வற்றாப்பளை

வற்றாப்பளை என்பது இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஊர். இங்கு உள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் புகழ் பெற்றது. வன்னி நாட்டின் காவல் தெய்வமாகவும் தாய்த் தெய்வமாகவும் இந்த அம்மன் வழிபடப்படுகிறார். வைகாசி மாதத்தில் பூரணை நாளை அடுத்து வரும் திங்கள் நாளில் இங்கு நிகழும் பொங்கல் விழாவுக்கு ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வந்து கூடுவர்.

இந்தத் தலத்தின் வரலாற்று மரபின் படி கண்ணகி என்ற பத்தினித் தெய்வமே “கண்ணகை அம்மன்” ஆக வழிபடப்படுகிறார் என்ற நம்பிக்கை உள்ளது. இத் தெய்வத்தின் வரலாற்றைப் பேசும் ”சிலம்பு கூறல்” என்ற ஏட்டு இலக்கியம் பொங்கல் நாளில் இங்குப் படிக்கப்படும். இந்த இலக்கியத்தில் இடம்பெற்ற கதை அம்சம் தமிழகத்தின் சிலப்பதிகாரம் என்ற பேரிலக்கியத்தின் கதையம்சத்தோடு தொடர்புடையது.

”கண்ணகை அம்மன் பொங்கல்” என்ற நிகழ்வானது அயற்கிராமமான முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தோடு தொடர்புடையதாகும். வற்றாப்பளை அம்மன் பொங்கல் நிகழ்வதற்கு முன்னர் உள்ள ஏழு நாட்களும் காட்டு விநாயகர் ஆலயத்தில் இந்த அம்மனை ஸ்தாபித்து, அவருக்கு மடை மற்றும் பொங்கல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.

இப்பொங்கல் விழா நாட்களில் கடல்நீரில் விளக்கெரித்தல் (தீபம் ஏற்றல்) என்ற அற்புதம் நிகழ்த்தப்படுகிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.