவருடைய மையக் கருத்தாக இருக்கும். கவிஞர் தான் சொல்லப் புகுந்த ஒரு பொருளை கற்பனையோடு அல்லது உருவகத்தோடு ஒரு படைப்பாக வெளிப்படுத்துகிறார், கவிஞர்கள் பழங்காலத்திலிருந்தே கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் எல்லா காலங்களிலும் இருந்துள்ளனர். வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் வெவ்வேறு காலகட்டங்களில் இவர்கள் பெரிதும் மாறுபடும் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு நாகரிகம் மற்றும் மொழி வரலாறு முழுவதும் கவிஞர்கள் இலக்கிய வரலாற்றின் போக்கில் அவ்வப்போது மாறியுள்ள பல்வேறு பாணிகளைப் பயன்படுத்தி கவிதைகள் எழுதியுள்ளனர். இதன் விளைவாக கவிஞர்களின் வரலாறும் அவர்கள் உருவாக்கிய இலக்கியங்களைப் போலவே வேறுபட்டது.

வரலாறு

பண்டைய ரோமில் தொழில்முறை கவிஞர்கள் பொதுவாக புரவலர்கள், பிரபுக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட பணக்கார ஆதரவாளர்களால் நிதியுதவி செய்யப்பட்டனர் [1]. உதாரணமாக, சீசர் அகசுடசின் நண்பரான கயசு சில்னியசு மேசெனாசு, ஓரேசு மற்றும் விர்கில் உள்ளிட்ட அகசுடன் கவிஞர்களுக்கு ஒரு முக்கியமான புரவலராக இருந்தார். இசுலாமியத்திற்கு முந்தைய அரபு சமுதாயத்தில் கவிஞர் அல்லது சாயர் என அழைக்கப்பட்டவர்கள் வரலாற்றாசிரியர், இராசதந்திரி மற்றும் பிரச்சாரகர் போன்ற முக்கியமான பதவிகளில் அமர்ந்திருந்ததன் மூலம் கவிஞர்கள் அரசாட்சியில் ஒரு முக்கிய பதவியை வகித்துள்ளனர். கிதா பழங்குடியினரைப் புகழ்ந்து பேசும் சொற்களும் மற்றும் இச்சா பழங்குடியினரை இழிவுபடுத்தும் வசைபாடல்களும் ஆரம்பகால கவிதைகளின் மிகவும் பிரபலமான வடிவங்களாக இருந்தன. சாயர் அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட பழங்குடியினரின் கவுரவத்தையும் முக்கியத்துவத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார், மேலும் கவிதை அல்லது சாயல் எனப்படும் போலி போர்கள் உண்மையான போர்களுக்குப் பதிலாக நிற்கும் என்றும் எடுத்துக்கூறினார். மெக்காவிலிருந்து வெகு தொலைவில் இல்லாத சந்தை நகரமான உகாசுவில் வழக்கமான கவிதை திருவிழா நடக்கும். சாயர்களின் படைப்புகள் அவ்விழாவில் காட்சிக்கு வைக்கப்படும்.

உயர் இடைக்காலத்தில் டிரௌபதோர் எனப்பட்டவர்கள் முக்கியமான கவிஞர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள் ஆவர். அவர்கள் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர். நாடு முழுவதும் பயணம் செய்தனர், அவர்கள் கவிஞர்களாகவும் நடிகர்களாகவும் அல்லது இசைக்கலைஞர்களாகவும் சமூகத்தால் பார்க்கப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களின் ஆதரவின் கீழ் இருந்தனர், ஆனால் பலர் விரிவாக பயணம் செய்தனர்.

மறுமலர்ச்சி காலத்தில் கவிஞர்களுக்கான ஆதரவு உரிமைப் பங்காக தொடர்ந்தது. இருப்பினும், பல கவிஞர்களுக்கு பிற வருமான ஆதாரங்கள் இருந்தன. இத்தாலியர்களான டான்டே அலிகேரி, கியோவானி போகாசியோ மற்றும் பெட்ராச் உள்ளிட்டவர்கள் மருந்தாளுநர் குழுவில் பணிபுரிந்தனர். சேக்சுபியரின் நாடகத்தில் சிலர் நடித்தனர்.

காதல் காலத்திலும் அதற்குப் பின்னரும், பல கவிஞர்கள் தனித்துவமான எழுத்தாளர்களாக இருந்தனர், அவர்கள் தங்கள் வேலையின் மூலம் தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டனர், பெரும்பாலும் அவை மற்ற தொழில்களிலிருந்தோ அல்லது குடும்பத்தினரிடமிருந்தோ கிடைத்து வந்த வருமானத்தோடு கூடுதல் வருமானமாக இருந்தன [2]. வில்லியம் வேர்ட்சுவொர்த் மற்றும் ராபர்ட் பர்ன்சு போன்ற கவிஞர்களும் இதிலடங்குவர்.

கல்வி

முந்தைய கால கவிஞர்கள் பெரும்பாலும் நன்கு படித்தவர்களாகவும், உயர் கல்வி கற்றவர்களாகவும் இருந்தனர். மற்றவர்கள் பெருமளவில் சுயகல்வி கற்றவர்களாக இருந்தனர். கோவர், மில்டன் போன்ற ஒரு சில கவிஞர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் கவிதைகள் எழுதினர். சில போர்த்துகீசிய கவிஞர்கள் போர்த்துக்கீசியம் மட்டுமின்றி எசுப்பானிய மொழியிலும் கவிதை படைத்தனர். கவிஞர்களில் பலர் மொழிபெயர்ப்பாளர்களாகவும் இருந்தனர்.

மேற்கோள்கள்

  1. Barbara K. Gold, (2014) Literary and Artistic Patronage in Ancient Rome", University of Texas Press
  2. Peter T. Murphy (2005) "Poetry as an Occupation and an Art in Britain" Cambridge University Press
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.