என். பெரியசாமி (தி.மு.க)

என். பெரியசாமி( N. Periasamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு மற்றும் 1996 தேர்தல்களில், தூத்துக்குடி தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

வாழ்க்கை

பெரியசாமியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடம் ஆகும். 14 வது வயதில் தூத்துக்குடிக்கு வந்து, அங்குள்ள அரிசி ஆலை ஒன்றில் பணியாற்றினார். கருணாநிதி மீது கொண்ட பற்றால் திமுகவில் இணைந்தார். 1976 இல் அவசர நிலை காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆற்காடு வீராசாமி, வைகோ ஆகியோருடன் பாளையங்கோட்டை சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்ட பெரியசாமி, திருநெல் வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் உருவானதில் இருந்து 30 ஆண்டுகளாக அந்த மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராகவும், 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பல தொழிற்சங்கங்களின் தலைவராகவும், தி.மு.க மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[3] 1985 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார். அவர் 2016 ஆம் ஆண்டு கலைஞர் விருது பெற்றார். 2012 இல் இவரும் இவரின் மகன் ஜெகன் ஆகியோர் முல்லைக்காடு என்ற பகுதியில் 19 ஏக்கர் நிலம் (7.7 ஹெக்டேர்) நிலத்தை வாங்குவதற்காக ஒரு போலி ஆவணத்தை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர்.[4] ஜெகனைத் தொடர்ந்து, பெரியசாமியின் மகளான கீதா ஜீவனையும், பெரியசாமி அரசியலுக்கு கொண்டு வந்தார். [5][6] மே 26, 2017 அன்று பெரியசாமி காலமானார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.