முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் முள்ளியவளை கிராமத்தின் 2 ஆம் வட்டாரத்தில், முள்ளியவளை மத்தி கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இதனை முல்லைத்தீவு – மாங்குளம் பிரதான வீதியில், முல்லைத்தீவில் இருந்து ஆறாவது மைல் கல் தூரத்தில் உள்ள சந்தியில் கிழக்காக செல்லும் வீதியில் சுமார் 200 மீற்றர் பயனிப்பதன் மூலம் அடையலாம்.
ஆலய வரலாறு
வன்னி மன்னர்கள் காலம் முதல் தொட்டு முள்ளியவளையில் காட்டா விநாயகர் ஆலயம் இருந்துவருகிறது. முள்ளியவளையின் கிழக்கே உள்ள ஐயனார் கோயில் அருகில் இருந்த கோட்டையில் ஆட்சி செய்த வன்னி மன்னன் விநாயகரின் பூசையை தூர இருந்தே தரிசித்ததாக கூற கேட்கலாம். இவ்வாலயம் வற்றாப்பளை அம்மன் வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. வைகாசி விசாகத்தை அண்மித்த ஞாயிற்றுகிழமை இவ்வாலயத்திலும் அடுத்த நாள் (திங்கள்) வற்றாப்பளை அம்மன் ஆலயத்திலும் பொங்கல் நடைபெறும். அம்மன் ஆலயத்தில் எரிக்கப்படும் கடல் நீர் விளக்கு அதற்கு முந்திய 7 நாட்களும் காட்டா விநாயகர் ஆலயத்தில் வைத்து மடை பரவி அதன் நடுவே தொடர்ந்து எரிய விடப்படும்.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் "கந்தன்" என்ற ஒரு பக்தன் வெள்ளையர் துரத்த இவ்வாலயத்திற்கு அருகில் இருந்த கொன்றை மரம் ஒன்றில் ஏறி ஒழிந்து கொண்டதாகவும், விநாயகரை வேண்டி "என்னைக் காட்டதே" என்று துதிக்க வெள்ளையர் கண்ணுக்கு குளவிக்கூடாக தோன்றியதாகவும் கிராமத்தவர்கள் கூறக்கேட்கலாம். அதற்கு காணிக்கையாக கந்தன், மணி ஒன்றை செய்வித்து ஆலயத்திற்கு கொடுத்தான். அம்மணி இன்றும் ஆலயத்தில் "நினைவன் கந்தன்" என்ற பெயர் தாங்கியவாறு காணப்படுகிறது.
இவ்வாலயம் பற்றி கதிரையப்பர் பள்ளில்
- கந்த மேவு கார்முகத் தோனே
- கருணா யாகிய சங்கரி மைந்தா
- முன்பு போலெனை அன்புவைத் தாளும்
- முள்ளிய வளை மூத்த நயிந்தை.
எனவும், வையாபாடலில்
- வணங்கி னோர்கள் தமைப்பார்த்து
- வாழ்வீ ரெஞ்ஞான் றும்மென்றே
- யிணங்கு தேவ வாத்தியங்க
- ளியம்ப வஞ்ச லீரென்று
- கணங்கள் முதல்வன் காட்டுவிநா
- யகமூர்த் தியொன்றைக் கரத்தீந்து
- குணங்க ளுடையீர் குலதெய்வம்
- கொண்டே செல்லீ ரெனவுரைத்தார் (64)
எனவும்
- கள்ளவிழு மலர்ச்சோலை தன்னி லெய்திக்
- காட்டுவிநா யகனைப்பூ சித்து வாழ்வோர்
- வள்ளல்தெச ரதக்குரவர் தாமும் வெள்ளைக்
- கையாச்சி யென்றுரைக்கும் மாது தானும்
- தள்ளரிய கோவியரி டம்போ னார்கள்
- தன்னிழலறு பதுபேர்சங் கூதி னோர்கள்
- வள்ளலடி பணிந்தருளு மிக்க முள்ளி
- மாநகர மீதிலிரு தருளி னாரால் (76)
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலயம் இன்று
இவ்வாலயம் இலங்கை இந்து கலாசார திணக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு இல:HA/5/MU/03.[1] வருடம்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று ஆலய மண்டபத்தில் கூட்டப்படும் பொதுக்கூட்டத்தின்மூலம் நிர்வாகசபை ஒன்று தெரிவுசெய்யப்பட்டு ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடைய இலக்கியங்கள்
- கதிரையப்பர் பள்ளு அல்லது கதிரைமலைப்பள்ளு
- வையாபாடல்
- முள்ளியவளைக் காட்டு விநாயகர் திருவூஞ்சல்