அ. சீனிவாசன்

அ. சீனிவாசன் (1925 ஆகத்து 6 – ?) இதழாளர்; எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர்; விடுதலைப் போராட்ட வீரர்; முன்னாள் விமானப்படை வீரர்; அரசியல்வாதி.

அ. சீனிவாசன்
பாரதி சீனிவாசன்
பிறப்பு1925 ஆகத்து 6
வத்திராயிருப்பு மகாராஜபுரம்
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
பணிஇதழாளர்
அறியப்படுவதுதொழிற்சங்கம்
சமயம்இந்து
பெற்றோர்மெட்ட. வெ. அய்யப்ப நாயுடு
மெட்ட. வெங்கடம்மாள்
வாழ்க்கைத்
துணை
சீதாலட்சுமி
பிள்ளைகள்(1) பகீரதி
(2) வைதேகி
(3) சீ. அய்யாசாமி என்னும் அ. சீ. வாசன்

பிறப்பு

அ. சீனிவாசன் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள மகாராஜபுரம் என்னும் சிற்றூரில் மெட்ட. வெ. அய்யப்ப நாயுடு – மெட்ட. வெங்கடம்மாள் என்னும் இணையருக்கு மகனாக 1925, ஆகத்து 6ஆம் நாள் பிறந்தார். ஈர் ஆண்களும் ஒரு பெண்ணும் இவருக்கு உடன்பிறந்தவர்கள் ஆவர்.[1]

கல்வி

அ. சீனிவாசன் மகாராஜபுரம், சாத்தூர், வத்திராயிருப்பு. விருதுநகர் ஆகிய ஊர்களில் பயின்று தனது பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். பின்னர் மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். விமானப்படையில் இருந்த பொழுது ஆங்கில மொழியைக் கற்றார். தானே முயன்று தமிழிலக்கியங்களைக் கற்றார். இவைதவிர தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளையும் கற்றார்.[1]

இல்லற வாழ்க்கை

அ. சீனிவாசன், 1957 மே 31 ஆம் நாள் சீதாலட்சுமி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பாகீரதி, வைதேகி என்னும் இரு பெண்களும் அய்யாசாமி என்ற வாசன் என்னும் ஓர் ஆணும் மகவாகப் பிறந்தனர்.[1]

பணிக்கள வாழ்க்கை

இந்திய விமானப்படைப் பணி

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பொழுது, 1943ஆம் ஆண்டில் பிரிட்டிசு இந்திய இராணுவத்தின் விமானப்படையில் அ. சீனிவாசன் சேர்ந்தார். அங்கு தகவல் தொடர்புப் பொறியியல் பயின்று பொறியாளராகப் பணியாற்றி னார்.[2] அப்பொழுது விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து விமானப்படையில் வேலை நிறுத்தத்தைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதன் விளைவாக 1947ஆம் ஆண்டில் அப்பணியிலிருந்து அவர் விலக்கப்பட்டார்.[3]

இதழ்ப்பணி

1980ஆம் ஆண்டுகளில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் நாளிதழான ஜனசக்தி, மாத இதழான மார்க்ஸிய ஒளி ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார்.[2]

அரசியல் வாழ்க்கை

இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில்

இளம் வயதிலேயே விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். எனவே இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்து அதன் போராட்டங்களில் கலந்துகொண்டார்.[1]

காங்கிரசு சோசலிசக் கட்சியில்

இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றிய சோசலிசக் கொள்கையினரும் பொதுவுடமைக் கொள்கையினரும் இணைந்து செயப்பிரகாசு நாராயண் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்னும் அமைப்பை இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் உள்ளமைப்பாக 1937 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தினர். அ. சீனிவாசன் அக்கட்சியில் உறுப்பினராக இருந்தார்.[1]

சுயமரியாதை இயக்கத்தில்

ஈ. வெ. ராமசாமி பெரியார் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் என்னும் அமைப்பின் வழியாக மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி மறுப்பு, பெண் விடுதலை போன்றவற்றில் தீவிரமாகச் செயல்படுத்தி வந்தார். சிங்காரவேலர், ப. ஜீவானந்தம் உள்ளிட்ட பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அவரோடு இணைந்து செயலாற்றினார். அவ்வியக்கத்தின் போக்கு அ. சீனிவாசனையும் கவர்ந்தது. எனவே அவ்வியக்கத்திலும் இணைந்து சிறிது காலம் பணியாற்றினார்.[1]

