அமனுல்லாகான்

அமனுல்லாகான் (பஷ்தூ: أمان الله خان, உருது: أمانالله خان ; சூன் 1, 1892 – ஏப்ரல் 25, 1960) ஆப்கானித்தான் இராச்சியத்தின் அரசுத் தலைவராக 1919 முதல் 1929 வரை இருந்தவராவார்; முதலில் அமீராகவும் 1926க்குப் பின்னர் அரசனாகவும் இருந்தார்.[2]ஆப்கானித்தானின் அமீராக இருந்த அபிபுல்லாவின் மகனான இவர், தந்தை கொலையுண்ட பின் படைகளின் ஆதரவுடன் அமீரானார். அமனுல்லாகான் கி.பி. 1919 - ல் இந்தியாவின் மீது படையெடுத்தார். இது மூன்றாம் ஆங்கில-ஆப்கானியப் போர் எனப்பட்டது. புதிய அரசியல் சட்டம் ஒன்றையும் இவர் நாட்டிற்கு அளித்தார். ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்ட பின்னர் தமது நாட்டுக்கெனத் தனியான வெளிநாட்டுக் கொள்கையை வகுத்தார்.

அமனுல்லாகான்
கடவுள் கொடையளித்த ஆப்கானித்தான் இராச்சியத்தின் அரசர்[1]
ஆட்சிபெப்ரவரி 28, 1919 - சனவரி 14, 1929
முன்னிருந்தவர்நசுருல்லா கான்
பின்வந்தவர்இனயத்துல்லா கான்
தந்தைஅபிபுல்லா கான்
தாய்சர்வார் சுல்தானா பேகம்
பிறப்புசூன் 1, 1892
பாஃக்மான், ஆப்கானித்தான்
இறப்புஏப்ரல் 25, 1960(1960-04-25) (அகவை 67)
சூரிக்கு, சுவிட்சர்லாந்து

அமனுல்லாகான் ஆப்கானிஸ்தானத்தை ஐரோப்பிய மயமாக்க விரும்பி பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதனை விரும்பாத இஸ்லாமிய முல்லாக்கள் 1924 மார்ச் முதல் 1925 ஜனவரி வரை கலகத்தில் ஈடுபட்டனர். கோஸ்ட் கலகம் எனப்பட்ட இதுவே 1928 - ல் நடைபெற்ற மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அப்புரட்சி தோல்வியடைந்தது. ஆனால், அமனுல்லாகான் 1929 ஜனவரி 14 - ஆம் நாள் முடி துறந்து ரோமாபுரிக்குச் சென்றார். பின் 1941 - ஆம் ஆண்டு ஜெர்மனி உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். தமது முயற்சிகளில் தோல்வியடைந்த அமனுல்லாகான் 1960ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் சூரிக்கு நகரில் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்

  1. Royal Ark
  2. Poullada, L. B. "AMĀNALLĀH". Encyclopædia Iranica (Online). United States: கொலம்பியா பல்கலைக்கழகம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.