இந்தியாவில் நாடோடிகள்

இந்தியாவில் நாடோடிகள் (Nomads of India) பல ஆண்டு காலமாக அனைத்து மாநிலங்களிலும் பல குழுக்களாக வாழ்ந்து வருகிறார்கள். பொதுவான கணக்குப்படி இந்தியாவில் மட்டும் 862 நாடோடி இனத்தவர்கள் வாழுவதாக கூறப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் தன் உணவு, உடை, இருப்பிட தேவைக்காக நடந்தே திரிவதால் இவர்களை நாடோடிகள், காலோடிகள், அலைகுடிகள், அல்லது மிதவைக் குடிகள் என்றும் மற்றவர்களால் அழைக்கப்படுகிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 7.5 சதவிகிதம் மக்கள் நாடோடிகளாகவே வாழுகிறார்கள்.

தமிழ் நாடு

தமிழ் நாடு மாநில மக்கள் தொகையில் 5 லட்சம் மக்கள் நாடோடிகளாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் முக்கியமாக தாசரிகள், மணியாட்டிக்காரர்கள், குடுகுடுப்பைகாரர்கள், பாம் பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பகல்வேசக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள், மற்றும் வம்சராஜ் என பல இனத்தவர்கள் வாழுகிறார்கள். இவர்களில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என இரு பிரிவுகளிலும் 162 நாடோடி இன மக்கள் அரசு தயாரித்துள்ள இன பட்டியல்களில் சாராதவர்களாகவே வாழ்க்கை நடத்திக்கொண்டு உள்ளார்கள். இதன் காரணமாக அரசு வழங்கும் கல்வி, வீடு, உணவு, மற்றும் சாதாரணமாக மக்களுக்கு நிடைக்கும் உரிமைகள் எதுவுமே இவர்களுக்கு கிடைப்பதில்லை. [1]

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் மக்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்திய நடுவண் அரசின் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.[2]

சங்க கால நாடோடிகள்

தமிழ் நாட்டில் சங்க காலத்தில் பாணர்கள், கூத்தர்கள், விறலியர்கள், பொருநர்கள், கோடியர்கள், மற்றும் கட்டுவிச்சிகள் என பல இனத்தவர்கள் வாழ்ந்துவந்துள்ளனர். இவர்கள் மன்னர் ஆட்சி முடிந்து, ஜமீன் ஆட்சிக்குப்பின்னர் ஆங்கிலேய ஆட்சியின்போது அரிதாகிப்போனார்கள்.

மாவட்டவாரியாக நாடோடிகள்

நாடோடிகள் விழுப்புரம், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகமான எண்ணிக்கையில் வாழுகிறார்கள்.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.