இந்திய பொதுவுடமைக் கட்சியில்

அ. சீனிவாசன் 1947 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் வட்ட, மாவட்ட, மாநில, தேசியப் பொறுப்புகள் பலவற்றை வகித்தார். தமிழ் மாநில துணைச் செயலாளராகவும் தேசியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் அமைப்பாக்கம், தொழிற்சங்கம், இதழ், பரப்புரை, வெளியீடு, கொள்கைக் கல்வி ஆகிய துறையில் பணியாற்றினார்.[4]

தொழிற்சங்கத் தலைவர்

அ. சீனிவாசன் 1950 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம், சிவகாசி, சத்திரப்பட்டி, தளவாய்புரம், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் பஞ்சாலை, அச்சு, தீப்பெட்டி, கைத்தறி உள்ளிட்ட வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்ட தொழிலாளர்களைத் திரட்டி அவர்களுக்கென தனித்தனி தொழிற்சங்கங்களை அமைத்தார்.[2]

1966 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து அங்குள்ள துறைமுகம், ஆவடி, கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களில் பல்வேறு பதவிகளை வகித்தார்.[2]

சென்னை தொழிலாளர் வாரியத்தில் தொழிலாளர் பிரதிநிதியாக இந்திய ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.

உலகத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு மாநாடுகளில்

உலகத் தொழிற்சங்க மாநாடு பல்கேரிய நாட்டின் தலைநகரான வார்னாவில் நடைபெற்ற பொழுது அ. சீனிவாசன் அதில் கலந்துகொண்டார்.

தேர்தலில் போட்டி

உள்ளாட்சித் தேர்தல்

1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இராசபாளையம் நகரமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார்.

நாடாளுமன்றத் தேர்தல்கள்

1984, 1991 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சிவகாசி நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[2]

பாரதிய சனதா கட்சியில்

அ. சீனிவாசனுக்கும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் செயற்குழுவிற்கும் 1999 ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே சீனிவாசன் அக்கட்சியிலிருந்து விலகி 1999, செப்டம்பர் 6 ஆம் நாள் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். அதன் மாநில இலக்கிய அணித் தலைவராகப் பணியாற்றினார்.[2]

சிறை வாழ்க்கை

1948 ஆம் ஆண்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது. அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்; சிலர் தலைமறைவாக வாழ்ந்தனர். அ. சீனிவாசன் கைது செய்யப்பட்டார். மதுரை, சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டார். இந்த முதல் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் தொடர்ந்து பலமுறை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார்.[2]

வெளிநாட்டுப் பயணம்

அ. சீனிவாசன் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தேசிய உயர்மட்டக் குழுவில் பணியாற்றிய பொழுது, அக்குழுவின் சார்பில் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம், செக்கோசுலோவேகியா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.[5]

எழுத்துப்பணி

அ. சீனிவாசன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு அரசியல், பொருளாதாரம், தத்துவம், இலக்கியம் தொடர்பான நூல்களையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும் பல நூல்களை எழுதி இருக்கிறார். அவற்றுள் சில:

