அருச்சுன இரதம்

அருச்சுன இரதம் மாமல்லபுரத்திலுள்ள புகழ்பெற்ற ஒற்றைக்கல் தளிகளுள் ஒன்றாகும். அருச்சுன இரதம் எனப் பொதுவாக அழைக்கப்பட்டாலும், இது ஒரு கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதே ஆய்வாளர்களுடைய கருத்து. ஆனால் இது எந்தக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. முருகன், சிவன், இந்திரன் என்பவர்களுள் ஒருவருக்கு உரியதாகவே இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதே ஆய்வாளர்களிடையே நிலவும் கருத்து.[1]

ஒரே தளத்தில் அருச்சுன இரதமும், திரௌபதி இரதமும். வலப்பக்கத்தில் இருப்பது அர்ச்சுனன் இரதம்.

அமைப்பு

அர்ச்சுன இரதத்தின் பின்புறத் தோற்றம்.

அருகில் அமைந்துள்ள திரௌபதி இரதத்துடன் ஒரே தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது இக்கோயில். இது திராவிட பாணியில் அமைந்த இரண்டு நிலைமாடக் கோயில் வகையைச் சார்ந்தது. சதுரமான அமைப்புடையது. சிங்கங்களும் யானைகளும் சுமப்பதைப் போன்று இக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன்புறத்தில் இரண்டு சிங்கத் தூண்களுடன் கூடிய சிறு அர்த்த மண்டபம் காணப்பட்டிருந்தது. தற்போது அத் தூண்களுக்குப் பதில் இரு கற்கள் காணப்படுகின்றன.

குறிப்புக்கள்

  1. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.66.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.