வ.எண்ஆண்டுநூல்வகைபதிப்பகம்குறிப்பு
01?காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறுவாழ்க்கை வரலாறு?மொழிபெயர்ப்பு
02?மார்க்சிய லெனினிய தத்துவ ஞானப் பிரச்னைகள்அரசியல்?மொழிபெயர்ப்பு
03?அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்அரசியல்?மொழிபெயர்ப்பு
04?ஐக்கிய முன்னணித் தந்திரம்அரசியல்?மொழிபெயர்ப்பு
05?மார்க்சீய தத்துவம்அரசியல்?மொழிபெயர்ப்பு
06?வரலாற்றில் பொருள்முதல் வாதம்அரசியல்?மொழிபெயர்ப்பு
07?மார்க்சீயமும் பகவத் கீதையும்அரசியல்?மொழிபெயர்ப்பு
08?மார்க்சீய பொருளாதாரத் தத்துவம்அரசியல்?
09?ஜீவானின் தமிழ்ப் பணிகள்ஆய்வு?1986ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு
101992கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கிகட்டுரைஅன்னம், சிவகங்கைபேராசிரியர் நா. தர்மராஜன் முன்னுரை
111999பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதிஆய்வுஆ. சீனிவாசன், சென்னை
122001சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துகள்ஆய்வுஆ. சீனிவாசன், சென்னை
132002சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும் – ஓர் ஆய்வுஆய்வுபழனியப்பா பிரதர்ஸ், சென்னை
142002பாரதியின் புதிய ஆத்திசூடி – ஒரு விளக்கவுரைஉரைஆ. சீனிவாசன், சென்னை
152003பாரதியின் தேசீயம்ஆய்வுஆ. சீனிவாசன், சென்னை
162004கல்யாணராமனும் பரசுராமனும்ஆய்வுகர்மயோகி பதிப்பகம், சென்னை
172004கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்ஆய்வுஅ. சீனிவாசன், சென்னை
182005பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்ஆய்வுகர்மயோகி பதிப்பகம், சென்னை
19?ஆழ்வார்களும் பாரதியும்ஆய்வுகர்மயோகி பதிப்பகம், சென்னை
20?மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும் அவைகளின் சிறப்பும் உயர்வும் ஆழ்ந்த பொருளும் இன்றைய பொருத்தமும்ஆய்வுகர்மயோகி பதிப்பகம், சென்னை
21?கம்பன் ஒரு சமுதாயப் பார்வைஆய்வுகர்மயோகி பதிப்பகம், சென்னை
22?தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடைஆய்வுகர்மயோகி பதிப்பகம், சென்னை
23?சியாமபிரசாத் முக்கர்ஜி வாழ்க்கை வரலாறுவாழ்க்கை வரலாறு?
24?பாரதீய ஜனசங்கம் முதல் பாரதிய ஜனதா கட்சி வரை : 50 ஆண்டு வரலாற்றுக் குறிப்புகள்வரலாறு?
25?நெசவாளர்களும் நெசவுத் தொழிலும்ஆய்வு?
26?கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும்ஆய்வுகர்மயோகி பதிப்பகம், சென்னை
27?ஶ்ரீராமனும் கோதண்டமும்ஆய்வுகர்மயோகி பதிப்பகம், சென்னை
28?பாரதியும் பகவத் கீதையும்ஆய்வுகர்மயோகி பதிப்பகம், சென்னை
29?கிராமப்புறங்களை நோக்கிகட்டுரைகர்மயோகி பதிப்பகம், சென்னை
30?இந்தியப் பொருளாதாரச் சிந்தனைகள்கட்டுரைகர்மயோகி பதிப்பகம், சென்னை

அ. சீனிவாசன் தன்னுடைய இறுதிக் காலத்தில் பாரதியாரைப் பற்றிய நூல்களை எழுதியதால், பாரதிய சனதா கட்சியினர் இவரை பாரதி சீனிவாசன் என அழைப்பர்.

இவருடைய நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2010-11 ஆம் நிதியாண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

விருதுகள்

அ. சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பின்வரும் விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன:[2]

  • எழுத்துப் பணியைப் பாராட்டி 1984ஆம் ஆண்டில் சோவியத் நாட்டின் நேரு விருது வழங்கப்பட்டது
  • இதழ்ப் பணியைப் பாராட்டி சர்வதேசப் பட்டயம்

மறைவு

சான்றடைவு

  1. சீனிவாசன் அ, கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், அ. சீனிவாசன் வெளியீடு – சென்னை, மு. பதிப்பு 2004, பக்.ii
  2. சீனிவாசன் அ; பாரதியின் தேசீயம்; ஆசிரியரின் சொந்த வெளியீடு, சென்னை; மு.பதி. 2003; பக். 50
  3. தர்மராஜன், நா.; கிராமப்புற நோக்கி.. என்னும் நூலின் முன்னுரை; அன்னம், சிவகங்கை; 1992; பக். 3
  4. சீனிவாசன் அ, கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், அ. சீனிவாசன் வெளியீடு – சென்னை, மு. பதிப்பு 2004, பக்.iii - iv
  5. சீனிவாசன் அ, கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும், அ. சீனிவாசன் வெளியீடு – சென்னை, மு. பதிப்பு 2004, பக்.iii

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.